வியாழன், 25 ஜூன், 2015

கட்சிப்பணி ஆற்றி வரும் தமிழக போலீஸ் / மக்கள் போலீஸ் !

Savukku · June 25, 2015ஓய்வு பெற்ற டிஜிபிக்களான நட்ராஜ் மற்றும் அலெக்சாண்டர் அதிமுகவில் சேர்ந்தபோது, அவர்கள் இருவரையும் எள்ளி நகையாடினார் ராமானுஜம். ஆனால், அவர்களாவது அதிமுகவில் சேர்ந்து கட்சிப்பணி ஆற்றுகின்றனர். ஆனால் இவர் அரசு அதிகாரியாக இருந்துகொண்டு, அவர்களைவிட விசுவாசமாக அதிமுக தொண்டர் போல பணியாற்றுகிறார். ராமானுஜத்துக்கு, அவர்கள் இருவருமே பரவாயில்லை
aaaராமானுஜம் 2012ல் டிஜிபியாக பதவி ஏற்றபோதே அதிகாரிகள் மத்தியில் முணுமுணுப்பு எழுந்தது. 60 வயதான ஒருவரை எப்படி டிஜிபியாக நியமிக்கலாம் என்று. ஆனால், டிஜிபியாக ஓய்வு பெற்ற பின்னும் அவரை டிஜிபிக்கு மேலாக ஒரு சூப்பர் டிஜிபியாக ஆலோசகர் பதவியில் நியமித்து இருப்பது சர்ச்சையையும் காவல் துறை அதிகாரிகள் மத்தியில் சுணக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது பல்வேறு தகவல்கள் தெரியவந்தன. நவம்பர் 2014ல் ராமானுஜம் ஓய்வுபெற்றதும், அஷோக்குமார் டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.   ஒரே வாரத்தில் ராமானுஜமும் ’ஆலோசகர்’ அந்தஸ்தில் வந்து விட்டார். அவருக்கு டிஜிபி அலுகலகத்தில் தனி அறை தரப்பட்டது.

கார்டனில் அவருக்குள்ள செல்வாக்கு அனைவருக்கும் தெரியும் என்பதால், புது டிஜிபி நியமிக்கப்பட்டாலும் ராமானுஜம்தான் முழு அதிகாரத்தோடு செயல்படுவார் என்று அப்போதே பேசப்பட்டது.   ஆறு மாதங்களாக நடக்கும் நிகழ்வுகள் அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் உள்ளன.
ஓய்வு பெற்ற அதிகாரிகளை ஆலோசகர்களாக நியமிப்பது புதிதல்ல.   பஞ்சாப், சத்தீஸ்கர் மாநிலங்களில் தீவிரவாதம் மற்றும் நக்சல் தொல்லையை ஒடுக்க கேபிஎஸ் கில், ரெபேரோ போன்றவர்கள் நியமிக்கப்பட்டனர். தமிழகத்தில் அதுபோன்ற அசாதாரணமான சூழல் இல்லாத. நிலையில் இவரை நியமிக்க என்ன அவசியம் என்பது யாருக்கும் புரியவில்லை. அவருக்கான பணிகள் என்னென்ன என்பதையே வரையறுக்காமல் விட்டிருப்பது இன்னும் பல கேள்விகளை எழுப்புகிறது.
ஆலோசகர்தான் என்றாலும் ராமானுஜம் டிஜிபி போலவே செயல்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். உயர் அதிகாரிகளின் நியமனத்தில் உள்துறை செயலர் எப்போதுமே டிஜிபியின் ஆலோசனையை கேட்டு செயல்படுவார். இப்போது அப்படி இல்லை. அனைத்து நியமனங்களும் ராமானுஜம் உத்தரவுப்படி நடக்கின்றன.   ஆறு மாதங்களாக எஸ்பி மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் நியமனம், மாற்றம் அனைத்தும் ராமானுஜம் பரிந்துரைப்படியே நடைபெற்றுள்ளன.
ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தவரையில் அவர் நடத்திய அனைத்து மீட்டிங்குகளிலும் ராமானுஜம் பங்கேற்றார்.   சென்னை வரும் வெளிநாட்டு தூதர்கள் சம்பிரதாயமாக பன்னீர்செல்வத்தை சந்தித்தபோதுகூட ராமானுஜம் உடனிருந்தார். இதெல்லாம்  பன்னீர் செல்வத்தை கண்காணிப்பில் வைத்திருப்பதற்கான ஏற்பாடு என கோட்டையில் வெளிப்படையாக பேச்சு ஓடியது.
சென்னை மாநகர கூடுதல் ஆணையராக இருந்த கருணாசாகர் சமீபத்தில் ஒரு ஆடம்பரமான பார்ட்டி நடத்தியதற்காக மாற்றப் பட்டார். அந்த இடத்துக்கு விஏ.ரவிக்குமார் நியமிக்கப்பட்டார். இவர் காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு தலைவராக இருந்தார். ராமானுஜம் பரிந்துரைப்படி சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தன்னைப் பற்றி தவறான தகவல்களை உளவுத் துறை அளித்துள்ளதாகவும், ஒரு வருடத்தில் ஓய்வுபெற உள்ளதா லும், மகளுக்கு திருமணம் செய்ய உள்ளதாலும் தன்னை சென்னை மாநகரில் நல்ல பதவியில் அமர்த்துமாறு ராமானுஜத்திடம் கேட்டு,  அதன்படியே அவ்வாறு பணியமர்த்தப்பட்டார் என்பது காவல்துறை யில் உலா வரும் கதை. இதேபோல சேலம் மாவட்ட காவல் கண் காணிப்பாளராக இருந்த சக்திவேலை மாற்றி, சுப்புலட்சுமியை நியமித்ததும் ராமானுஜம் பரிந்துரையின் அடிப்படையிலேயே.
இப்படி ராமானுஜம் ஒவ்வொருவருக்கும் நியமனம் பெற்றுத் தருவதால், அவ்வாறு நியமிக்கப்படும் அதிகாரிகள் அவருக்கு விசுவாசமாக இருக்கிறார்களே தவிர   டிஜிபி அஷோக்குமாரை மதிப்பது இல்லை என்று கூறப்படுகிறது.
தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் அளிப்பதற்காக உளவுத்துறை மற்றும் இதர காவல்துறை பிரிவுகளுக்கு வழங்கப்படும் ரகசிய நிதியை ராமானுஜம் உபயோகிப்பதில்லை. ஆனால், அவருக்கென்று தனியாக ரகசிய நிதி ஒதுக்கப்படுகிறது. காவல்துறை அதிகாரிகளால் மட்டுமே கையாள வேண்டிய, ரகசிய நிதியை, ஓய்வுபெற்ற அதிகாரி மூலமாக செலவிடுவதே சட்டவிரோதம் என்கின்றனர்.
மேலும், முதல்வருக்கு உளவுத்துறை அனுப்பும் ரகசிய அறிக்கைகள் தவிர, ராமானுஜமும் தனியாக ஒரு உளவு அறிக்கை அனுப்புகிறார்.   அந்த அறிக்கையில் டிஜிபி அஷோக்குமாரைப் பற்றியும் தகவல்கள் அனுப்பப்படுகிறது.
இதுதவிர, தீவிரவாதிகள் மற்றும் முக்கிய நபர்களின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு அறிக்கைகளும் ராமானுஜத்திடம் செல்கின்றன.   தொலைபேசியை எப்படி ஒட்டுக் கேட்கலாம் என்ற தெளிவான விதிகளை உச்ச நீதிமன்றம் உருவாக்கியுள்ளது. உள்துறை செயலாளரின் முன் அனுமதி பெற்றுதான் யாருடைய தொலைபேசியையும் ஒட்டுக்கேட்க முடியும்.   ஆனால் தமிழகத்தில் ஓய்வுபெற்ற அதிகாரியான ராமானுஜம், இந்த அறிக்கைகளை பார்வையிட முடிகிறது. இதுவும் சட்டவிரோதம் என்கிறார்கள்.
????????????????????????????????????
போயஸ் தோட்டத்தில் ராமானுஜம்.
இதைத் தவிர்த்து, காவல்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் பல்வேறு மாற்றங்களை செய்ய ராமானுஜம் உத்தரவிடுகிறார். நிறைவேற்ற ஒரு வாரம் பிடிக்கக்கூடிய உத்தரவுகளைக்கூட ஒரே நாளில் நிறைவேற்ற சொல்கிறார். அஷோக்குமாருக்கு எழுத்து பூர்வமான உத்தரவுகளையும் பிறப்பிக்கிறார் என்கிறார்கள்.
இரண்டு கான்ஸ்டபிள்கள் மற்றும் ஒரு உதவியாளரை வைத்து வேலை செய்யும் ராமானுஜம், தனக்கென்று ஒரு லாபியை உருவாக்கி உள்ளார். சில முக்கியமான அறிக்கைகளை, லஞ்ச ஒழிப்புத் துறையில் வேலை செய்து ஓய்வுபெற்ற ஒரு பெண் ஊழியரை வைத்து தயார் செய்கிறார்.
சமீபத்தில் இளைஞர் காவல்படையை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணி நிரந்தரம் கோரி வேலைநிறுத்தம் செய்தனர். ஒரு ஆண்டில் பணி நிரந்தரம் செய்யப்படும்; அனைவரும், முழு நேர காவலர்களாக மாற்றப்படுவார்கள் என்று கூறிதான் நியமனம் நடந்தது. ஆனால், ஒன்றரை ஆண்டுகள் கழித்தும், பணி நிரந்தரம் நடைபெறவில்லை.   இந்த குளறுபடிக்கும் ராமானுஜமே காரணம் என்கின்றனர்.
ஆனால் ராமானுஜம் தரப்பிலோ, ’முதலமைச்சருக்கு எந்த அதிகாரியையும் நியமிக்கும் அதிகாரம் உள்ளது. முதல்வருக்கு அவர் மீது முழு நம்பிக்கை இருக்கிறது அதனால் நியமித்துள்ளார்.   இதில் என்ன தவறு?’ என்று கேட்கிறார்கள். மேலும், தேர்தல் அலசலில் நிபுணர் என்பதால், அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.   மூன்று ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவரை மேலும் ஒரு ஆண்டுக்கு நியமித்ததில் எந்த தவறும் இல்லை என்கின்றனர்.
அஷோக் குமார் தரப்பில், ’மூன்றே முக்கால் ஆண்டுகள் டிஜிபியாக இருந்தபோது அவராலேயே செய்ய முடியாத வேலைகளை ஒரே நாளில் முடிக்க புது டிஜிபிக்கு உத்தரவிடுவது எந்த வகையில் நியாயம்? பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கோப்புகளை அஷோக் குமார்தான் பைசல் செய்திருக்கிறார். ஓய்வூதியம் வாங்காமல் தவித்த காவலர்களின் கோப்புகளைக்கூட ராமானுஜம் கண்டுகொள்ளவே இல்லை’ என்கின்றனர்.
எது எது எப்படியோ…. தமிழக காவல்துறை அதிகாரிகள், நமக்கு யார் பாஸ் என்பது புரியாத ஒரு குழப்பமான சூழ்நிலையில் இருக்கிறார்கள். ’இவரைப் பார்த்தால் அவர் கோபித்துக் கொள்வார், அவரைப் பார்த்தால் இவர் கோபித்துக் கொள்ளுவார். நாங்கள் யார் சொல்படி நடப்பது என்பதே புரியவில்லை. இப்படி ஒரு மோசமான சிக்கலை, தமிழகம் இதுவரை சந்தித்ததேயில்லை’ என்று கூறுகின்றனர்.
ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரி இது குறித்து பேசுகையில், “ஓய்வு பெற்ற டிஜிபிக்களான நட்ராஜ் மற்றும் அலெக்சாண்டர் அதிமுகவில் சேர்ந்தபோது, அவர்கள் இருவரையும் எள்ளி நகையாடினார் ராமானுஜம். ஆனால், அவர்களாவது அதிமுகவில் சேர்ந்து கட்சிப்பணி ஆற்றுகின்றனர். ஆனால் இவர் அரசு அதிகாரியாக இருந்துகொண்டு, அவர்களைவிட விசுவாசமாக அதிமுக தொண்டர் போல பணியாற்றுகிறார். ராமானுஜத்துக்கு, அவர்கள் இருவருமே பரவாயில்லை” என்று கூறினார்.
’ஷீலா பாலகிருஷ்ணன், சட்டப்பேரவை செயலர் ஜமாலுதீன், ராமானுஜம், மின் வாரியத்தில் கணபதி சங்கரன் என்று பல்வேறு ஓய்வுபெற்ற அதிகாரிகளை வைத்து நடக்கும் இந்த ஆட்சி, கிட்டத்தட்ட முதியோர் இல்ல ஆட்சி போலவே காட்சியளிக்கிறது’ என்கிறார் இன்னொரு அதிகாரி.
மற்றொரு ஐபிஎஸ் அதிகாரி, “ராமானுஜம் இப்படி மாறுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஊழல் அதிகாரிகள் பணத்துக்காக எதுவும் செய்வார்கள். ஆனால் ராமானுஜம், ஊழல் பேர்வழியும் அல்ல. எதற்காக இப்படி பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறார் என்பதுதான் புரியவில்லை” என்று அலுத்துக்கொண்டார்.
ஸ்காட்லாண்ட் யார்டுக்கு இணையான காவல்துறை என்று பெயரெடுத்த தமிழக காவல்துறை தற்போது “ஓல்டுமேன் யார்டாக” மாறியதுதான் மிச்சம்.

கருத்துகள் இல்லை: