வியாழன், 23 ஜூலை, 2015

வணக்கம் :தமிழகத்தில் மதுவை ஒழிப்பேன் ; திருச்சி கூட்டத்தில் ராகுல் பேச்சு! ராகுல்

கொட்டும் மழையில் ராகுல் பேசுகையில்;நல்ல மழை நல்ல அறிகுறி என்றார். திருச்சி கூட்டத்தில் தமிழில் வணக்கம் சொன்ன ராகுல் , தொடர்ந்து பேசுகையில் ; கொட்டும் மழையிலும், கலையாமல் இருப்பதற்கு நான் உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.தமிழகத்திற்கு காமராஜர் பெரும் துணையாக இருந்தார். காமராஜர் குறித்து ஒரு கதை எனக்கு நினைவுக்கு வருகிறது. காட்டுக்கு போய் வா என்று இளவரசரை அரசர் அனுப்பி வைத்தார். அங்கு என்ன பார்த்தாய் என்று அரசன் கேட்டார். அங்கு காட்டு விலங்குகள் சப்தம் போட்டதை கேட்டேன் என்றார். இன்னும் முழுமையாக எதையும் கேட்கவில்லை. இன்னொரு முறை காட்டக்கு போ என்று அனுப்பி வைத்தார். ஒரு மரத்தடியில் அமர்ந்து கவனித்தார். இயற்கை ஓசை காதில் விழுந்தது. அரசன் மீண்டும் என்ன சப்தம் கேட்டது என்று மீண்டும் கேட்டார். நான் கூர்ந்து மென்மையான ஓசை கேட்டேன், சூரிய கதிர்கள் விழுந்த சப்தம் கேட்டேன். புல் தண்ணீர் குடிக்கும் சப்தம் கேட்டேன் என்றார்.


இளவரசன் திரும்பி வந்ததும், இது போல் எல்லா பகுதிகளிலும் இருந்து வரும் சப்தத்தை கேட்க வேண்டும் என்று அரசன் சொன்னார். இது தான் மன்னனுக்கு அழகு என்று சொன்னார். ஒரு ஆட்சியாளருக்கு எல்லோருடைய குரலையும் கேட்கும் விதமாக இருக்க வேண்டும். இதற்கு காமராஜர் எடுத்துக்காட்டாக இருந்தார் . இதனால் நான் அவரை மதிக்கிறேன். வறுமை ஒழிப்புக்கு கல்வியால் தான் முடியும் என கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்றார். பள்ளிகள் அதிகம் திறந்தும் யாரும் போகவில்லை. இதற்கு காரணம் கேட்ட போது பள்ளிகள் தொலைவு காரணம் என்றனர். இதனால் நகரம், கிராமம் முதல் பல பள்ளிகள் கட்டினார். இப்படி யிருந்தும் பள்ளிக்கு வருகை குறைந்தது. உணவுக்கு வழி இல்லை என்று கூறப்பட்டது. உடனே பள்ளிகளில் சாப்பாடு போட்டவர். 

கல்வி வளம் பெற நாட்டு மக்கள் வளம் பெற்றனர். மக்களின் எண்ணங்களை பிரதிபலித்தவர் காமராஜர். 50 ஆண்டுகளுக்கு முன்னாள் காமராஜர் செய்து வந்தார். ஆனால் இன்று மக்களின் குரலுக்கு யாரும் செவி சாய்ப்பதில்லை. பிரதமரும் ல பல முதல்வர்களும் மக்களை புறக்கணித்து வருகின்றனர். ஆட்சியில் இருக்கும் போது மக்களுக்கு பணி செய்ய வேண்டும். 

தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இதுவே குடும்ப வளர்ச்சிக்கு உதவும். தமிழக அரசியல் கட்சிகள் மக்களின் நலனுக்கு பாடுபடவில்லை. யாருக்கும் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். 

மது மூலம் தமிழகத்தில் கடந்த ஆண்டு 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதன்மூலம் ஒவ்வொருவரின பாக்கெட்டில் இருந்து ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் அரசுக்கு செல்கிறது. ஒருவன் குடியில் விழுந்தால் அந்த குடும்பமே பாதிக்கப்படுகிறது. மது பிரச்னையால் பெண்கள் பெரும் கஷ்டப்படுகின்றனர். தமிழகத்தில் பல குடும்பம் நாசமடைந்துள்ளது. தமிழக மக்களின் பிரச்னை எனக்கு தெரியும். நீங்கள் படும் கஷ்டத்தை நான் உணர்ந்திருக்கிறேன். இந்த துயரத்தை நான் போக்குவேன். 

இவ்வாறு ராகுல் பேசினார்.



திருச்சி; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், திருச்சி, பொன்மலையில் உள்ள ஜி கார்னர் மைதானத்தில், நடக்கிறது. இந்த கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கலந்து கொண்டு பேசினார்.

ராகுல், திருச்சி வருகையை முன்னிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர் தலைமையில், 2,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதற்காக, திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள, எட்டு மாவட்டங்களில் இருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி டி.ஐ.ஜி., செந்தாமரைக்கண்ணன், எஸ்.பி.,க்கள் நாகை அபினவ்குமார், புதுக்கோட்டை உமா, பெரம்பலூர் சோனால்சந்திரா, அரியலூர் ஜியாவுல்ஹக், கரூர் நிர்மல்குமார் ஜோஷி ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். திருச்சி விமான நிலையம் முதல் பொதுக்கூட்ட மேடை வரை, 6 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட உள்ளது. மேடையை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. ராகுல் வரும் பாதையில், பைனாகுலர் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேடையில், மெட்டல் டிடெக்டர்கள் வைக்கப்பட்டு, அதன் வழியாகவே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். மேடை முழுவதும், நேற்று வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். வெளியூர்களில் இருந்து வரும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்த, பல்வேறு இடங்களில், மாவட்டம் வாரியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், நெம்பர் 1 டோல்கேட், வழியாக முத்துமணி டவுன், வாஸ் நகர் வந்து அப்பல்லோ மருத்துவமனை அருகிலுள்ள ஆர்.வி., மைதானத்திலும், விஸ்வாஸ் நகர், சஞ்சீவ் நகர் ஆகிய இடங்களிலும் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே போல், சேலம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், பால்பண்ணை பகுதியில் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை, கரூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், குடமுருட்டி செக்போஸ்ட், அண்ணா சிலை, மாம்பழச்சாலை, கே.கே.சாலை, பைபாஸ் ஜங்சன், கொண்டையம்பேட்டை ஆகிய இடங்களில் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தஞ்சை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், பொன்மலை சந்தை பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்த வேண்டும். புதுக்கோட்டையில் இருந்து வரும் வாகனங்கள், பொன்மலைப்பட்டி வழியாக பொன்மலை பகுதியில் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியினர், திருச்சி நகரப்பகுதியிலும், விமான நிலையத்தில் இருந்து, ராகுல், பொதுக் கூட்ட மேடைக்கு வரும் வழியிலும், கொடிகள் கட்டி, பெரிய அளவிலான பேனர்கள் வைத்துள்ளனர்.
தினமலர்.com  

கருத்துகள் இல்லை: