வியாழன், 20 ஆகஸ்ட், 2015

தென்கொரிய - வட கொரிய எல்லையில் மோதல் ! எல்லை பகுதி மக்கள் ஊரை காலிபண்ணுகிறார்கள்

தென்கொரியாவின் மேற்குப் பகுதியில் குடியிருப்பவர்கள், அங்கிருந்து வெளியேறும்படி அந்நாடு கூறியுள்ளது. வட கொரியாவுடன் ராணுவ மோதல் துவங்கியதையடுத்து, இந்த நடவடிக்கையை தென் கொரியா மேற்கொண்டுள்ளது. வடகொரியாவின் ராக்கெட் தாக்குதலுக்கு தென்கொரியா பதிலடி கொடுத்துள்ளது. தென் கொரியாவிலிருக்கும் ராணுவப் பிரிவின் மீது வட கொரியா வியாழக் கிழமையன்று ராக்கெட் வீசித் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, தென்கொரியாவும் பதில் தாக்குதல்களை நடத்தியது என தென் கொரியா தெரிவித்துள்ளது.
விரைவில் தென் கொரியாவின் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூடி இது தொடர்பாக விவாதிக்கவுள்ளது.
சியோலுக்கு வட மேற்கில் இருக்கும் யியோன்சியோன் பகுதியின் மீது உள்ளூர் நேரப்படி மாலை நான்கு மணியளவில் வடகொரியா தாக்குதல் நடத்தியது.

வடகொரிய அரசுக்கு எதிரான செய்திகளை ஒலிபரப்பிவரும் ஒலிபெருக்கிகளைக் குறிவைத்து இந்தத் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளும் தங்கள் எல்லையில் ஒலிபெருக்கிகளைப் பொருத்தி, மற்றொரு நாட்டுக்கு எதிரான பிரச்சாரங்களைச் செய்து வருகின்றன. இதையடுத்து ராக்கெட் ஏவப்பட்ட பகுதியை நோக்கி தென்கொரியாவும் தாக்குதல் நடத்தியது.
இரு தரப்பிலும் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் 1950-53ல் நடந்த யுத்தத்தில் அமைதி உடன்படிக்கை ஏதும் ஏற்படவில்லை. போர் நிறுத்தம் மட்டுமே செய்துகொள்ளப்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் வெடிப்பது வாடிக்கையாக இருந்துவருகிறது.
யியோன்சியோனில் வசித்துவந்த 80 பேர் வெளியேற்றப்பட்டிருப்பதாக ஏபி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. அப்பகுதியில் வசிக்கும் பிறரும் வெளியேற வலியுறுத்தப்பட்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இம்மாதத் துவக்கத்தில் நிலக் கண்ணிவெடியில் சிக்கி, இரு தென்கொரிய வீரர்கள் காயமடைந்தனர். இந்த கண்ணிவெடியை வைத்தாக வடகொரியா மீது தென் கொரியா குற்றம்சாட்டிவருகிறது.
அப்போது முதல் இரு நாடுகளும் தங்களது எல்லைப் பகுதியில் ஒலிபெருக்கிகளைப் பொருத்தி, மற்றொரு நாட்டுக்கு எதிரான பிரச்சாரங்களைச் செய்துவருகின்றன.
தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து ராணுவ ஒத்திகையை திங்கட்கிழமை முதல் மேற்கொண்டு வருகின்றன. பாதுகாப்பிற்காகவே இந்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தென் கொரியா தெரிவித்தாலும், ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் இந்த ஒத்திகை நடப்பதாக வட கொரியா தெரிவித்துள்ளது. bbc,tamil.com

கருத்துகள் இல்லை: