திங்கள், 17 ஆகஸ்ட், 2015

அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் வாய்ப்பு கிடைத்தும் வசதியின்மையால் தவிக்கும் மாணவர்; கூலி வேலைக்கு செல்கிறார்..

தொடர்பு எண்: 90478 48635.
புதுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியில் பயின்று, அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்புக் கிடைத்தும் வசதியின்மையால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியாமல் தவிக்கிறார் ஏழை மாணவர் தினேஷ்குமார். புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுண்டாங்கிவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி(55). தள்ளுவண்டி தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா(48). தென்னங்கீற்றுமுடையும் தொழிலாளி. இவர்களுக்கு மகள்கள் ரம்யா, தீபா ஆகியோரும், மகன் தினேஷ்குமாரும் உள்ளனர். இதில், ரம்யா அங்குள்ள வங்கியில் ரூ.1 லட்சம் கடன் பெற்று, பொறியியல் படித்துள்ளார். தீபா அரசுக் கல்லூரியில் செவிலியர் படிப்பு படித்துள்ளார்.

கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற தினேஷ்குமார், பிளஸ் 2 தேர்வில் 1,123 மதிப்பெண் பெற்றுள்ளார். 196.5 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற இவருக்கு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்புக் கிடைத்துள்ளது. எனினும், கல்விக் கட்டணம் செலுத்த வசதி இல்லாததால், மருத்துவம் பயில முடியாத நிலை ஏற்படுமோ என்று தினேஷ்குமாரின் குடும்பத்தினர் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து சகுந்தலா கூறும்போது, "நானும், கணவரும் படிக்காதவர்கள். எனவே, தினமும் கூலி வேலைசெய்து குழந்தைகளைப் படிக்க வைத்துள்ளோம். மூத்த மகள் ரம்யாவுக்கு வங்கியில் வாங்கிய ரூ.1 லட்சம் கல்விக் கடனுக்கு வட்டிகூட செலுத்த முடியவில்லை.
மகனுக்கு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தாலும், சேர்க்கைக் கட்டணம் செலுத்தவே சிரமப்பட்டோம். பின்னர், சுயஉதவிக் குழுவில் ரூ.42,000 பணம் வாங்கி கல்லூரியில் செலுத்தினோம்.
ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டிகூட செலுத்த முடியாததால், மகனுக்கு கல்விக் கடன் கோரி வங்கியை நாடவில்லை. ஏதாவது சொல்வார்களோ என்று பயமாக உள்ளது. வெளி நபர்களிடம் கடன் வாங்கும் அளவுக்கு தகுதியும் இல்லை. எங்கள் மகனும் எங்களுடன் கூலி வேலைக்கு வருகிறான். யாரேனும் உதவினால் தினேஷ்குமார் எம்பிபிஎஸ் படிக்கலாம். இல்லையெனில், கல்லூரிக்கு அனுப்புவது சிரமம்தான்" என்றார்.
மாணவர் தினேஷ்குமார் கூறும்போது, "டாக்டருக்குப் படிக்க வேண்டுமென்பதே எனது லட்சியம். பெற்றோரால் தேவையான பணத்தை ஏற்பாடு செய்ய முடியாது.

அதனால் செய்வதறியாது தவிக்கிறேன். அடுத்த மாதம் 1-ம் தேதி கல்லூரிக்குச் செல்ல வேண்டும். வரும்போது ரூ.5,000 கொண்டு வருமாறு கல்லூரியில் கூறியுள்ளனர். அதனால், நான் தினமும் கூலி வேலைக்குச் செல்கிறேன்" என்றார். இவரது தொடர்பு எண்: 90478 48635.  /tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: