வியாழன், 26 மே, 2016

ஆந்திரா கோயில்களின் வருவாய் 27% அதிகரித்துள்ளது... சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் உள்ள கோயில்களின் வருவாய் 27% அதிகரித்துள்ளது. இதற்கு ‘பாவம் செய்பவர்கள் அதிரித்துள்ளதே காரணம்’ என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நகைச்சுவை தொனியுடன் விளக்கம் அளித்துள்ளார். இன்று விஜய்வாடாவில் தொடங்கிய 2 நாள் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் துவக்க உரையாற்றிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நகைச்சுவை உணர்வுடன் கூறும்போது, “மக்களில் பலர் நிறைய பாவங்கள் செய்கின்றனர், பாவத்திலிருந்து விடுபட கோயில்களுக்குச் சென்று காணிக்கை செலுத்துகின்றனர். இதனால் கோயில்களின் வருமானம் அதிகரித்துள்ளது. ஆனால் அதே வேளையில் பலர் சபரிமலைக்கு மாலையிட்டுக் கொண்டு மது அருந்துவதை நிறுத்தி விடுகின்றனர், அதாவது 40 நாட்களுக்கு மதுவை ஒழித்து விடுகின்றனர். இதனால் நம் மதுவிற்பனை குறைந்துள்ளது” என்றார்.
மாவட்ட ஆட்சியாளர்களிடையே போட்டி நிலவ வேண்டுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த நாயுடு, “உங்கள் கவனம் முழுதும் அனைத்தையும் உள்ளடக்கிய, சமச்சீரான வளர்ச்சியில் இருக்க வேண்டும். அதே போல் சேவையில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் 80% திருப்தி நிலையை அவர்களுக்கு அளிக்க வேண்டும். உங்கள் சேவையின் அளவும் மக்களின் திருப்தியும் சம அளவில் இருந்தால்தான் நீங்கள் உங்கள் கடமையை சரியாக ஆற்றுவதாக பொருள்” என்றார்  tamil.thehindu,com

கருத்துகள் இல்லை: