வெள்ளி, 17 ஜூன், 2016

ஸ்டாலின் : அம்மா அம்மா என்று அம்மா பட்டியல்..

அம்மா, அம்மா, அம்மா என்று அம்மா திட்டங்கள் பற்றி ஒரு பெரிய பட்டியல் ஆளுநர் உரையில் வெளியிடப்பட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக ஆளுநர் உரை குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் ஆளுநர் உரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆளுநர் உரையை பொறுத்த வரையில் இது அரசினுடைய உரைதான் என்பது வெளிப்படுகிறது. இந்த அரசு என்னென்ன ஆசைப்படுகிறதோ அதையெல்லாம் ஆளுநர் உரையிலே எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். எடுத்து சொல்லி இருக்கிற அதே நேரத்தில் அதை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து எந்த விவரமும், எந்த விளக்கமும் அதில் இடம்பெறவில்லை.


அம்மா சென்டர் முதல் அரசு கேபிள் வரை, அம்மா குடிநீர் முதல் அம்மா மருந்து வரை, அம்மா உப்பு திட்டம் முதல் அம்மா சிமெண்ட் வரை இப்படி அம்மா திட்டங்களை பற்றி ஒரு பெரிய பட்டியல் இந்த ஆளுநர் உரையில் வெளியிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற கம்பெனிகள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட போவதாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த இரண்டு தொழிற்சாலைகளும் இங்கிருந்து செல்ல காரணமாக இருந்த ஆட்சிதான் இது என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். ஆகவே, தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பதுபோல் இந்த ஆளுநர் உரை இடம் பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்ல, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் ரத்தாவதற்கு காரணமான ஆட்சி இந்த ஆட்சி. ஆனால் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தமிழகத்திற்கு பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவோம் என்று அறிவிப்பு வெளியிட்டிருப்பது விந்தையிலும் விந்தையாக இந்த ஆளுநர் உரை இடம் பெற்றிருக்கிறது. ஆக, மக்களுடைய பிரச்னைகளை பற்றி, அந்த பிரச்னைகளுக்கு உரிய பரிகாரம் தேடும் வகையில் எந்தவித கொள்கை அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை என்பது வேதனையாக உள்ளது.

சட்டமன்றத்தை பொறுத்தவரை ஆளுநர் உரை வழக்கமான ஒன்றுதான். அதுபோல் இந்த ஆட்சியிலேயே வழக்கமாக பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருப்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை. மொத்தத்தில் ஆளுநர் உரையை பற்றி சொல்ல வேண்டுமானால் 'அம்மா கால அட்டவணை' அம்மா காலண்டர் என்று சொல்வார்களே அதுபோலத்தான் இந்த ஆளுநர் உரை. ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிற காரியங்கள், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிற திட்டங்கள் அதுதான் இந்த ஆளுநர் உரையில் இடம் பெற்றிருக்கிறது" என்று கூறினார்.

சட்டமன்றத்த்தில் கருணாநிதிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருப்பதை பற்றி கேட்கிறீர்கள். அதாவது, நியாயமாய், முறையாய், முன்னாள் அமைச்சர்கள், ஏற்கனவே சட்டமன்றத்தில் பணியாற்றி இருக்கக் கூடியவர்கள். அவர்களுக்குரிய இடங்கள் ஒதுக்கப்பட்டு பின்னர் புதிய உறுப்பினர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படுவதுதான் மரபு. ஆனால் அந்த முறை கடைபிடிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, தலைவர் கலைஞர் சபைக்கு வந்து கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் வந்து செல்லக்கூடிய வசதியாக ஏற்பாடு செய்து தரும்படி ஏற்கனவே சபாநாயகரிடம் முறையாக கடிதம் கொடுத்திருக்கிறோம். ஆனால் இன்றைக்கு கலைஞருக்கு ஒதுக்கியிருக்கிற இடத்தை பார்த்தால் அவர் வசதியாக வந்து செல்ல முடியாத வகையில்தான் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது" என்றார் ஸ்டாலின்.  விகடன்.com