ஞாயிறு, 17 ஜூலை, 2016

உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டி... கலைஞர் ஸ்டாலின் கருத்து மோதல் அல்லது தகராறு?

உள்ளாட்சி தேர்தலில், தனித்து போட்டியிடுவது குறித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் இடையே கருத்து மோதல் ஏற்பட்டிருப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறின. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்விக்கு, காங்கிரசுக்கு கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கியது தான் காரணம் என, தி.மு.க., செயற்குழுவிலேயே பலரும் குமுறினர். காங்கிரசை கூட்டணியில் சேர்த்திருக்கவே கூடாது என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.
இதனால், வரும் அக்டோபரில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., தனித்தே போட்டியிட வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வருகிறது. தான் செல்லும் இடங்களில் எல்லாம், இந்த கருத்தை, கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.  முதல்ல காங்கிரஸ்  கோஷ்டிகள் எல்லாம் சேர்ந்தே நிற்கின்றனவா அல்லது  தனித்தனியாக நிற்கின்றனவா என்பதை அறியவேண்டும்... இல்லையேல் ஏராளமான உள்குத்துக்கள் காலை வாரிவிடும்   ஆபத்து உண்டு

ஆனால், உள்ளாட்சி தேர்தல் என்றாலும், தென் மாவட்டங்களில், காங்கிரஸ் தயவு தேவைஎன்பதால், அக்கட்சியுடன் கூட்டணி தொடர வேண்டும் என, கருணாநிதி விரும்புகிறார்.
இப்படி, உள்ளாட்சி தேர்தல் கூட்டணி தொடர்பாக, தந்தை, மகன் இடையே மாறுபட்ட கருத்தால், கட்சியினர் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், உள்ளாட்சி தேர்தலுக்கு முன், மாவட்ட செயலர்கள் கூட்டத்தை கூட்டி விவாதித்து, அதன்பின், கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க கருணாநிதி திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து, தி.மு.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள, 12 மாநகராட்சிகளில், எட்டுமாநகராட்சிகளில் தி.மு.க., பலமாக உள்ளது. அதனால், தனித்தே போட்டியிட்டு, அவற்றை பிடிக்க, தி.மு.க., கருதுகிறது. காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி சண்டை உச்சத்தில் இருப்பதால், அது உள்ளாட்சி தேர்தலிலும் எதிரொலிக்கும். பாதிப்பு, கூட்டணி சேரும் கட்சிக்கும் இருக்கும் என்பதால், காங்கிரசோடு கூட்டணி சேர, தி.மு.க.,வில் பலரும் விரும்பவில்லை.
அப்படியே, தென் மாவட்டங்களில், உள்ளாட்சிகளின் கீழ் அடுக்குகளில் காங்கிரஸ் ஆதரவு வேண்டும் என்றால், கீழ் அடுக்குகளில் மட்டும் காங்கிரசோடு கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திக்கலாம் என்றும் சிலர் யோசனை சொல்கின்றனர். இருந்தாலும், இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட செயலர்கள் கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.
- நமது நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை: