ஞாயிறு, 17 ஜூலை, 2016

கோயம்பேடு - ஷெனாய்நகர் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்

சென்னை, கோயம்பேடு - ஷெனாய்நகர் இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் முதன்முறையாக நேற்று நடந்தது. பணிகள் திருப்திகரமாக இருப்பதாக அதிகாரிகள் கூறினர். மெட்ரோ ரெயில் சேவை சென்னையில் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரை 22.50 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகிறது. இதில் முதல்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரம் பறக்கும் பாதையில் பணிகள் நிறைவடைந்து மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது   திமுகவின்  சேது சமுத்திர கால்வைக்கும் மதுரவாயில் பறக்கும் சாலைக்கும் நேர்ந்த ஜெயலலிதா விபத்து மெட்ரோ ரயிலுக்கு நிகழாதது அதிசயம்தான் 

கோயம்பேடு - ஷெனாய்நகர் தொடர்ந்து முதல் வழித்தடத்தில் உள்ள கோயம்பேடு - திருமங்கலம் - அண்ணாநகர் கிழக்கு - அண்ணாநகர் டவர்- ஷெனாய்நகர் - பச்சையப்பன் கல்லூரி - கீழ்ப்பாக்கம் - நேரு பூங்கா - எழும்பூர் வரை சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் திருமங்கலத்தில் இருந்து எழும்பூர் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குனர்கள் மற்றும் பொறியாளர்கள் நேற்று கோயம்பேட்டில் இருந்து ஷெனாய் நகர் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதன்முறையாக சோதனை ஓட்டம் நடத்தினர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

சோதனை ஓட்டம்

திருமங்கலம் - எழும்பூர் இடையே (7 ரெயில் நிலையங்கள் உள்பட) 7,795 மீட்டர் நீள சுரங்கப்பாதை பணிகள் முடிந்துள்ளது. பாதுகாப்பு ஆணையர் ஆய்வுக்காக இந்தப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள பணிகள் குறித்த விவரங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. ஓரிரு வாரங்களில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தி சான்று வழங்குவார்.
கோயம்பேடு முதல் திருமங்கலம் வரை ஒரு கிலோ மீட்டர் பறக்கும் பாதையிலும், திருமங்கலம் முதல் ஷெனாய் நகர் வரை (5 ரெயில் நிலையங்கள் உள்பட) 4 கிலோ மீட்டர் சுரங்கப்பாதையிலும் நிறைவடைந்த பணிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தப்பாதையில் நேற்று காலை 8½ மணி முதல் பகல் 11 மணி வரை மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

பாதுகாப்பு வழிகள்

இந்த சோதனையில் பிளாட்பாரத்திற்கும் ரெயில் நிற்கும் பகுதிக்கும் போதிய இடைவெளி உள்ளதா? மின்சாதனங்கள், மின்னணு சாதனங்கள் பாதுகாப்பாக உள்ளதா? பாதுகாப்பு வழிகள் போதுமானதாக உள்ளதா? சுரங்கத்தில் செல்லும்போது ரெயிலில் இருந்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முடிகிறதா? சிக்னல்கள் சரியாக செயல்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது. ஒரு ரெயில் நிலையத்தில் இருந்து அடுத்த ரெயில் நிலையத்தை சென்றடைய எடுத்துக்கொள்ளும் நேரம்? கணக்கிடப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் திருப்திகரமாக இருந்தது.

ஷெனாய்நகர்- எழும்பூர்

இந்தப்பாதையில் உள்ள ரெயில் நிலையங்களில் கட்டுமானப்பணிகள் முற்றிலும் முடிவடைந்து விட்டன. தொடர்ந்து பிளாட்பாரம், தரைதளங்கள் மற்றும் கதவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இந்த சோதனை நடைபெறும். ஷெனாய் நகர் - பச்சையப்பன் கல்லூரி - நேரு பூங்கா - எழும்பூர் இடையே ஒரு சில பணிகள் நிறைவடையவில்லை. அந்தப்பணிகள் நிறைவடைந்த உடன் அந்தப் பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய உடன் மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்பேரில் ஆலந்தூர் - எழும்பூர் இடையே மெட்ரோ ரெயில் இயக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆலந்தூர் - விமானநிலையம்

ஆலந்தூர் - விமானநிலையம் இடையே 5.5 கிலோ மீட்டர் தூரம் பறக்கும் பாதையிலும் பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இந்தப்பாதையில் உள்ள நங்கநல்லூர் ரோடு, மீனம்பாக்கம், விமானநிலையம் ஆகிய ரெயில் நிலையங்களுக்கான கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து உள்ளன. விரைவில் இந்தப்பாதையிலும் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய உள்ளார்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்  dailythanthi.com

கருத்துகள் இல்லை: