வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

சாதாரண பள்ளி ஆசிரியர் 15 ஆயிரம் கோடி சொத்துகளுக்கு அதிபதியானது எப்படி?

thetimestamil.com
வேந்தர் மூவிஸ் மதன் காணாமல் போன விவகாரத்தில், எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் தாண்டவராயபுரத்தில் பிறந்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தரான பச்சமுத்து, 1969-ம் ஆண்டு சென்னையில் பிளாரண்ஸ் நைட்டிங்கேல் என்ற பெயரில் தொடக்கப் பள்ளியை தொடங்கினார்.
ஐந்தாம் வகுப்பு வரை இருந்த அந்த பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக மாற்ற 12 ஆண்டுகள் ஆனது. ஆனால் அடுத்த 20 ஆண்டுகளில் 30-க்கும் அதிகமான கல்வி நிறுவனங்களைத் தொடங்க எஸ்.ஆர்.எம். குழுமத்திற்கு எங்கிருந்து பணம் வந்தது? என கேள்வி எழுப்புகிறது நியூஸ் 7 தொலைக்காட்சியின் இணையதளத்தில் வெளியான கட்டுரை. கட்டுரையிலிருந்து …

கல்வி நிறுவனங்கள் மட்டுமன்றி பிற நிறுவனங்களையும் எஸ்.ஆர்.எம். குழுமம் நடத்தி வருகிறது. அதில் எஸ்.ஆர்.எம் டிராஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன.
அதுமட்டுமல்லாமல், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், ஊடகங்கள் உள்பட தற்போது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எஸ்.ஆர்.எம். குழுமத்தில் உள்ளன.

அதன்படி எஸ்.ஆர். எம். குழுமத்தின் தற்போதைய மதிப்பு 15 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சாதாரண ஆசிரியராக பணியாற்றிய ஒருவருக்கு இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தது என்பது மர்மமாகவே உள்ளது.
எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நிறுவனர் பச்சமுத்துவின் வள்ளியம்மை சொசைட்டியின் மீது, பொதுப்பணித்துறையின் அனுமதி இல்லாதது, கட்டிட உறுதி சான்று இல்லாதது உள்பட பல்வேறு புகார்களின் அடிப்படையில், அம்பத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
அதில், நன்செய் நிலம் உள்ளதை மறைத்து கழிவு நிலம் என உண்மைக்கு புறம்பான தகவல் கொடுத்து அரசிடம் அனுமதி பெற முயற்சி நடந்திருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் சட்ட விதிமீறல்களுக்கான ஆவணங்கள் தொடர்பான குற்றத்தை ஒப்புக்கொண்டு பச்சமுத்து மன்னிப்பு கடிதத்தையும் எழுதியிருக்கிறார்.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து மகன் ரவி பச்சமுத்து மற்றும் அவரது கூட்டாளி மீது நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, மதுராந்தகத்தில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ஏக்கர் மற்றும் 12 சென்ட் நிலத்தை ரவிபச்சமுத்துவும், அவரது கூட்டாளியான ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரும் போலி ஆவணம் செய்து மோசடி செய்துள்ளதாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த சரோஜா டிஜிபி அலுவலகம், சென்னை காவல் ஆணையர், முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
காட்டாங்குளத்தூர், பொத்தேரி பகுதியில் உள்ள சுமார் 370 கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சமி நிலத்தை பச்சமுத்துவும், அவரது மகன் ரவி பச்சமுத்துவும், அபகரித்ததாக பொத்தேரியை சேர்ந்த சதீஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வேந்தர் மூவிஸ் மதன் காணாமல் போன நாளிலிருந்தே எஸ்.ஆர்.எம்.பச்சமுத்துவுக்கும் அவரது நிறுவனங்கள் மீதும் தொடர்ந்து இது போன்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
மெடிக்கல் சீட்டை விற்பனை செய்து ஆண்டுக்கு சுமார் 300 கோடிக்கு மேல் சம்பாதிப்பதாக எஸ்.ஆர்.எம். குழுமம் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவை  பச்சமுத்துவின் வழிகாட்டுதலில் நடந்துள்ளதாக மதனின் கடிதம் தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை: