வியாழன், 25 ஆகஸ்ட், 2016

ராமதாஸ் திருமாவுக்கு எதிராக கடிதம்! ஜெ., கருணாநிதி, வைகோ உள்ளிட்டோருக்கு .. காதலுக்கு எதிராக கூட்டணி?

சென்னை: முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலர் வைகோ மற்றும் இடதுசாரி தலைவர்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திடீரென நேற்று ஒரு கடிதத்தை கொடுத்தனுப்ப பரபரப்பு ஏற்பட்டது. ராமதாஸ் கொடுத்தனுப்பிய கடிதம் எது என்ற விவரமும் உடனே வெளியிடப்படாததால் பல யூகங்கள் கிளம்பின. தற்போது "தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய கடிதத்தைத்தான் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ராமதாஸ் கடிதம் கொடுத்தனுப்பியது தெரியவந்துள்ளது. மேலும் அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் பெயரை குறிப்பிடாமல் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதை மறுபதிவு செய்து கடுமையாகவும் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
Dr Ramadoss writes a letter to party leaders ராமதாஸ் கொடுத்தனுப்பிய கடிதம்: தமிழ்நாட்டின் இன்றைய பெரும் பிரச்சினைகளில் ஒன்றாக உருவெடுத்திருக்கும் இளம் பெண்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த உங்களின் கவனத்தை ஈர்க்கவும், பெண்கள் பாதுகாப்புக்காகவும், பெண்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் குரல் கொடுக்குமாறு உங்களை கேட்டுக் கொள்வதற்காகவும் தான் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். சில ஆண்டுகளுக்கு முன் காரைக்கால் வினோதினியிடம் அந்தக் கொடுமை தொடங்கியது. ஏழைக் குடும்பத்தில் பிறந்து பொறியியல் பட்டம் பெற்று தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்திருந்தார் வினோதினி. 
இரவுக் காவலாளியான தந்தையின் குடும்ப சுமைகளை இறக்கி வைத்து, அவற்றை தாம் சுமக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரத்தில் தான் கொடிய மிருகம் ஒன்று, அந்த அப்பாவிப் பெண்ணுக்கு காதல் வலை வீசியது. ஆனால், தன் பொறுப்பை உணர்ந்திருந்த வினோதினி, அந்தக் காதலை ஏற்க மறுத்துவிட்டார். விளைவு அப்பெண்ணின் முகத்தை அமிலம் வீசி சிதைத்தது அந்த மிருகம். ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த வித்யா என்ற பெண்ணுக்கும், அதேபகுதியைச் சேர்ந்த விஜயபாஸ்கருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இடையில் ஏற்பட்ட ஊடலால் வித்யாவுக்கு அமில அபிஷேகம் செய்தது அந்த மிருகம். 
இந்த இரு நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்டு பல மாதங்கள் உயிருக்கு போராடிய வினோதினியும், வித்யாவும் இறுதியில் மரணத்தைத் தழுவினார்கள். சேலம் வினுப்பிரியா, சென்னை சூளைமேடு சுவாதி, விழுப்புரம் நவீனா என இந்தப் பட்டியல் தொடர்கிறது. இந்த இளம்பெண்களின் துயர முடிவுக்கு காரணம் அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒருதலைக் காதல் தான். இவர்களில் விழுப்புரம் நவீனாவுக்கு செந்தில் என்ற மிருகம் கொடுத்த தொல்லையை ஒருதலைக் காதல் என்று சொல்ல முடியாது. 
நவீனா 14 வயது சிறுமியாக இருக்கும் போதிலிருந்தே செந்தில் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறான். கடைசியில் அந்த மிருகத்தின் சீண்டல் நவீனாவை உயிருடன் தீயிட்டு எரித்து படுகொலை செய்த கொடுமையில் நிறைவடைந்துள்ளது. 
இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முதன்மைக் காரணம் காதல் என்றால் என்ன? என்ற புரியாமையும், சாதி ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம் காதல் வழி கலப்புத் திருமணம் தான் என்ற தவறான வழிகாட்டுதலும் தான் என்பதில் உள்ள உண்மையை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 
 காதலுக்கோ, கலப்பு திருமணத்திற்கோ நான் ஒரு போதும் எதிரியல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்... கடந்த காலங்களில் நான் செய்து வைத்த கலப்புத் திருமணங்கள் என் வார்த்தைகளுக்கு வலிமை சேர்க்கும் கருவிகளாகும். 
காதல் என்பது அற்புதமான உணர்வு. ஆனால், அது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இயல்பாக வர வேண்டும். எந்த ஒரு பழமும் இயல்பாக கனிந்தால் மட்டுமே சுவைக்கும். மாறாக, கார்பைடு வைத்து கனியவைத்தால் அது உடல் நலனுக்கு தீமையை மட்டுமே ஏற்படுத்தும். 
இது அறிவியல் உண்மை. காதலும் அப்படிப்பட்டது தான். இயல்பாக ஏற்பட்ட காதல் நாளுக்கு நாள் வலிமையடையும். மாறாக பெண்ணிடம் உள்ள அழகில் மயங்கியோ, சொத்துக்களைப் பறிக்கும் நோக்குடனோ செயற்கையாக உருவாக்கப்படும் காதல் வாழ்க்கையை பொசுக்கிவிடும். இதில் கொடுமை என்னவெனில், இக்காதலால் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே இருப்பது தான்.

Read more at:/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: