ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

குமுதம் இதழ் மீது இயக்குநர் சந்திரா வழக்கு... இதுதான் பத்திரிகை தர்மமா?”: அவதூறு பேட்டி..

thetimestamil.com  : 28.9.16 தேதியிட்டு கடந்த புதன்கிழமை வெளியான குமுதம் இயக்குனர் சந்திரா. இந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது…
இதழில் நடிகர் கஞ்சா கருப்பு பேட்டி வெளியானது. அந்த பேட்டியில் கள்ளன் பட இயக்குனரும், எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான சந்திரா பற்றியும் அவரது கணவர் வீகே.சுந்தர் மீதும் பல்வேறு அவதூறுகளை சொல்லியிருந்தார் நடிகர் கஞ்சா கருப்பு. இதுகுறித்து வெள்ளிக்கிழமை (23.9.16 அன்று நடிகர் கஞ்சா கருப்பு மீதும், ஒரு பெண் என்றுகூட பாராமல் அநாகரீகமான வார்த்தைகளை பிரசுரித்த குமுதம் இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் என்கிற க.ராமச்சந்திரன், நிருபர் மகா, பொறுப்பாசிரியர்கள் திருவாளர்கள் இரா.மணிகண்டன், இளையரவி மற்றும் குமுதம் வார இதழின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான திரு. பா.வரதராஜன், நிறுவனத்தின் இயக்குனர்கள் டாக்டர் ஜவஹர் பழனியப்பன், திருமதி கோதை ஆச்சி மற்றும் பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீதும் விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்

“எனக்கும் எனது கணவர் திரு வீ.கே.சுந்தருக்கும் 19995 ல் திருமணம் ஆனது முதல் நான் சென்னையில் வசித்து வருகிறேன். முதலில் பத்திரிகைத்துறையில் செய்தியாளராக பணியாற்றி பின்னர் திரைப்படத்துறையில் பணியாற்றி வந்தேன். நான் தற்போது ’கள்ளன்’ என்ற திரைப்படத்திற்கு கதை.திரைக்கதை.வசனம் ஆகிய பணிகளை ஏற்று அப்படத்தை இயக்கி முடித்துள்ளேன். படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
அதுவன்றி நான் தமிழ் எழுத்தாளராகவும் உள்ளேன். நான் எழுதிய நூல்கள் பல்வேறு புகழ் பெற்ற பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு பெண்ணிய அமைப்புகளோடும், சமூக அமைப்புகளோடும் இணைந்து சமூக பணிகளையும் செய்து வருகிறேன். மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில் பத்திரிகை உலகிலும், தமிழ் இலக்கியம், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியிலும்,திரைப்படத்துறையிலும், பெண்ணிய அமைப்புகள், பெண்கள் மத்தியிலும சமூகத்தில் நல்ல பெயர் மதிப்பு மற்றும் மரியாதையுடன் வாழ்ந்து வருகிறேன். இந்நிலையில் திரு. கஞ்சா கருப்பு என்ற திரைப்பட நடிகரை திரு ம.க.என்ற கடற்கரை எடுத்த பேட்டி 28.9.2016 நாளிட்ட குமுதம் தமிழ் வார இதழில் பக்கம் 12 முதல் பக்கம் 18 வரை செய்தியாக வெளிவந்துள்ளது.
மேற்சொன்ன பேட்டி மற்றும் செய்தியில் என் கணவர் திரு. வீ.கே.சுந்தர் பற்றியும் அவரது நண்பர்கள் மற்றும் சில பொதுநபர்களைப் பற்றியும் பொய்யான, தவறான, உண்மைக்கு மாறான அவதூறான செய்திகளை திரு. கஞ்சா கருப்பு என்ற திரைப்பட நடிகர் பேட்டியாக அளித்துள்ளார். அந்தச் செய்தி அவரைப் பேட்டியெடுத்த நபரால் குமுதம் வார இதழின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான திரு. பா.வரதராஜன், ஆசியரியர் ப்ரியா கல்யாணராமன் என்ற திரு. க.ராமச்சந்திரன், பொறுப்பாசிரியர்கள் திருவாளர்கள் இரா.மணிகண்டன், இளையரவி மற்றும் நிறுவனத்தின் இயக்குனர்கள் டாக்டர் ஜவஹர் பழனியப்பன், திருமதி கோதை ஆச்சி மற்றும் பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் ஆகியோராலும் கூட்டாக பதிப்பித்து மேற்சொன்ன வார இதழில் செய்தியாக வெளியிடப்பட்டு தற்போது அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேற்சொன்ன இதழில் வெளிவந்த பேட்டிச் செய்தி தெரிந்து, நானும் என் கணவர் திரு. வீ.கே.சுந்தர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த அவமானத்திற்கும் அவமரியாதைக்கும் ஆளாகியுள்ளோம். மேலும் அது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும் தாங்க இயலாத துயரத்தையும் மான நட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேற்சொன்ன குற்றச் செயல் குறித்து மேற்சொன்ன நபர்களுக்கு எதிராக என் கணவர் திரு. வீ.கே..சுந்தர் தனியாக குற்றவியல் சட்டத்தின் கீழ் புகார் அளிக்க இருக்கிறார். அதேபோல் உரிய சிவில் நடவடிக்கையும் மேற்கொள்ளவுள்ளார். அதற்கு பாதகம் இல்லாமல் இப்புகாரை என் சார்பாக தனியாக அளிக்கிறேன்.
மேற்சொன்ன பேட்டிச் செய்தியில் திரு. கஞ்சா கருப்பு அவர்களின் பணத்தை வைத்து என் பெயரில் கார் வாங்கியதாக அவதூறாக கூறியுள்ளார். நாளது தேதிவரை எனக்குச் சொந்தமாக எந்தக் காரும் இல்லை. என் பெயரில் இதுவரை எந்தக் காரும் வாங்கப்படவில்லை. திரு.கஞ்சா கருப்பு அவர்கள் அவரின் தாயார் பெயரில் அவரின் சொந்த ஊரில் உள்ள சொத்தை என் பெயரில் மாற்றி பதிவு செய்து தரும்படி என் கணவரிடம் நான் கோரியதாக தெரிவித்துள்ளதும் பொய்யான ஒன்றாகும். மேலும் நான் என் முயற்சியில் இயக்கியுள்ள திரைப்படத்தை ஏதோ அவரிடமிருந்து திருடிய பணத்தில் படமெடுத்துவருவதாக பொய்யான உண்மைக்கு மாறான செய்தியைக் கூறியுள்ளதோடு, அவரின் குடியைக் கெடுத்ததாகவும் இன்னும் பல குடியைக் கெடுக்க இருப்பதாகவும் பொய்யான தவறான உண்மைக்கு மாறான தகவல்களையும் அதில் தெரிவித்துள்ளார். மேலும் மேற்சொன்ன பொய்ச் செய்தியை பேட்டியாக அளித்ததோடு என்னை “அவ ஒரு படம் டைரக்ட் பண்ணிக்கிட்டிருக்கா” என்று ஒருமையில் குறிப்பிட்டும் மரியாதைக் குறைவான மற்றும் தரக்குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார்.
நான் தற்போது இயக்கிவரும் ’கள்ளன்’ திரைப்படத்தை எட்ஸெட்ரா எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக திரு வி.மதியழகன் அவர்களால் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது. அவர்களே முழு தயாரிப்புச் செலவையும் மேற்கொண்டு வருகிறார்கள். அப்படம் என் சொந்த தயாரிப்பிலோ செலவிலோ எடுக்கப்படவில்லை. இது திரைத்துறையினர் அனைவருக்கும் தெரிந்த செய்தி. உண்மை இவ்வறிருக்க மேற்சொன்ன திரு. கஞ்சா கருப்பு அவர்கள் அளித்துள்ள பேட்டி உண்மைக்கு மாறான ஒன்று. இது தெரிந்தும் அவரால் வேண்டுமென்றே என்னை அவமானப்படுத்தும் நோக்கில் கொடுக்கப்பட்ட செய்தியாகும்.
குமுத வார இதழ் நிறுவனமும் மேற்சொன்ன அதன் உரிமையாளர்களும், பொறுப்பாளர்களும், நிர்வாகிகளும்,பணியாளர்களும் மேற்சொன்ன செய்தி எனக்கு அவமரியாதை ஏற்படுத்தும் எனது நற்பெயர், புகழ், எனக்குத் திரைப்படத் துறையினர் மற்றும் சமூகத்தில் உள்ள மதிப்பையும் அந்தஸ்தையும் குலைக்கும், பாதிக்கும்,ஊறுவிளைவிக்கும்,சீர்குலைக்கும் என்று தெரிந்தும் அச்செய்தியின் உண்மைத் தன்மை குறித்து என்னிடமோ அல்லது என் கணவரிடமோ உறுதி செய்யாது, வெறும் வியாபார நோக்கத்துடன் அவர்களின் பத்திரிகை விற்பனையை அதிகரிக்கும் ஒரே எண்ணத்துடன் சட்டத்திற்கு புறம்பாகவும் பத்திரிக்கை தர்மத்திற்கு மாறாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
அத்தகைய தவறான செய்தி அடங்கிய அவர்களின் 28.9.2016 தேதியிட்ட குமுதம் வார இதழ் தமிழ்நாடு மட்டுமன்றி உலகெங்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது மற்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அதே செய்தி அவர்களின் இணையதளம் வாயிலாகவும் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைவரின் பார்வைக்கும் படிப்புக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
எனவே மேற்சொன்ன திரு.கஞ்சா கருப்பு, அவரைப் பேட்டியெடுத்த நிருபர், குமுதம் வார இதழ் நடத்தும் உரிமையாளர், பதிப்பாளர், ஆசிரியர் ஆகியோர் மீது எனக்கெதிராக அவதூறான செய்தி கொடுத்ததற்கும் புத்தகம், இணையதளம் வாயிலாக வெளியிட்டதற்கும் சமூகத்தில் எனக்குள்ள நற்பெயர், புகழ், மரியாதை, நேர்மை, நாணயம், கண்ணியம் மற்றும் அந்தஸ்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் குற்றச் செயல்கள் புரிந்த மேற்சொன்ன நபர்கள் மீது இந்தியச் தண்டனைச் சட்டம் பிரிவுகள் 499, 501, 502 மற்றும் 509 ல் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டம்(information technology act)- 2000 பிரிவு 66(A) இன் கீழும் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளும்படியும், மேற்சொன்ன குமுதம் வார இதழின் 28/9/2016 தேதியிட்ட இதழ்களை பறிமுதல் செய்யும்படியும் இணையதள வெளியீட்டை தடுத்து நிறுத்தி முடக்கும்படியும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: