புதன், 28 செப்டம்பர், 2016

திமுக வேட்பாளர் முதல் பட்டியல்.. காங்கிரஸ் அதிருப்தி .. வாசன் பூச்சாண்டி காட்டி காங்கிரசை ...

திருச்சி, சேலம், தூத்துக்குடி மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது. குறைந்த இடங்களே ஒதுக்கப்பட்டதால் காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளது. தமிழகத்தில் வரும் அக்டோபர் 17, 19 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. மாநகராட்சி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக கடந்த 26-ம் தேதி வெளியிட்டது. இதையடுத்து, முதல் கட்டமாக திருச்சி. சேலம், தூத்துக்குடி மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது. திருச்சி மாநகராட்சியில் திமுக 62 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன.
திருச்சியின் முன்னாள் மேயரும், அதிமுக வேட்பாளருமான சாருபாலா தொண்டைமான் போட்டியிடும் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் திமுக 54 வார்டுகளிலும், காங்கிரஸ் 5 வார்டுகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு வார்டிலும் போட்டியிடுகிறது. தூத்துக்குடியில் திமுக 51 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 இடங்களிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் அதிருப்தி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் குறைவாக உள்ளன என அதிருப்தி தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர். ''உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ள இடங்களால் திருப்தி இல்லை. கூடுதல் இடங்கள் பெற திமுகவுடன் பேச்சு தொடர்கிறது'' என்று கூறியுள்ளார்.  tamilthehindu.com


கருத்துகள் இல்லை: