வெள்ளி, 23 செப்டம்பர், 2016

முதல்வரை சசிகலா மட்டும்தான் பார்க்க அனுமதி ! வேறு எவரும் பார்க்கவில்லை ..

முதல்வர் நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். யாரும் கவலைப்பட வேண்டாம்’ என்று சொன்னார் பன்ருட்டி ராமச்சந்திரன். அவரைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன், ’அம்மாவை பார்த்துவிட்டேன். அவர் நலமுட இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார்!’ என்று சொன்னார். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், தங்கமணி, வேலுமணி, எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு மட்டும் முதல்வரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது என்றும் சொன்னார்கள். ஆனால் அவர்கள் யாரும் மீடியாவிடம் பேசவே இல்லை.
என்ன நடக்கிறது? என நாமும் விசாரித்தோம். ‘முதல்வர் அனுமதிக்கப்பட்டு இருக்கும் இரண்டாவது தளத்துக்கு அமைச்சர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் முதல்வர் இருந்த அறைக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. சசிகலா மட்டும் அந்த அறையில் இருந்து வெளியே வந்தார். அவர்தான் அமைச்சர்களுடன் பேசினார். அவர் என்ன சொன்னாரோ அதைத்தான் பொன்னையனும், பன்ருட்டி ராமச்சந்திரனும் மீடியாவில் சொன்னார்கள்.
இதுவரை சசிகலாவை தவிர கட்சி நிர்வாகிகள் யாரும் முதல்வரை சந்திக்கவில்லை என்பதே நிஜம். யாரும் பார்க்கவில்லை என்றால் அது கட்சிக்கார்களிடம் கொந்தளிப்பை உண்டாக்கும் என்பதால்தான் சசிகலா இப்படியொரு ஏற்பாட்டை செய்திருக்கிறார். அத்துடன் அமைச்சர்களுக்கு சசிகலா இன்னொரு உத்தரவையும் போட்டிருக்கிறார். ‘மருத்துவமனை வளாகத்தில் இனி அமைச்சர்கள் யாரும் இருக்க வேண்டாம். நான் தேவைப்பட்டால் அழைக்கிறேன். அதுவரை வர வேண்டாம். மருத்துவமனைக்கு வெளியே கூட்டம் சேர்ப்பதை தவிருங்கள். அதேபோல வெளியூர்களில் உள்ள நிர்வாகிகள் யாரும் எந்த காரணத்துகாகவும் இப்போது சென்னைக்கு வர வேண்டாம். அதை உடனடியாக அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் நிர்வாகிகளுக்கு சொல்லிவிடுங்கள்!’ என்றும் சொல்லியிருக்கிறார். வெளியூரில் உள்ள நிர்வாகிகளுக்கு தகவல் போனபடியே இருக்கிறது.
ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை செய்தி குறிப்பில் சொல்லியிருந்தாலும், இன்னும் டிஸ்சார்ஜ் பற்றி எந்த தகவலும் இல்லை.  மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை: