வியாழன், 22 செப்டம்பர், 2016

டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சரவணன் மரணம் கொலைதான் !

tirupur student(N)  .thinaboomi.com :புதுடெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூர் மருத்துவ மாணவர் சரவணன் மர்மான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் ’அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை’ என்று பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில், தமிழ்நாட்டின் திருப்பூரை சேர்ந்த மாணவர் சரவணன் எம்.டி., படிப்பில் சேர்ந்து படித்தார். இந்த நிலையில் அவர் கடந்த ஜூலை மாதம் 9-ம் தேதி மர்மமான முறையில், தனது அறையில் இடந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் சரவணனின் தந்தை கணேசன், டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘‘எனது மகன் சரவணன் கொலை செய்திருக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரது மரணம் குறித்த உடற்கூறு பரிசோதனை அறிக்கை, முதல் தகவல் அறிக்கை தொடர்பான தகவல்களை டெல்லி போலீசிடம் கேட்டும் தரவில்லை. இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரிகள் உண்மையை மறைக்க முயற்சிக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே போலீஸ் துணை ஆணையர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவை அமைத்து ஐகோர்ட்டின் மேற்பார்வையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என கூறப்பட்டது.
இந்த மனு டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி ஏ.கே.பாதக் முன்னிலையில் செப்டம்பர் 3-ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கிருஷ்ணராஜ் ஆஜராகி வாதாடினார். அதைத் தொடர்ந்து, இந்த மனு மீதான பதில் மனுவை 4 வாரத்தில் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசுக்கும், டெல்லி போலீசுக்கும் நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மனுதாரருக்கு சரவணனின் உடற்கூறு அறிக்கை, முதல் தகவல் அறிக்கை நகல்களை 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை, நவம்பர் 10–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவர் சரவணன் தற்கொலை செய்து இருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் தமிழக மருத்துவ மாணவர் சரவணன் உயிரிழப்பு தொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனையில், அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சரவணன் உடலில் யாரோ விஷ ஊசி செலுத்தி இருக்கவேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவர் கதிர் கே குப்தா தலைமையிலான மருத்துவர்கள் குழு அறிக்கையை தாக்கல் செய்து உள்ளது. மிகவும் நன்றாக படிக்க கூடிய மாணவர் சரவணன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு கிடையாது என்று ஏற்கனவே வலியுறுத்தப்பட்டது.
விஷ ஊசியானது மருத்துவம் தெரிந்த ஒருவராலே செலுத்திருக்கப்பட வேண்டும் என்று பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரியும் கணேசன் என்பவரின் மகனான சரவணன் மதுரை மருத்துவக்கல்லூரியில் முதலில் எம்.பி.பி.எஸ். படித்தவர். பிறகு மருத்துவக்கல்வியில் மேற்படிப்புக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இந்த கல்வியாண்டில் தான் சேர்ந்தார்.  திருப்பூரை சேர்ந்த எய்ம்ஸ் டாக்டர் சரவணன் மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை  பாராளுமன்றத்திலும் வலியுறுத்தப்பட்டது. இதற்கு பாராளுமன்றத்தில் பதில் அளித்த மத்திய அரசு,‘ இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றதும் வந்ததும் மேல்நடவடிக்கை பற்றி முடிவுசெய்யப்படும்’’ என்றது.
கடுமையான உழைப்பின் மூலம் தான் விரும்பிய படிப்பில் இடம் கிடைத்து பெருமகிழ்ச்சியில் இருந்த சரவணன் சில நாட்களில் திடீரென தன் அறையில் இறந்து கிடந்துள்ளார்.  டெல்லி காவல்துறை இது தற்கொலையாக அல்லது விபத்தாக இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிவித்தது. இதில் பல சந்தேகங்கள் எழுந்தது. தான் விரும்பிய படிப்பில் இடம் கிடைத்ததன் மூலம் மகிழ்ச்சியில் இருந்த மருத்துவ மாணவர் ஏன் தற்கொலைக்கு முயல வேண்டும்? இன்னும் ஒரு முக்கியமான தகவல், இறந்த சரவணன் வலது கை பழக்கமுள்ளவர். இப்படிப்பட்டவர் எப்படி தனது வலக்கை மணிக்கட்டு பகுதியில் தனக்குத்தானே ஊசி போட்டுக் கொள்ள முடியும்?
மேலும் சரவணனின் சீனியர்கள் அவரது அறைக்கு வந்தபோது அறையின் உள்ளே தாழிடப்படவில்லை. அதனால் அவர்களால் எளிதில் உள்ளே நுழைய முடிந்திருக்கிறது. தற்கொலை செய்ய முயல்பவர் உள்ளே தாழிடாமல் இருந்திருப்பாரா? இவ்வளவு சந்தேகங்கள் இருந்தபோதும் டெல்லி போலீசார், இது தற்கொலையாகவோ அல்லது ஓவர் டோஸ் எனப்படும் அதிகப்படியான மருந்தை ஊசிமூலம் ஏற்றிக்கொண்டதாலோ மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.
சரவணனின் பெற்றோர்களும், நண்பர்களும், ‘தற்கொலை செய்யும் அளவுக்கு சரவணனுக்கு மன அழுத்தம் உள்ளிட்ட எவ்வித காரணியும் இல்லை, அவர் விரும்பிய படிப்பில் இடம் கிடைத்த மகிழ்ச்சியில்தான் இருந்தார்’ என்று உறுதிபடக் கூறினர். எனவே சிறப்புப் புலனாய்வுக் குழு அல்லது சி.பி.ஐ. விசாரணை நடத்தி அவரது மரணத்துக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது

கருத்துகள் இல்லை: