புதன், 28 செப்டம்பர், 2016

அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதம்... டொனால்ட் ட்ரம் Vs ஹிலாரி கிளிண்டன் ..

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களான
டொனால்டு ட்ரம்ப், ஹிலரி கிளிண்டன் ஆகியோர் பங்கேற்ற முதல் விவாதம் நியூயார்க் நகரில் நடைபெற்றது. அமெரிக்க பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சட்டம்-ஒழுங்கு, ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல் விவகாரம், டிரம்ப்பின் வருமான வரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இருவேட்பாளர்களும் காரசாரமான கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். விவாதத்தின் முடிவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 67 சதவீத வாக்குகள் பெற்று ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு சுமார் 6 வார காலமே உள்ள நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் ஆகியோர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, அந்நாட்டு வழக்கப்படி, இவ்விருவரும் பங்கேற்ற முதல் விவாதம் நியூயார்க் நகரின் லாங் ஐலேண்ட் என்ற இடத்தில் உள்ள ஹோஸ்ஃட்ரா பல்கலைக் கழகத்தில் தொடங்கியது. இந்த விவாதத்தில் கலந்துகொள்வதற்காக முதலில் டொனால்டு ட்ரம்பும், அவரைத்தொடர்ந்து, அமெரிக்க முன்னாள் அதிபரும், தனது கணவருமான பில் கிளிண்டனுடன் ஹிலாரி கிளிண்டனும் வருகை தந்தனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கில் அமைக்கப்பட்டிருந்த விவாத மேடையில் டிரம்ப்பும், ஹிலாரி கிளிண்டனும் கை குலுக்கிய பின்னர், காரசாரமான விவாதம் துவங்கியது.
விவாதத்தை துவக்கி வைத்த நடுவர் லெஸ்டர் ஹோல்ட், அமெரிக்கர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு குறித்து ஹிலாரியிடம் கேள்விக்கணை தொடுத்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் ஹிலாரி கிளிண்டன், ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சமஊதியம் கிடைக்கவும், பணக்காரர்கள் மீது வரிவிதிப்பை அதிகரிக்கச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார். இதே கேள்விக்கு டிரம்ப் பதிலளிக்கையில், மெக்ஸிகோ உள்ளிட்ட வெளிநாட்டினர், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிக்கமுடியாமல் தடுக்கவும், அமெரிக்க நிறுவனங்களை தக்கவைத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
வரிச்சலுகை குறித்து தெரிவிக்கும் டொனால்ட் டிரம்ப், இதுவரை செலுத்திய வருமான வரி செலுத்திய விவரங்களை வெளியிட தயாரா? என ஹிலாரி கிளிண்டன் கேள்வி எழுப்பினார்.
ஹிலாரி கிளிண்டனின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த டொனால்ட் டிரம்ப், அழிக்கப்பட்ட 33 ஆயிரம் மின்னஞ்சல்களை ஹிலாரி கிளிண்டன் வெளியிட முன்வந்தால், வருமான வரி செலுத்திய விவரங்களை வெளியிட தயார் என குறிப்பிட்டார்.
அதிபர் ஒபாமா பிறந்த இட விவகாரம், ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த விவாதத்தில் இடம்பெற்றன. விவாதத்தின் முடிவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 67 சதவீத வாக்குகள் பெற்று ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 9-ம் தேதி செயின்ட் லூயிஸ் நகரில் இரண்டாவது விவாதமும், அக்டோபர் 19-ம் தேதி நெவேடா மாகாணம் பாரடைஸ் நகரில் இறுதி விவாதமும் நடைபெறவுள்ளன.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: