வியாழன், 20 அக்டோபர், 2016

சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் தீவிபத்து 8 பேர் மரணம்

மீட்புப் பணியில் தீயணைப்புப் படையினர் | படம்: இ.மணிகண்டன்.
மீட்புப் பணியில் தீயணைப்புப் படையினர் | படம்: இ.மணிகண்டன்.
சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகினர். பலியான 8 பேரும் அருகிலிருந்த ஸ்கேன் மையத்தில் சிக்கிக் கொண்டிருந்தவர்கள்.
சிவகாசி - விருதுநகர் பைபாஸ் சாலையில் ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் இருக்கிறது. இந்த குடோனில் இருந்து இன்று மதியம் இரண்டு வேன்களில் பட்டாசுகள் ஏற்றப்பட்டது.
அப்போது, பட்டாசுகளில் உராய்வு ஏற்பட்டு தீ பிடித்தது. இரண்டு வேன்களில் இருந்த பட்டாசுகளும் வெடித்துச் சிதறியதில் அந்த சுற்றுவட்டாரத்தில் இருந்த 15 ஸ்கூட்டர்கள், ஒரு ஜீப், பட்டாசு இருந்த வேன் உட்பட வாகனங்கள் பல எரிந்து நாசமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்த 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல் அருகிலிருந்த ஸ்கேன் மையத்துக்கும் தீ பரவியது. அந்த ஸ்கேன் மையத்துக்குள் 25-க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட நபர்கள் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மூச்சுத் திணறலால் 4 பெண்கள், 4 ஆண்கள் உயிரிழந்ததாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இன்ன்னும் ஸ்கேன் மையத்துக்குள் வேறு யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என தீயணைப்புப் படையினர் தேடி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. ராஜராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் இருக்கின்றனர். மீட்புப் பணிகளை நேரடியாக பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தால் விருதுநகர் - சிவகாசி பைபாஸ் சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது tamilthehindu.com

கருத்துகள் இல்லை: