வெள்ளி, 21 அக்டோபர், 2016

தனியார் பள்ளி ஆசிரியர்களை சுரண்டி கொழுக்கும் கல்வி வியாபாரிகள்

theekkathir.in  வாசல் கதவுக்கருகில் நின்று காவல் காக்கும் காவலாளி
ஆசிரியர்களது பணிச்சுமையினைக் குறைக்கும் வகையில் கூடுதலாகச் சிலரைப்
பணியிலமர்த்துவதற்கான வசதிகள் உள்ள ‘பெரிய’ பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டு, அனைத்து பள்ளிகளிலும் கல்விப் பணியல்லாத பிற வேலைகள் ஆசிரியர்கள் மீது சுமத்தப்படுவதைக் குறைக்கும் நோக்கத்தோடு இத்தகவல்கள் சேகரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. நகரத்தில் உள்ள ஒரு ஆடம்பரமான பணக்காரப் பள்ளியில் பணி புரிவது என்பது எத்தகைய அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கிறது? என்ற கேள்விக்கு திருப்திகரமான பதிலை ஆசிரியர்களிடமிருந்து உங்களால் பெற முடியாது.

வேலையைத் தவிர்த்து அனைத்து வகை வேலைகளையும் தாங்கள் செய்ய வேண்டுமென்று தங்களது நிர்வாகங்கள் விரும்புவதாகச் சில தனியார் பள்ளி ஆசிரியர்கள் சொல்கின்றனர். வேண்டுமென்றே இவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள் என்று ஆசிரியர்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு முன்னர் டெல்லியிலிருக்கும் 1600க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களது அன்றாடப் பணிகள் குறித்து சிபிஎஸ்இ கேட்டறியப்போவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டில் வெளியாகியுள்ள செய்தியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.


இவர்கள் கொடுக்கும் சம்பளத்திற்கு இந்தப் பள்ளிகளில் பணி புரிவதற்கு ஆண்கள் பலரும் முன் வராத சூழலில், இங்கே குறிப்பிடப்படும் ஆசிரியர் என்பவர் பெரும்பாலும் ஒரு பெண்ணாகவே இருப்பார். இந்தியாவில் ஒரு பெண்ணுடைய சம்பளம் என்பது கூடுதல் வருமானம் என்ற வகையிலேயே பார்க்கப்படுகிறது என்பதும் உண்மைதானே?
தானாக விழித்தெழுவதற்குப் பதிலாக, அதிகாலையில் படுக்கையிலிருந்து எழுப்பப்படுவது என்பது யாருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான விஷயமாக இருக்காது. பள்ளி ஆசிரியையாகப் பணி புரிந்து வரும் அவளுக்கு இந்த மகிழ்ச்சி என்பது நீண்ட நெடுங்காலமாகக் கிடைத்திராத ஒரு அனுபவமாகவே இருந்து வருகிறது. தினமும் காலை 5 மணிக்கு அவளது அன்றாடப் பணிகள் துவங்கும். காலையில் அவளது மகனைப் பள்ளிக்கு அனுப்பும் பணியைச் செய்ய வேண்டியதும் அவளது பொறுப்புதான். குளித்து முடித்து சேலை மாற்றும் போது கூடவே சமையல் வேலை, கழுத்து வலிக்க பலமுறை சுவர்க் கடிகாரத்தைத் திரும்பத் திரும்பப் பார்ப்பது என்று பரபரக்கும் காலைப் பொழுது. பள்ளிக்குச் செல்வதற்காக ஏழு மணிக்கு வீட்டை விட்டு வெளியே கிளம்பிக் கொண்டே அவசர அவசரமாக மகனுக்கு கன்னத்தில் ஒரு முத்தம். கைக்கடிகாரத்தை அழுத்திப் பிடித்த வண்ணம் ஆட்டோவில் ஏறி அமரும் போது கடிகாரத்தில் உள்ள முள்ளை அழுத்தி காலத்தை அந்த நேரத்தில் அப்படியே நிறுத்தி விடுவதற்கான முயற்சியினைச் செய்வது போன்று தோன்றும்.
எப்படியோ சமாளித்து ’தாமதாக வந்தார்’ என்று வருகைப் பதிவில் குறிக்கப்படுவதைத் தவிர்த்து 7.30 மணிக்குள் பள்ளிக்குள் புகுந்து பதிவேட்டில் கையொப்பம் இடுவாள். அடுத்ததாக பள்ளியில் நடைபெறும் காலை கூட்டத்திற்கு, ராமு சாமுவின் காதைக் கடித்து விட்டான் என்ற கூக்குரல்கள் எழாத வண்ணம், மாணவர்களை வரிசையில் நிற்க வைத்து அழைத்து வருவதற்கான வேலைகளைப் பார்க்க ஆரம்பிக்க வேண்டும்.
அடுத்ததாக காலை வேலை வகுப்புகள் ஆரம்பிக்கும். திரும்பத் திரும்ப . . .முப்பத்தைந்து
நிமிடங்களுக்கொரு வகுப்பு என்று ஏழு வகுப்புகள் . . .உட்கார அனுமதியில்லாததால், முழுவதும்
நின்று கொண்டே பாடம் நடத்த வேண்டும். சிறிது நேரத்திலேயே இடுப்பைப் பிடித்துக் கொண்டு, சில சமயங்களில் காலில் தசைப் பிடிப்பு ஏற்படுவதைத் தடுக்க ஒற்றைக் காலில் கொக்கு போல நின்று கொண்டு என்று காலில் உள்ள இரத்த நாளங்கள் சுருளும் அளவிற்கு வேலை பார்க்கும்போது மதிய உணவு இடைவேளைக்கு மணியடிக்கும். கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்றால் நடக்காது, ஐந்து நிமிடத்திற்குள் தான் கொண்டு வந்த சாப்பாட்டைச் சாப்பிட்டு முடித்து விட்டு, உடனேயே வகுப்பறைகளுக்குள் நுழைந்து அடுத்த அரை மணி நேரத்திற்கு மாணவர்களுக்குள் எந்தக் கலவரமும் நடக்காத வண்ணம் போலீஸ் உத்தியோகம் பார்க்க வேண்டியிருக்கும்.
மதியச் சாப்பாட்டிற்குப் பின் இரண்டு பாட வேளைகள் வகுப்புக்குச் செல்ல வேண்டும். சில சமயம்
வேறொரு ஆசிரியர் விடுமுறையில் சென்றிருந்தால் துரதிர்ஷ்டவசமாக மூன்று பாட வேளைகள் கூட இருக்கலாம். குழந்தைகளுக்கு 2.45 மணிக்கு பள்ளி வேலை நேரம் முடிந்ததும், அப்பாடா வீட்டிற்குச் செல்லாலாம் என்று எண்ணி விட முடியாது. அதற்கு அப்புறம்தான் ஆரம்பிக்கிறது பள்ளிப் பேருந்தில் செய்ய வேண்டிய வேலை. நீண்ட நெடிய சாலைகளில் டெல்லியின் அனைத்து பகுதிகளுக்கும் பயணித்து அனைத்து மாணவர்களையும் இறக்கி விட்டு பத்திரமாக வீட்டிற்குச் செல்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு இணக்கமில்லாமல் அனைத்தையும் செய்து முடித்து இறுதியாக மாலை 5.30 மணிக்கு அவளது வீட்டிற்குச் சென்றடைந்த பிறகும் அவளது வேலைகள் முடிந்து விடுவதில்லை. விடைத்தாள்கள் திருத்துவது, மதிப்பெண்களைப் பதிவு செய்வது, ஒவ்வொரு மாணவருக்குமான தரத்தினை வரிசைப்படுத்தி அதனைப் பதிவு செய்வது என்று ஓயாத வேலைகள் வீட்டிலும் தொடரும்.
இதற்கிடையில் தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள மாணவர்களும், தங்களது
பிள்ளைகளுக்கான ஆலோசனைகளைக் கேட்டு பெற்றோர்களும் கூப்பிட ஆரம்பித்தார்கள் என்றால், தனது நான்கு வயது மகனிடம் பேசுவதற்கான நேரம் கூடக் கிடைக்காது. இதற்குள்ளாக அவள் தூக்கக் கலக்கத்தில் நான்கைந்து முறை மேஜையில் தனது தலையை முட்டி மோதிக் கொண்ட நிகழ்வுகளும் நடந்தேறி இருக்கும்.
இது அவளுக்குரிய அன்றாட நிகழ்வுகள் மட்டுமே. இது போக கருத்தரங்கங்கள், கண்காட்சிகள்,
அறிவியல் ஆய்வுகளுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்த வேண்டிய உபரி வேலைகளும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அது மட்டுமா…. பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக் கூட்டங்கள்…. அங்கே பெற்றோர்கள் தான் கடவுள்… அங்கே குழப்பம் எதுவும் நடந்து விடக் கூடாதே.
  • தமிழில் – டாக்டர் . டி.சந்திரகுரு, விருதுநகர்

கருத்துகள் இல்லை: