வெள்ளி, 25 நவம்பர், 2016

ஆதிச்சநல்லூர் அறிக்கையை முடக்கியது ஏன்?’ – தமிழர் வரலாற்றை திசைதிருப்பும் மர்மம்


பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை அறிந்து கொள்ளும் மிக முக்கிய புதையலான ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை முடங்கிக் கிடப்பதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ஆய்வாளர்கள். ‘ பத்து ஆண்டுகளாக ஆய்வு அறிக்கை முடங்கிக் கிடப்பதில் பல மர்மங்கள் உள்ளன. தமிழர் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்படுகிறது” என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள். சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் வாழ்வியல் முறைகள் கண்டறியப்பட்டன. இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய நாகரிகம் வெளியானதில், தமிழ் உணர்வாளர்கள் பெரிதும் மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து, கீழடி ஆய்வுக்குரிய 2 ஏக்கர் நிலம் ஒதுக்காதது; ஆய்வுக் குழிகளை மூட முற்படுவது எனப் பல சிக்கல்கள் ஏற்பட்டன.
நீதிமன்றத்தின் கவனத்துக்கும் வழக்கு சென்றது. இந்நிலையில், ஆதிச்சநல்லூர் குறித்து வெளியாகும் தகவல்களால் ஆய்வாளர்கள் மத்தியில் பெருத்த அச்சம் ஏற்பட்டுள்ளது. ” 1904-ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிதான், இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் ஆராய்ச்சி. அதன்பிறகே, 1924-ம் ஆண்டு சிந்து சமவெளிப் பகுதி மற்றும் அரிக்கமேடு பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டன.
மத்திய தொல்லியல் துறையின் அனுமதியோடு, 2004-ம் ஆண்டு முதல் ஆதிச்சநல்லூரில் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது வரையில் நான்கு தொகுதிகளாக இருக்கும், இந்த ஆய்வு முறைகளை வெளியிடாமல் முடக்கி வைத்துள்ளனர்” என வேதனையோடு தொடங்கினார் தொல்லியல் அறிஞர் ஒருவர். அவர் நம்மிடம், “தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் பகுதி, தமிழர்களின் கடல்கடந்த வாணிபத் தொடர்புகள், திருமண முறைகள், தனித்தனி இடுகாடுகள், கலாசாரம் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் மிக முக்கியமான ஆவணங்கள் இங்கு கிடைத்துள்ளன.
இந்தப் பணியில் ஈடுபட்ட மானுடவியல் அறிஞர் ராகவன், ஆய்வறிக்கைகளை மத்திய அரசின் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டார். ஆனால், ஆய்வு அறிக்கையை வெளியிடுவதற்கு அதிகாரிகள் தயாராக இல்லை. தொடக்கத்தில், மண்டை ஓடுகள் குறித்த ஆய்வறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகத் தெரிவித்தார்கள். ‘ இந்தப் பணியில் இரண்டரை ஆண்டுகளாக எந்தப் பணமும் வாங்காமல் பணி செய்கிறேன். ஆய்வின் மூன்று பாகங்களை தொல்லியல் கண்காணிப்பாளராக இருந்த மகேஸ்வரிக்கு 2013-ம் ஆண்டிலேயே அனுப்பிவிட்டேன்’ என மானுடவியல் அறிஞர் ராகவன் தெரிவித்தார்.
‘அந்த மூன்று பகுதி ஆய்வறிக்கைகளும் அச்சாகிக் கொண்டிருப்பதால், விரைவில் வெளியிடப்படும்’ என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பணியில் அனைவரையும் ஊக்கப்படுத்தி, வேலை வாங்கிக் கொண்டிருந்தார் மகேஸ்வரி. அவரையும் வேறு இடத்துக்கு மாற்றிவிட்டார்கள். இந்தப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளை முடக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இப்போது நான்காவது பகுதி அறிக்கையை மறைக்கும் வேலைகளும் நடந்து வருகின்றன. தமிழ் உணர்வாளர்கள் ஒன்று திரண்டால் மட்டுமே, ஆதிச்சநல்லூர் பொக்கிஷத்தைக் காப்பாற்ற முடியும்” என ஆதங்கப்பட்டார்.
” ஆதிச்சநல்லூர் நாகரிகம் என்பது சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் முற்பட்டது. சுமார் 135 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர் சோகார் ஆய்வுகளை மேற்கொண்டார். அதில் கிடைத்த தொல்பொருட்களை பெர்லின் அருங்காட்சியத்தில் வைத்தார். இதற்கு ஆதிச்சநல்லூர் பொக்கிஷம்’ என்றே பெயர் வைத்தார். 1902-ம் ஆண்டு அலெக்சாண்டர் ரியா நடத்திய ஆய்வில், ஏராளமான முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. கூடவே, மண்பாண்டங்கள், ஈட்டி, கோடாரி, வாள், கத்தி உள்ளிட்டவைகளும் கிடைத்தன. இவற்றை எழும்பூரில் உள்ள அருங்காட்சியத்தில் வைத்தனர். அதன் பின்பு தொல்லியல் துறை, தீவிர ஆய்வுகளை மேற்கொண்டது. 114 ஏக்கரில் நிலத்தைத் தோண்டி நடத்தப்பட்ட ஆய்வில், பல பொருட்கள் கிடைத்தன. இந்த ஆய்வுக் குறிப்புகளைத்தான் வெளியிடாமல், அதிகாரிகள் மறைக்கின்றனர். இதற்குப் பின்னால் மத்திய தொல்லியில் துறையில் பணியாற்றும் சில அதிகாரிகள் உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள் ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்தால், மத்திய தொல்லியல் துறையின் உறக்கம் கலையும். தமிழர்களின் வரலாறும் மாறும்” என்கிறார் அருங்காட்சிய காப்பாட்சியர் ஒருவர்.
சென்னை, தொல்லியல் துறை ஆய்வாளர் ஒருவரிடம் பேசியபோது, ” ஆதிச்சநல்லூர் ஆய்வு அறிக்கைகளை அச்சிடும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. அவற்றை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் ஒருவர், வெளிநாட்டில் இருந்ததால் சில பணிகளை நிறைவு செய்ய முடியவில்லை. விரைவில் ஆய்வு அறிக்கை வெளியாகும்” என்றார்.
– ஆ.விஜயானந்த்
vikatan.com

கருத்துகள் இல்லை: