புதன், 30 நவம்பர், 2016

அப்போலோ சின்னம்மா சீரியல் இன்றைய எபிசொட் ...


மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தயாராக இருந்தது.
“தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ-க்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டார்கள். பதவியேற்புக்கு முன்பும் பின்பும் நடந்தவற்றைச் சொல்கிறேன். அரவக்குறிச்சியில் ஜெயித்த முன்னாள் அமைச்சரான செந்தில்பாலாஜி, எப்படியாவது சசிகலாவை சந்தித்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என, ரிசல்ட் வந்த நாளிலிருந்து தினமும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தபடியே இருந்தார். இளவரசியின் மகன் விவேக் மூலமாகத்தான் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார் செந்தில்பாலாஜி.
நேற்று காலையும் வழக்கம்போல அப்பல்லோவுக்கு வந்துவிட்டார் செந்தில்பாலாஜி. அவர் வந்தபிறகு விவேக் அங்கே வந்தார். அவருக்கு வழக்கம்போல செந்தில்பாலாஜி வணக்கம் போட்டார். பதவியேற்புக்கு முன்பு, சசிகலாவை சந்தித்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று செந்தில்பாலாஜி நினைத்தார். மருத்துவமனைக்கு வந்த விவேக், சசிகலாவிடம் இதுபற்றி பேசியிருக்கிறார்.
அரை மணி நேரத்துக்குப் பிறகு கீழே இறங்கிவந்தார் விவேக். ஆர்வமாக அருகே போனார் செந்தில்பாலாஜி. ‘நீங்க முதல்ல பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் போங்க. பதவியேற்ற பிறகு வாங்க. அத்தை பார்க்கிறதா சொல்லியிருக்காங்க..’ என்று விவேக் சொன்னாராம். பவ்யமாக தலையாட்டிய செந்தில்பாலாஜி, அப்பல்லோ மருத்துவமனையைப் பார்த்து கும்பிட்டுவிட்டு பதவியேற்பு நிகழ்ச்சிக்கு கிளம்பிப் போனார்.
பதவியேற்பு விழாவில் தஞ்சாவூர் சுப்ரமணியனும், திருப்பரங்குன்றம் போஸும் சிரித்தபடியே இருந்தார்கள். ஆனால் செந்தில்பாலாஜி முகத்தில் கொஞ்சம்கூட மகிழ்ச்சியில்லை. அது அப்பட்டமாகவே தெரிந்தது. மூன்றுபேருக்குமே ஒரே மாதிரியான கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தில் துண்டு போடச்சொல்லி வாங்கிக் கொடுத்திருக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
அந்த துண்டை போட்டுக்கொண்டபடியேதான் மூவரும் பதவியேற்றார்கள். பதவியேற்று முடித்ததும் அமைச்சர்கள் வாழ்த்துச் சொன்னார்கள். அங்கிருந்து எல்லோரும் கிளம்பிவிட, செந்தில்பாலாஜி கார் மட்டும் நேராக மீண்டும் அப்பல்லோவுக்குப் போனது. ஆனால் அவர் போன நேரத்தில் அங்கே விவேக் இல்லை. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக செந்தில்பாலாஜி காத்திருந்தார். விவேக் வந்தார். செந்தில்பாலாஜிக்கு கைகொடுத்து வாழ்த்துச் சொன்னார் விவேக். அவரை, அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு மேலே சென்றார் விவேக்.
அரை மணி நேரத்துக்குப் பிறகு கீழேவந்த விவேக், செந்தில்பாலாஜியை அழைத்துக்கொண்டு சசிகலா இருக்கும் தளத்துக்குப் போனார். அப்போது ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் மட்டும் அங்கே இருந்தார்களாம்.

(விவேக்)
செந்தில்பாலாஜியை அந்த தளத்திலிருந்த ரிசப்ஷனில் இருக்கச் சொல்லிவிட்டு, சசிகலாவிடம் தகவல் சொல்லப் போயிருக்கிறார் விவேக். சற்று நேரத்துக்குப்பிறகு சசிகலா வெளியே வந்திருக்கிறார். அவரைப் பார்த்ததும் காலில் விழுந்து கும்பிட்டிருக்கிறார் செந்தில்பாலாஜி. ‘சந்தோஷம்… வாழ்த்துகள்! பார்த்து கவனமா இருங்க…’ என்று மட்டும் சசிகலா சொன்னதாகச் சொல்கிறார்கள்.” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.
அதற்கு லைக் போட்ட வாட்ஸ் அப், அதை காப்பி செய்து ஷேர் செய்தது. தொடர்ந்து கமெண்ட்டில் சில சந்தேகங்களை கேள்வியாகப் போட்டது. “ஏற்கனவே செந்தில்பாலாஜிக்கு சிக்கல் வர காரணமே சசிகலாதான் என்றுதானே சொல்வார்கள். இப்போது ராசியாகிவிட்டார்களா?”

(செந்தில்பாலாஜி)
பதிலை ரிப்ளைசில் போட்டது ஃபேஸ்புக். “ம்… செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பதவி பறிக்கப்படக் காரணமே சசிகலாதான் என்றுகூட அப்போது சொல்லப்பட்டது. ஆனால் அதெல்லாம் சமாதானம் ஆனது விவேக் திருமணத்தில்தான். சமாதானத் தூதுவராக இருந்து எல்லாவற்றையும் செய்துமுடித்தது விவேக். அப்பல்லோவுக்குச் சென்று சசிகலாவை பார்த்துவிட்டார் செந்தில்பாலாஜி என்ற தகவல், நேற்று இரவே கரூரில் உள்ள கட்சிக்காரர்கள் மத்தியில் பரவிவிட்டது. ‘செந்தில்பாலாஜிக்கு மீண்டும் கட்சிப் பொறுப்பும் அமைச்சர் பதவியும் கொடுக்கப் போகிறார்கள் என்றும் கட்சிக்காரர்கள் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் கரூர் மாவட்டச் செயலாளர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்களோ, ‘அம்மா இப்படியிருக்கும் நேரத்தில், அமைச்சரவையிலும் சரி… கட்சியிலும் சரி... எந்த மாற்றமும் இருக்காது. செந்தில்பாலாஜி ஆட்கள் தேவையில்லாமல் பகல்கனவு காண்கிறார்கள். அதெல்லாம் நடக்காது. இப்போது, அம்மா ஆஸ்பிட்டல்ல இருக்கும் நேரத்தில் எந்த மாற்றம் நடந்தாலும் அது எவ்வளவு பெரிய சிக்கலை உண்டாக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.’ என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். ஆனாலும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்களோ, ‘சின்னம்மா பார்வை அண்ணன்மேல விழுந்துடுச்சு. இனி, எல்லாமே ஏறுமுகம்தான்’ என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர்!” என்று முடிந்தது அந்த பதில். அதற்கு லைக் போட்டு ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப்.  minnambalam.com

கருத்துகள் இல்லை: