ஞாயிறு, 4 டிசம்பர், 2016

ஹிலாரிக்கு மீண்டும் வாய்ப்பு? நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும் !

கடந்த நவம்பர் 8ஆம் தேதி நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பும் போட்டியிட்டனர். அதில் டொனால்ட் டிரம்ப்பை விட, ஹிலாரி கிளிண்டன் 25 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று சாதனை படைத்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. எனினும், மொத்த வாக்கு எண்ணிக்கை இதுவரை நிறைவடையவில்லை. தற்போது வரை வெளியான வாக்கு எண்ணிக்கைப்படி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் 65,152,310 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் 62,626,216 வாக்குகள் பெற்றுள்ளார். மற்ற வேட்பாளர்கள் 7,373,248 வாக்குகள் பெற்றுள்ளனர். இதன் மூலம் டிரம்பை விட, ஹிலாரி 1.9 சதவிகிதம் 2,526,094 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் எலக்ட்டோரல் காலேஜ் முறைப்படி 538 இடங்களில் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி 306 இடங்களிலும் ஹிலாரி கிளிண்டன் ஜனநாயகக் கட்சி 228 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே டொனால்ட் டிரம்ப் தற்போது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் வெற்றியை திரும்ப பெற்றுக்கொண்டு வெள்ளை மாளிகைக்கு ஹிலாரி கிளிண்டனை அனுப்ப வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகின்றன. இதன் விளைவாக மக்களில் ஒரு பிரிவினர் டிரம்புக்கு எதிராக கையெழுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கையெழுத்து போராட்டத்தை தொடங்கிய சமூக ஆர்வலரான டேனியல் பிரிசினாப் என்பவர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற உள்ள வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். “அமெரிக்க தேர்தல் விதிமுறைகளில் அதிக மக்கள் வாக்கு எண்ணிக்கை பெற்றவர் அதிபர் ஆவார் என வகுக்கப்பட்டிருந்தால், ஹிலாரி தான் அதிபர் ஆகியிருப்பார். ஆனால், தேர்தல் விதிமுறைகள் மாகாண வாக்குகளை அடிப்படையாக கொண்டுள்ளதால் தற்போது டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். எனினும், ஹிலாரி கிளிண்டன் மீண்டும் அதிபராக ஒரு வாய்ப்புள்ளது. அதாவது, பொதுமக்கள் வாக்குகளை தொடர்ந்து ஒருவர் உடனடியாக அதிபர் ஆக முடியாது. இதன் அடுத்தக்கட்டமாக, ஒவ்வொரு மாகாணத்தில் உள்ள தேர்தல் அமைப்பை (Electoral College) சேர்ந்த உறுப்பினர்கள் தங்களுடைய வாக்குகளை இறுதியாக பதிவு செய்ய வேண்டும். பெரும்பாலும், இந்த உறுப்பினர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு தான் வாக்களிப்பார்கள். ஆனால், அதேசமயம் தங்களுடைய விருப்பத்தை மாற்றிக்கொண்டு மாற்று வேட்பாளருக்கும் இவர்கள் வாக்களிக்கச் சட்டத்தில் இடம் உள்ளது.
இவ்வாறு இந்த தேர்தல் அமைப்பு உறுப்பினர்கள் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களித்தால் அவர் நிச்சயமாக அதிபராக சட்டப்பூர்வமாகவே தேர்வு செய்யப்படுவார். தற்போது இந்த உறுப்பினர்கள் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் நாங்கள் வைத்துள்ளோம். இதுபோன்ற நடவடிக்கை அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர் நடந்தது இல்லை. அதுபோல் அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஒருவருக்கு எதிராக இதுபோன்ற கடுமையான போராட்டங்களும் இதுவரை நடந்ததில்லை. எனவே, இவற்றை கருத்தில் கொண்டு மாகாணட் தேர்தல் அமைப்பு உறுப்பினர்கள் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய முக்கிய கோரிக்கையாகும்” என டேனியல் கூறி உள்ளார். தற்போது வரை டிரம்புக்கு எதிராக சுமார் 50 லட்சம் பேர் வரை கையெழுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி மாகாண தேர்தல் அமைப்பு உறுப்பினர்கள் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்யவுள்ளதால் அதன் முடிவுகள் டிரம்பின் வெற்றியை முறியடிக்குமா என பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  minnambalam.com

கருத்துகள் இல்லை: