செவ்வாய், 6 டிசம்பர், 2016

கண்ணீர் வெள்ளத்தில் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டனுக்கு கொண்டுவரப்பட்டது


சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து அவரது வீடான போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அமைச்சர்கள், அதிமுக தொண்டர்களின் கண்ணீர் வெள்ளத்திற்கு நடுவில் ஊர்ந்து சென்றது அவரது உடல் வைக்கப்பட்டுள்ள வாகனம்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 75 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றார். நேற்று முன் தினம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து நேற்று இரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்திருக்கிறது.
இதனையடுத்து, அவரது உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து அவர் வாழ்ந்த வீடான போயஸ் கார்டனுக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்ட வாகனத்துடன் 8 வாகனங்கள் சென்றன. அவர் உயிருடன் இருக்கும் போது பயன்படுத்தப்பட்ட கான்வாய்கள் இப்போது அவரது உடல் சென்ற வாகனத்திற்கு முன்னால் சென்றன. ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் போயஸ் கார்டன் சென்றடைந்தது ஜெயலலிதாவின் உடல்.

சாலையின் இருபுறமும் கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருக்கும் அதிமுக தொண்டர்களுக்கு நடுவில் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்ட வாகனம் சென்று போயஸ் கார்டனை அடைந்தது. அங்கு ஜெயலலிதாவின் குலவழக்கப்படி இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன. அதன் பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலுக்கு ஜெயலலிதாவின் உடல் கொண்டு செல்லப்படும். மக்களின் அஞ்சலியைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படூம்  tamiloneindia.com

கருத்துகள் இல்லை: