வெள்ளி, 13 ஜனவரி, 2017

தமிழ் அறிஞர் ச.வே.சு நினைவு பகிர்வு ! தமிழுக்காக உழைத்தவர்...180 நூல்களை எழுதி உள்ளார்

மிழ் மொழிக்காகவே வாழ்வின் கடைசி காலம் வரையிலும் உழைத்த முதுபெரும் தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் இன்று காலமானார்.
தமிழ் மொழியின் மீதும் தமிழர்கள் மீதும் அளப்பறிய பற்றுக் கொண்டு செயல்பட்டவர்களில் மிக முக்கியமானவர், ச.வே.சுப்பிரமணியன். இலக்கியங்கள் மீது இவருக்கு இருந்த ஆளுமையின் காரணமாக 180 நூல்களை எழுதி உள்ளார். தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் இவர் புலமை வாய்ந்தவர். அதனால் ஆங்கிலத்தில் 8 நூல்களையும் மலையாளத்தில் ஒரு நூலும் எழுதி உள்ளார்.

அநேகமாக தமிழகத்தில் அவரது காலடித் தடம் பதியாத பல்கலைக் கழகங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து பல்கலைக் கழகங்களிலும் அறக்கட்டளைச் சொற்பொழிவை நிகழ்த்தி உள்ளார். இவரது ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை இருநூற்றைத் தாண்டும்.. இவரிடம் ஆலோசனை பெற்று முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 50-க்கும் அதிகம்.
தமிழ் மீது உள்ள பற்று காரணமாக அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே தமிழூர் என்ற கிராமத்தை அவரே உருவாக்கினார். அங்குள்ள தமிழ் நகரில் ‘தமிழகம்” என்ற இல்லத்தில் வசித்து வந்தார். 87 வயதான நிலையிலும் தமிழுக்கு தொண்டு செய்து வந்த ச.வே.சுப்பிரமணியன், கடந்த 4-ம் தேதி சாலையில் நடந்து சென்றபோது வாகனம் மோதியதில் காயமடைந்தார். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானார்.
நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூரில் 1929 டிசம்பர் 31-ம் தேதி, சு.சண்முக வேலாயுதம், ராமலட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் ச.வே.சுப்பிரமணியன். தொடக்கக் கல்வியை விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள திருஇருதய மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். உயர்நிலைப் பள்ளிக்கல்வியை அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர், இடைநிலைக் கல்வியை ம.தி.தா இந்துக் கல்லூரியில் பயின்ற அவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் படித்தார். முனைவர் பட்டத்தை கேரள பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு முடித்தார்.
தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் 1953-ல் பணியைத் தொடங்கிய அவர், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, திருவனந்தபுரம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருந்தது. சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநராகவும் செயல்பட்டார். நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 1969-ல் திருவள்ளுவர் கல்லூரி உருவாக்க காரணமாக இருந்தார்.
தமிழகத்தில் பல கருத்தரங்குகளில் இவர் ஆய்வுக் கட்டுரைகளை படித்துள்ளார். அத்துடன், இலங்கை, ஜெர்மனி, போலந்து, ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கும் சென்று ஆய்வுக் கட்டுரைகளையும் சிறப்பு சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி உள்ளார். இவர், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிந்த காலத்தில், பல ஆய்வு நூல்களை வெளியிட்டார். இவரது நூல்கள் பல்வேறு பலகலைக்  கழகங்களிலும் கல்லூரி மாணவர்களுக்கு பாடநூலாக உள்ளது.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழூர் என்ற கிராமத்தை உருவாக்கினார். அங்கு இவரது வீட்டில் பல அரிய நூல்கள் இருந்ததால் எப்போதும் அங்கு மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களால் நிறைந்து இருக்கும். இவர், செந்தமிழ்ச் செம்மல், நல் அறிஞர், தமிழாசுரர், தமிழ் இயக்கச் செம்மல், தொல்காப்பியச் செம்மல் என பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்று உள்ளார். 1999-ல் சாகித்ய அகாடமி சார்பாக இவருக்கு ‘பாஷாசம்மன்” என்ற உயரிய விருது வழங்கப்பட்டது. தமிழ் மொழிக்காக பங்காற்றியதைக் கவவுரவிக்கிற வகையில் இந்த விருது சாகித்ய அகாடமியால் வழங்கப்பட்டது. அதன் பின்னர், இதுவரையிலும் தமிழ் மொழிக்காக வேறு எழுத்தாளர் யாருக்கும் இந்த விருது வழங்கப்படவில்லை.
இவர், இலக்கிய நினைவுகள், சிலம்பின் சில புரல்கள், இலக்கிய கனவுகள், மாந்தர் சிறப்பு, ஒன்று நன்று, இலக்கிய உணர்வுகள், கம்பன் கற்பனை, கம்பன் கவித்திறன், இளங்கோவின் இலக்கிய உத்திகள், தமிழ் இலக்கிய வரலாறு, சிலப்பதிகார இசைப்பாடல்கள் என நூல்களின் வரிசை சென்று கொண்டே இருக்கிறது. ஆங்கிலத்தில், சிலப்பதிகாரத்தின் இலக்கணம், அகநானூறு இலக்கணம், தமிழ் இலக்கிய ஆய்வுகள் என 9 நூல்களை எழுதி இருக்கிறார். சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டத்தை மலையாள மொழியில் மொழிபெயர்த்து உள்ளார்.
இவரது வாழ்க்கை வரலாற்று நூல்களாக ’தமிழ் ஞாயிறு, சாதனைச் செம்மல்” மற்றும் தமிழ்ச் செம்மல் வ.வே.சு” என இரு படைப்புக்கள் வெளிவந்து உள்ளன. வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்த ச.வே.சுப்பிரமணியன் மறைவுக்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும் தமிழ் ஆர்வலர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இவரது பெயரை அவரது படைப்புக்கள் காலம் கடந்தும் நினைவுகூரும் என்பது நிச்சயம்.
- ஆண்டனிராஜ்,விகடன் 

கருத்துகள் இல்லை: