செவ்வாய், 17 ஜனவரி, 2017

நடராஜன்: அ.தி.மு.கவை உடைக்க மோடி சூழ்ச்சி!... நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம்!


தஞ்சையில் நடந்த பொங்கல் விழா நிறைவு நாள் விழாவில் நேற்று பேசிய ம.நடராஜன் “ மோடி அதிமுகவை உடைத்து, தமிழகத்தை காவி மயமாக்க முயற்சி செய்கிறது. அந்த எண்ணம் நிறைவேறாது” என்று பேசியதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சை தமிழ்ச் சங்கமும், மருதப்பா அறக்கட்டளையும் இணைந்து ம.நடராஜன் தலைமையில் ஆண்டு தோறும் பொங்கல் விழாவை கொண்டாடி வரும் நிலையில் இந்த வருட விழா 14, 15, 16 தேதிகளில் தஞ்சை தமிழ்அரசி மண்டபத்தில் நடந்த நிலையில், விழாவின் துவக்க நாளான 14-ஆம் தேதி துவக்க உரையாற்றிய சசிகலாவின் தம்பி திவாகரன் ““நாங்கள் நேற்று பெய்த மழையில் வளர்ந்த காளான்கள் அல்ல. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிக்காக உழைத்து உள்ளோம். கட்சியை உடைக்க சதி நடக்கிறது.அப்படி உடைக்க இது ஒன்றும் பெரியவா கட்சி இல்லை. அப்படி உடைப்பது எங்கள் பிணத்தின் மீதுதான் நடக்கும்., நாங்கள் உயிர் உள்ளவரை அது நடக்க விட மாட்டோம். காவிரி நீர், ஜல்லிக்கட்டு, புயல் நிவாரணம், வறட்சி நிவாரணம் என அனைத்திலும் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துக் கொண்டு இருக்கிறது” என்று பேசிய திவாகரனுடைய பேச்சின் மையமாக இருந்தது பாஜக எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு.


(பொங்கல் நிறைவு நாள் விழா மேடையில் நடராஜன். நெடுமாறன், காசி ஆனந்தன்)
இந்தப் பேச்சு அதிமுகவினரிடையே,மோதல்களை உருவாக்கியிருந்தாலும் இதனுடைய அடுத்தக் கட்ட நிகழ்வாக அமைந்திருக்கிறது ம.நடராஜனின் பேச்சு. பொங்கல் விழாவின் நிறைவு நாள் நிகழ்வுகள் நேற்று (16-01-2017) நடந்தது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அந்த விழாவில் பேசிய ம.நடராஜன் “ ஜெயலலிதாவை முதலமைச்சராக்கியது நான் தான்.ஜெயலலிதா ராஜினாமா செய்வதாக எழுதிய கடிதத்தை பிடுங்கி எறிந்தது நான்தான். ஜெயலலிதாவை முதல்வராக்க பாடுபட்டது நான்தான். ஜெயலலிதாவை எனது மனைவி 36 ஆண்டுகளாக தோளில் சுமந்து வாழ்ந்து வந்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் நல்ல சிந்தனையோடு இருந்தார். ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவமனை அனைத்து தகவல்களையும் வெளியிட்டது.
முதலமைச்சராக வரும் வரை ஜெயலலிதாவை யாரும் ஏற்கவில்லை. அப்போது ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன் கூட ஏற்கவில்லை. எம்.ஜி.ஆர்., மறைந்தபோது நாங்கள்தான் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பாக இருந்தோம். . எனவே நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம், மாட்டேன் என்று சொல்லவில்லை. காங்கிரஸ் இயக்கத்தையே பார்த்தவன் நான். சாதி, மத வேறுபாடுகளை தூண்டி விட முயற்சிகள் நடக்கிறது. ஓ.பி.எஸ் தலைமையில் சிறப்பான ஆட்சியே நடக்கிறது. அதிமுகவை உடைக்க முயற்சி செய்கிறது பா.ஜ.க. தமிழகத்தை காவி மயமாக்கும் மத்திய அரசின் எண்ணம் நிறைவேறாது. பாஜகவின் எதிர்ப்பை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். எங்களுக்கு எப்போதுமே போலீசார் பாதுகாப்பு அளித்தது இல்லை. ஆனால், குருமூர்த்தி பின்னால் எதற்கு அவ்வளவு போலீசார். அவரை நான் நேர் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். “ என்று பேசினார்.
பின்னணி
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்தே அதிமுகவைக் கைப்பற்ற பாஜக முயல்கிறது என்ற குற்றச்சாட்டுகள் அரசியல் தளத்தில் முன் வைக்கப்பட்டது. ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து வந்த திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய போதே மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாகவே இந்த ஒப்புதல் என்ற விமர்சனங்கள் எழுந்தன.
அது போல, ஜெயலலிதா மறைவின் போது மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு அடக்கம் முடியும் வரை அங்கேயே இருந்ததோடு. ஜெயலலிதா உடலை எடுத்துச் செல்ல ராணுவ வாகனத்திற்கு ஏற்பாடு செய்ததோடு. “நாங்கள்தான் ராணுவ வாகனம் ஏற்பாடு செய்தோம்” என்று ஊடகங்களுக்கும் சொன்னார்.
அதிமுகவும் நாங்களும் கொள்கையளவில் ஒன்று பட்டவர்கள். பல ஒற்றுமைகள் உண்டு என்று பாஜகவின் தேசிய தலைவர்களும், மாநில தலைவர்களும் பேசிய பேச்சுகள் பல சந்தேகங்களை எழுப்பிய நிலையில், தீடீரென அதிமுக தலைமைக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு அதையடுத்து அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் வீட்டிலும், வரலாற்றில் இல்லாதபடி தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது.

அது அதிமுக தலைமைக்கு மத்திய அரசு விடுத்த எச்சரிக்கையாகவே பார்க்கப்பட்டு வந்த நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகி விட்ட சசிகலாவை முதல்வராக விடாமல் தடுக்க பல சதிகள் நடப்பதாக செய்திகள் வெளியாகின.
அதே போல தீபாவைப் பற்றி தேசிய செயற்குழு கூட்டத்திற்குச் சென்ற தமிழக தலைவர்களிடம் அமித்ஷா விசாரித்த நிலையில், தீபாவுக்கு ஆதரவாக செயல்படச் சொல்லி பாரதீய ஜனதா தமிழக தலைவர்களுக்கு அமித்ஷா உத்தரவிட்டிருக்கிறார்.தீபாவுக்கு ஆதரவாகப் பேசிய இன்னொரு முக்கிய பிரமுகர் குருமூர்த்தி. இவர்கள் கொடுக்கும் உற்சாகத்தில்தான் தீபா இன்று தன் முதல் அரசியல் நற்பணியை துவங்க இருக்கிறார். இந்த பின்னணிகளை எல்லாம் அறிந்த நடராஜனும், திவாகரனும் தங்கள் உள்ளக்குமுறலை பொங்கல் விழாவில் கொட்டியிருக்கிறார்கள். ஆனால் பன்னீர்செல்வத்தை நடராஜன் பாராட்டியிருந்தாலும். அவரது ஆசை எப்படியாவது சசிகலாவை முதல்வராக்கி விடுவதுதான் என்கிறது அதிமுகவின் உள் வட்டார தகவல்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: