வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

பாவனா கடத்தல் .. பின்னணியில் நடிகர் திலீப் ?



நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான பல்சர் சுனில் சரணடைந்ததைத் தொடர்ந்து மேலும் இருவர் கோவையில் கைது செய்யப்பட்டனர். பின், பாலக்காடில் பதுங்கியிருந்த மணிகண்டன் என்பவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மணிகண்டனை கொச்சிக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘கேரள திரையுலகில் நடிகர், நடிகைகளுக்கு கார் டிரைவர்கள் ஏற்பாடு செய்து கொடுக்கும் சுனில் குமாருடன் எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. அவர் கூறும் செயல்களை நான் செய்துமுடிப்பேன். அதற்கு அவர் பணம் கொடுப்பார்.
கடந்த 16ஆம் தேதி இதுபோல ஒரு வேலை இருப்பதாகக் கூறினார். மறுநாள் 17ஆம் தேதி திருச்சூர் வரும்படியும் தெரிவித்தார். என்ன வேலை என்பதை சுனில்குமார் கூறவில்லை. 17ஆம் தேதி அங்கு போனபின்பே நடிகை பாவனாவை கடத்துவதுதான் வேலை என்பதைத் தெரிந்துகொண்டேன். நாங்கள் பாவனாவை கடத்தியதும் சுனில்குமாருக்குத் தெரிவித்தோம். அவர், வழியில் காரை நிறுத்தி ஏறிக்கொண்டார். அவர் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு அவரை மிரட்டவும் செய்தார். பாவனா கடத்தப்பட்டதும் சுனில்குமார், ஒருவரிடம் செல்போனில் பேசியதோடு, குறுந்தகவலும் அனுப்பினார். அந்த நபர் யார் என்பது எனக்குத் தெரியாது.
நாங்கள் பாவனாவுடன் காரில் சுமார் 2 மணி நேரம் இருந்தோம். இந்த கடத்தல் வேலை முடிந்ததும், நாங்கள் காரிலிருந்து இறங்கிக் கொண்டோம். மறுநாள் சுனில்குமாரை சந்தித்தோம். ஆனால் அவர் கடத்தலுக்கான பணம் தரவில்லை. மாறாக, இந்தச் சம்பவம் போலீசாரின் கவனத்துக்குச் சென்றதை தெரிவித்தார். எனவே நாங்கள் தலைமறைவாகிவிட்டோம். ஆனால் போலீசார் என்னை பாலக்காடு பகுதியில் வைத்துப் பிடித்துவிட்டனர்’ என்று தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
மணிகண்டன் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை மீண்டும் போலீஸ் காவலில் எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மணிகண்டன் கூறிய தகவல்கள் உண்மைதானா? என்பதைக் கண்டறியும் பணியும் நடக்கிறது. இதற்காக மணிகண்டன் மற்றும் சுனில்குமாரின் செல்போன் எண்களை வைத்து சம்பவம் நடந்த நாளில் அவர்கள் யார், யாரிடம் பேசினார்கள்? என்னென்ன குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டன? என்பதைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் அரசியல் பிரமுகர் மற்றும் பிரபல நடிகருக்கு தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரபரப்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: