வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

பாவனா முரண்டு பிடித்ததால் பாலியல் தொல்லை கொடுத்தோம்.. பல்சர் சுனில் தகவல்

பாவனா முரண்டு பிடித்ததால் பாலியல் தொல்லை கொடுத்தோம்: முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் தகவல்பணம் பறிக்க திட்டமிட்டு பாவனாவை கடத்தினோம். அவர் முரண்டு பிடித்ததால் பாலியல் தொல்லை கொடுத்தோம் என்று முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் கூறினார்.
பிரபல நடிகை பாவனா கடந்த 17-ந்தேதி காரில் கடத்தப்பட்டார். ஒரு மலையாள படத்தின் படப்பிடிப்பு முடிந்து திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் சென்றபோது இச்சம்பவம் நடந்தது. அவரை காரில் கடத்திய கும்பல் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு அதனை செல்போனிலும் படம் பிடித்தனர். இதுபற்றி பாவனா கொடுத்த புகாரின் பேரில் கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில் கோவையில்இருந்து 2 பேரும் பாலக்காட்டில் இருந்து மணிகண்டன் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், விஜேஷ் இருவரும் தலைமறைவாக இருந்தனர். இவர்கள் கோர்ட்டில் சரண் அடையலாம் என்று போலீசாருக்கு ரகசியதகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் எர்ணாகுளம் கோர்ட்டு முன்பு மாறு வேடத்தில் சுற்றி வந்தனர்.


நேற்று மதியம் 12.50 மணிக்கு சுனில்குமாரும், விஜேசும் தமிழக பதிவு எண் கொண்ட பல்சர் பைக்கில் எர்ணாகுளம் கோர்ட்டுக்கு வந்தனர். அங்கு கூடுதல் முதன்மை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைய சென்றனர்.
அப்போது நீதிபதி மதிய உணவுக்காக வெளியே சென்று விட்டார். இதனால் சரண் அடைய முடியாமல் காத்திருந்த அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
சுனில்குமாருடன் விஜேசும் பிடிபட்டார். இருவரையும் போலீசார் ஆலுவா போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் நடிகை பாவனா கடத்தல் சம்பவம் மற்றும் இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது பற்றி விசாரித்தனர்.
இதற்கு சுனில்குமார் பதில் அளிக்க மறுத்தார். போலீசார் அவரிடம் ஏற்கனவே கைதானவர்கள் சம்பவம் பற்றியும் அதில், சுனில்குமாரின் பங்கு பற்றியும் தெளிவாக கூறி விட்டனர். எனவே நீயும் உண்மையை தெரிவித்து விடு என்று எச்சரித்தனர்.
போலீசார் கூறியதை கேட்டதும் சுனில்குமார் பதறிப்போனார். அதன் பிறகு அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
நடிகை பாவனாவிடம் ஏராளமாக பணம் இருந்தது எனக்கு தெரியும். அந்த பணத்தை பறிக்க திட்டமிட் டேன். இதற்காகவே நண்பர்களுடன் சேர்ந்து அவரை கடத்தி பணம் பறிக்க முடிவு செய்தேன். சம்பவத்தன்று நண்பர்களுடன் அவரை கடத்தினேன். காருக்குள் வைத்து அவரை மிரட்டினோம். பணம் தராவிட்டால் விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டுமென்று எச்சரித்தோம். ஆனால் அவர் எங்களிடம் முரண்டு பிடித்தார்.
அவரை வழிக்கு கொண்டு வர பாலியல் தொல்லை கொடுத்தோம். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை. நானும் வேறு பிரமுகர்களுக்காக இதை செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சுனில்குமாரின் வாக்கு மூலத்தை போலீசார் நம்பவில்லை. அவர், எதையோ மறைக்கிறார் என்று எண்ணினர்.
நீங்கள் பாவனாவிடம் இச்சைக்கு அடிபணிய வேண்டும் என்று கேட்டதாகவும், அதற்கு மறுத்தால் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு கொண்டு சென்று அங்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்வோம் என்றும் அதனை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுவோம் எனவும் மிரட்டியதாக ஏற்கனவே இந்த வழக்கில் கைதான மணிகண்டன் எங்களிடம் கூறி உள்ளார். ஆனால் நீங்கள் இதுபற்றி எதுவும் கூறவில்லையே? என்றனர். அதற்கு சுனில்குமார் பதில் தெரிவிக்காமல் மவுனமாக இருந்தார்.

இதையடுத்து போலீசார் நேற்றைய விசாரணையை முடித்துக்கொண்டனர். அவரை இன்று எர்ணா குளம் கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறார்கள். பின்னர் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
அப்போது பாவனா வழக்கில் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் பற்றிய விவரம் தெரியவரும் என்று போலீசார் நம்புகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.  மாலைமலர்

கருத்துகள் இல்லை: