செவ்வாய், 25 ஏப்ரல், 2017

தவறாக புரிந்து கொள்ளாதீர் ! கேரள அமைச்சர் தமிழ் பெண்களை வேசிகள் என்றாரா? ஒரு விளக்கம்!

நந்தகுமாரன்: நேற்றைய தினம் தொழிலாளி வர்க்கத்தை அவமானப்படுத்தும் வகையில் பேசும் ஒரு நபர் எப்படி ஒரு கம்யூனிஸ்ட் ஆகவும், அதன் தலைவராகவும் இருக்க முடியும் என்று கேட்டு, கேரள மின் துறை அமைச்சரும், மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் கேரளா மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர்.எம்.எம்.மணியை குறித்து கேள்வி எழுப்பியிருந்தேன்.
அதன் பின்னரே, அடிமாலியில் அவர் பேசிய உரையின் வீடியோவைக் காண நேர்ந்தது. தொடர்ந்து, அவரது உரையை முழுமையாக கவனித்தால், மூணாறில் புறம்போக்கு பகுதியை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த சிலுவையை அகற்றிய சப்-கலெக்டர் மற்றும் மாவட்ட கலெக்டரைப் பற்றி விமர்சனங்கள் மட்டுமே நீளுகிறது.
“இடுக்கி மாவட்டத்தில் சிலுவைகளும், இந்து கோயில்களும், முஸ்லீம் பள்ளிகளும் புறம்போக்கு பகுதிகளில் தான் அமைக்கப்படுவது வழக்கம். அதை இடித்து அப்புறப்படுத்துவதென்பது சப்-கலெக்டரின் தலைக்கு சரியில்லாத நடவடிக்கை…” என தொடர்கிறார்.

அடுத்துப் பேசும் போது, இந்த அதிகாரிகள் அரசு விருந்தினர் இல்லத்தை மது போதைக்கும், தவறான பெண்களுடன் சகவாசம் வைத்துக் கொள்ளவும் பயன்படுத்திக் கொண்டனர் என்றும் குற்றஞ்சாட்டுகின்றார்.
இனி அவரது உரையின் தமிழாக்கத்தை அப்படியே தருகிறேன் “ அங்கு இவனது கூடவே, சப்- கலெக்டரின் கூடவே தான் மாலை நேரம். அப்போது சுரேஷ்குமார் வந்து கள்ளு குடிப்பது. கீஸ் கணக்கில் பிராந்தி. எங்கே பூனை ? பழைய நமது பூனை ? அரசு விருந்தினர் மாளிகையில் குடியும், சகல வேலைகளும் நடந்தது. பெம்பிளை ஒருமை நடந்த அன்றும் குடியும் சகல மோசமான வேலைகளும் அங்கு நடந்ததுண்டு. புரியவில்லையா ? அந்த வனத்தின் அருகேயுள்ள காட்டில் வைத்து தான் வேலை. அன்று ஒரு டிஎஸ்பி இருந்தார். எல்லாரும் சேர்ந்து சேர்ந்து..இதெல்லாம் எங்களுக்கு தெரியும். புரியவில்லையா ? நான் நேற்றைக்கு அங்கே சொன்னது போல ஊடகக்காரர்களும் கூடவே அங்கு இருந்தார்கள். ஆஹா ..இந்த ஆளுக்கு அதை மறுக்க முடியுமோ ? ஆஹா.. மேலும் பல நான் அறிவதுண்டு. நான் அதையெல்லாம் பேசவில்லை.” எனக் கூறுகிறார்.
அவரது உரையின் முழுச்சாரமே, சப் கலெக்டர் , முன்னாள் மாவட்ட கலெக்டர் மற்றும் ஊடகத்தினரை குறி வைத்தே அமைந்துள்ளது. பொம்பிள ஒருமை போராட்டத்தைப் பற்றியோ அல்லது அந்த போராட்டத்தில் பங்கெடுத்த அல்லது தலைமையேற்றவர்களை பற்றியோ எந்தவித கருத்தும் இதனிடையே எங்குமே வரவில்லை. “ பொம்பிள ஒருமை” போராட்டம் நடந்த காலக்கட்டத்திலும் இது போன்ற சம்பவங்கள் அதிகாரிகள் ஊடகத்தினர் மட்டத்தில் அந்த அரசு விருந்தினர் இல்லத்தில் நடந்தது என்ற பொருளையே அவரது பேச்சு தருகிறது. இதில் திருத்த வேண்டியது அவரது பேச்சு நடையை மட்டும் தான்.

கேரள அமைச்சர் எம். எம். மணி
இதில் வேடிக்கை என்னவென்றால், அடிமாலியில் அவரது பேச்சை அன்றிரவே, காமெடி நிகழ்ச்சியாக ஒளிபரப்பியது மலையாள மனோரமா சேனல். அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய பத்திரிக்கையாளர் தோமஸிற்கு, இவையெல்லாம் கேட்டபின்னும் சப்-கலெக்டரை விமர்சித்த மணியாகவே தெரிந்தார். ஆனால், அதே பத்திரிக்கையாளர், மறு நாள் காலையில், சப் கலெக்டர் போய், பெம்பிள ஒருமை அமைப்பை சேர்ந்தவர்களை வேசித்தனம் செய்யும் பெண்களாக மணி சித்தரித்ததாக புது விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆக, வேசித்தனம் செய்ததாக மணி குற்றம் சாட்டிய அதிகாரிகளை விட்டுவிட்டு பெண்கள் என்ற ஒரே காரணத்திற்காக உள் நோக்கத்துடன் ஒரு முடிச்சை போட்டிருக்கிறார் அந்த பத்திரிக்கையாளர்.
மற்றொரு சம்பவம் ஒன்றையும் கவனிக்க வேண்டும். தமிழ் பெண்கள் வேசிகள் எனக் கூறிவிட்டார் கேரள அமைச்சர் என்ற தகவலுடன் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில்
நிலைத் தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஆனால், நான் மேல் குறிப்பிட்டுள்ளதைப் போன்று வேசித்தனம் செய்த அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டை விட்டுவிட்டு, பெம்பிள ஒருமை அமைப்பினர் பெண்கள் என்பதாலேயே அதுவும் தமிழ் பேசுவதால், முன்பின் ஆராயாமல் பெண்களைத்தான் வேசித்தனம் செய்தார்கள் என்று குறிப்பிடுவது உங்கள் மனதில் உள்ள ஆணாதிக்கத்தை தவிர்த்து வேறென்னவாக இருக்க முடியும் என்பது தான் எனது கேள்வி.
மணியை பொறுத்தவரை, மாற்ற வேண்டியது அவரது பேச்சு நடையை தவிர அவரது கருத்தில் பெம்பிள ஒருமைக்கு எதிரான எந்தவித உள் நோக்கமும் இல்லை. அமைச்சர் மணி, அதிகாரிகளின் வேசித்தனத்தை தான் கூறியுள்ளாரே தவிர பெண் போராளிகளின் வேசித்தனத்தையல்ல. அதை கிராமத்தான் நடையில் பேசிய அவரது உரைக்கு மோசமான வியாக்கியான்ங்கள் தேவையில்லை என்பதே எனது கருத்து.
அத்தகைய வியாக்கியானங்கள், கீழ்த்தரமான அரசியலுக்கும், தமிழை வைத்து பிழைப்பை ஓட்டுவதற்கும் தான் பயன்படும். மற்றபடி எதுக்கும் பயனில்லை. thetimestamil.com

கருத்துகள் இல்லை: