புதன், 26 ஏப்ரல், 2017

பாஜகவுக்கும் தினகரன் சசிகலா கோஷ்டிக்கும் என்னதான் தகராறு ? கேள்விகள் இன்னும் கேள்விகளாகவே இருக்கிறது?

டிஜிட்டல் திண்ணை : தினகரன் கைது - சசிகலா ரியாக்‌ஷன்!“தினகரன் கைது
செய்யப்பட்டுவிட்டார். அவர் கைது செய்யப்பட்ட தகவல் இன்று காலை 11 மணி அளவில்தான் சசிகலாவுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை பார்க்க வழக்கம் போல இளவரசி மகன் விவேக் சென்ற போதுதான் தினகரன் கைது செய்யப்பட்ட தகவலை சொல்லி இருக்கிறார். ‘நான் சொன்னதை அவன் கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. இப்போ அனுபவிக்கட்டும். அக்கா இறந்த பிறகு நான் கட்சியை எவ்வளவு கட்டுக்கோப்பா வெச்சிருந்தேன். இவன்கிட்ட கொடுத்து எல்லாத்தையும் ஒன்னுமில்லாம பண்ணிட்டான். இப்போ அவனும் உள்ளே போயிட்டான். எல்லாமே அவனாலதான் இப்படி ஆச்சு. இனி யாரை சொல்லி என்ன ஆகப் போகுது?’ என்று வருத்தப்பட்டிருக்கிறார். அப்போதுதான் விவேக், ‘கட்சி ஆபீஸ்ல இருந்து அவரோட படம், உங்க படம் எல்லாத்தையும் அகற்றிட்டாங்க... கட்சி
மொத்தமா அவங்க கட்டுப்பாட்டுல போயிடுச்சு...’ என்று சொல்லியிருக்கிறார். ‘போட்டோவை தூக்கினா தூக்கிட்டு போகட்டும். இதுக்கெல்லாமே காரணம், தினகரன்தான்!’ என்று சசிகலா சொன்னதாக சொல்கிறார்கள். அடுத்த கட்டமாக என்ன செய்வதென புரியாத குழப்பத்தில்தான் சசிகலாவும் இருக்கிறார்.”


தொடர்ந்து வாட்ஸ் அப்பில் அடுத்த மெசேஜ்ஜும் வந்தது. “கைது செய்யப்பட்ட தினகரனை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எடப்பாடி அணியையும், பன்னீர் அணியையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை இன்னும் முடிவை எட்டாத சூழ்நிலையில் தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். ’தினகரனை நாம் ஏற்கெனவே கட்சியிலிருந்து விலக்கி வைப்பதாக அறிவித்துவிட்டோம். இப்போது அவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுவிட்டார். இனி அவரைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. தினகரன் குடும்பத்தை நாம் விலக்கி வைப்பதாக அறிவிச்சதே பொதுமக்களிடம் நல்ல பெயரை உண்டாக்கி இருக்கு. பன்னீர் தரப்பில் உப்பு சப்பில்லாத காரணங்களை எல்லாம் சொல்லி பேச்சுவார்த்தையை தள்ளிப் போடுறாங்க. அவங்க சொல்ற மாதிரி முதல்வர் பதவியை நாம் விட்டுத்தரக் கூடாது. துணை முதல்வர் என்பதுதான் சரியாக இருக்கும்..’ என்று தங்கமணி சொல்லியிருக்கிறார். பன்னீர் தரப்பிலும் பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எல்லோரும் தினமும் காலை 11 மணிக்கு பன்னீர் வீட்டுக்கு வருகிறார்கள்.

ஏற்கெனவே, கே.பி.முனுசாமி, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட சிலர் இணைப்புக்கு முட்டுக்கட்டை போடுவதை போலவே பேசுவதாக செய்தி வந்தது. இன்றும் பன்னீர் வீட்டில் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கே.பிமுனுசாமி பேசும்போது, ‘தினகரனை கைது செய்தது அவங்களுக்கு மிகப் பெரிய கெட்ட பெயரை உண்டாக்கி இருக்கு. தினகரனை அவங்க ஒதுக்கி வைக்கிறோம்னு சொல்லாமல் இருந்திருந்தால் இப்போது இன்னும் அசிங்கமாகி இருக்கும். தினகரன் குடும்பத்துடன் அமைச்சர்கள் சிலர் இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால்தான் அவரை கட்சியில் இருந்து நீக்கச் சொன்னோம். நாம முன்வைத்த கோரிக்கையிலிருந்து நாம் எந்தக் காரணத்துக்காகவும் பின் வாங்கக்கூடாது. பன்னீர் அண்ணன்தான் முதல்வர். அவர்தான் பொதுச் செயலாளர். இதுக்கெல்லாம் அவங்க ஓ.கே. சொல்ற வரைக்கும் வெய்ட் பண்ணலாம். நம்மை தவிர்த்துட்டு அவங்களால எதுவும் செய்ய முடியாது’ என்று சொல்லி இருக்கிறார். ‘இதுக்கெல்லாம் அவங்க சம்மதிப்பாங்களா?” என்று ஜேசிடி பிரபாகர் கேட்டிருக்கிறார். ‘நாம சொன்னதுதான் இப்போ நடக்குது. அதனால இன்னும் கொஞ்சம் பொறுத்தால் எல்லாம் நடக்கும்!’ என்று முனுசாமி சொல்லியிருக்கிறார். அணிகள் இணைவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது முனுசாமிதான் என்ற குரல் இப்போது அதிமுக வட்டாரத்தில் வெளிப்படையாகவே கேட்க ஆரம்பித்துள்ளது.” என்று முடிந்த மெசேஜ்ஜை காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் போஸ்ட் செய்தது.
“டிடிவி தினகரன் மனைவி அனுராதா ஜெயா டிவிக்கு போவதும் வருவதுமாக இருந்தார். தினகரனுக்கு சிக்கல் வந்த பிறகு அனுராதா அந்தப் பக்கம் போகவில்லை. வீட்டிலிருந்தபடியே ஜெயா டிவிக்கு பேசுவதும் இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுப்பதுமாக இருந்தார். தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக அறிவித்த பிறகு, அனுராதாவிடம் இருந்து ஜெயா டிவிக்கு போன் வந்திருக்கிறது. ‘ஆட்சியும் கட்சியும் நல்லா இருக்கணும்னா சின்னமா பொதுச் செயலாளராக இருக்கணும். தினகரன் துணைப் பொதுச் செயலாளராக இருக்கணும் என்று தமிழ்நாடு முழுக்க கட்சி நிர்வாகிகளிடம் பேட்டி வாங்கச் சொல்லுங்க. அதை திரும்பத் திரும்ப ஒளிபரப்புங்க...’ என்று சொல்லி இருக்கிறார். ஜெயா டிவி அலுவலகத்தில் இருந்து நிருபர்களுக்கு தகவல் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால், முக்கிய நிர்வாகிகள் யாரும் அப்படி பேட்டி கொடுக்கவே இல்லையாம். பேருக்காக ஆட்களை பிடித்து பேட்டி எடுத்து அனுப்பி இருக்கிறார்கள் ஜெயா டிவி செய்தியாளர்கள். அந்த பேட்டிகளை எல்லாம் ஒழுங்குபடுத்தி அனுராதா பார்வைக்கு அனுப்பிய பிறகு, ஒளிபரப்பி வருகிறார்களாம். தினகரன் சிறைக்கு சென்றுவிட்டார். இனி அனுராதாவிடமிருந்து வரும் உத்தரவுகளை பின்பற்றலாமா, என ஜெயா டிவி ஊழியர்கள் சற்று குழப்பத்தில்தான் இருக்கிறார்களாம்”மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: