வெள்ளி, 28 ஏப்ரல், 2017

செய்தியாளர்களை அறையில் வைத்து பூட்டி விட்டு எடப்பாடியை வெளியே அழைத்துச்சென்ற அதிகாரிகள்!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில், இன்று காலை 10-00, மணிக்கு, முல்வர் எடப்பாடி பழனிசாமி தலமையில் மாவட்ட அலுவலர்கள் கூட்டம் நடந்தது. கூட்ட முடிவில், செய்தியாளர்களுடன் முதல்வர் சந்திப்புக்கு திட்டமிட்ட மக்கள் தொடர்பு அலுவலர் சாமிநாதன், ஆட்சியர் அலுவலகத்தின் கீழ் தளத்தில் முதல்வர் உட்கார நாற்காலி போட்டு வைத்தனர். மதியம் ஒரு மணிக்கு கூட்ட அரங்கிலே செய்தியாளர்கள் சந்திப்பு நடக்கவுள்ளதாக கூறி செய்தியாளர்கள் அனைவரையும் மேலே உள்ள கூட்ட அறைக்கு அழைத்துச் சென்றனர். பிறகு, கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த அறிக்கையை முதல்வர் படித்து முடித்தார். முதல்வர் பேசி முடித்து வெளியே செல்லும்போது, அவருடன் பின்னாலேயே சென்று, அரசின் திட்டம் தவிர வேறு கேள்விகள் கேட்கக்கூடாது என்ற நோக்கத்தில், குறிப்பாக, கொடநாடு பங்களா காவலாளி மரணம் மற்றும் இரு அணிகள் இணைப்பு, தினகரன் கைது குறித்த கேள்விகளை நேருக்கு நேர் கேட்டு மைக்கை நீட்டிவிடக்கூடாது என்பதற்காக, செய்தியாளர்கள் இருந்த அறையை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு, முதல்வரை வெளியே அழைத்து சென்றனர். காலை 10. 00 மணியில் இருந்து முதல்வரிடம் மனு கொடுக்க காத்திருந்த 50-க்கும் அதிகமான மக்களிடமும் முதல்வர் மனு வாங்காமலே காரில் ஏறிச்சென்றார். - சிவசுப்பிரமணியன் நக்கீரன்

கருத்துகள் இல்லை: