வியாழன், 25 மே, 2017

ஜந்தர் மந்தர்... பீம் ஆர்மி தலித் எழுச்சிக்கு வழி கோலுகிறதா? சகரான்பூர் எரிகிறது – ஆதித்யநாத்துக்கு ஆப்பு

Has the Bhim Army emerged as the new face of Dalit uprising in an effort to fill the vacuum created by a sinking BSP or is it just political proxy? On Reality Check, we debate whether the new Dalit assertion in UP is a response to the Yogi Adityanath government.

பீம் ஆர்மிக்குப் பின்னால் நக்சலைட்டுகள் இருக்கிறார்கள்” என்று சந்தேகிப்பதாக உ.பி அரசு கூறியிருக்கிறது. இந்தப் பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சும் நிலையில் தலித் மக்கள் இல்லை.
கரான்பூர் எரிகிறது. மதவெறியைத் தூண்டும் பேச்சுக்கு புகழ் பெற்ற முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “வெறியூட்டும் பேச்சுக்கு பலியாகாதீர்கள்”  என்று தொலைக்காட்சியில் வேண்டுகோள் விடவேண்டிய நிலமைக்கு ஆளாகியிருக்கிறார்.
144 தடை உத்தரவு, இணைய சேவைகள் முடக்கம், எஸ்.எம்.எஸ் சேவைகள் முடக்கம், மாவட்ட ஆட்சியர் மாற்றம், சீனியர் போலீசு சூப்பிரெண்டு மாற்றம், டி.ஐ.ஜி மாற்றம் – இவையெல்லாம் வரலாறு காணாத தனிப்பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சி அமைத்த உ.பி மாநிலத்திலிருந்து வரும் செய்திகள்.
சகரான்பூர் மேற்கு உ.பியில் உள்ள மாவட்டம். இந்த மேற்கு உ.பி-யில் முசாபர்நகரில்தான் இசுலாமியர்களுக்கு எதிராக மத வன்முறையைத் தூண்டி நாடாளுன்றத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றியது மோடி – அமித் ஷா கூட்டணி.

இந்த ஏப்ரல் மாதம் அம்பேத்கர் ஜெயந்தியை ஒட்டி தலித் – முஸ்லிம் மோதலை உருவாக்க இதே மாவட்டத்தை சேர்ந்த “சதாக் துத்லி” என்ற ஊரில் பாஜக முயன்றது. முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலும் நடந்தது. இதனையொட்டி ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக பாஜக வின் பேரணிக்கு அனுமதி மறுத்தார் போலீசு சூப்பிரெண்டு லவ் குமார். உடனே அவரது வீட்டை பாஜக எம்பி ராகவ் லகன்பால் சர்மா தலைமையிலான கும்பல் தாக்கியது. அனுமதி மறுத்த போலீசு அதிகாரியை வேறு ஊருக்கு தூக்கி அடித்தார் யோகி ஆதித்ய நாத்.
நண்டு கொழுத்தால் வளையில் தங்காதல்லவா? முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்த இந்துத்துவ கும்பலின் ஆதிக்க சாதி புத்தி, அடுத்தபடியாக தலித் மக்களுக்கு எதிராகத் திரும்பியது. இதே மாவட்டத்தைச் சேர்ந்த ஷபிர்பூர் கிராமத்தில் தலித் மக்கள் வழிபடுகின்ற ரவிதாஸ் கோயிலில், அம்பேத்கரின் சிலையை நிறுவுவதற்கு அம்பேத்கர் ஜெயந்தியன்று அவர்கள் திட்டமிட்ட போது தாகூர் சாதி வெறியர்கள் அதனைத் தடுத்தனர். தலித் மக்கள் மீது தாக்குதலும் தொடுத்தனர். யோகி ஆதித்யநாத் தாகூர் சாதி என்பது இவர்களுடைய சாதித்திமிருக்கு இன்னொரு காரணம்.

டெல்லியில் நடைபெற்ற பீம் ஆர்மீ கூட்டத்தில் உரையாற்றும் சந்திர சேகர் ஆசாத்
டில்லியிலிருந்து சுமார் 150 கி.மீ தூரத்தில் உள்ள சகரான்பூர், கிழக்கு உ.பியைப் போன்ற பின்தங்கிய பகுதியல்ல. நகரமயமாக்கம் உள்ளிட்ட பல காரணங்களினால், தலித் மக்களின் எதிர்ப்புக்கு முக்கியமான மையம் இந்த மாவட்டம்.
மாயாவதியின் அரசியல் செல்வாக்கிற்கு அடித்தளமாக இருந்த மாவட்டமும் இதுதான். ஆனால், 2012 தேர்தலில் இம்மாவட்டத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளில் நான்கை கைப்பற்றிய மாயாவதியால் கடந்த தேர்தலில் ஒரு தொகுதியைக் கூடப் பெற முடியவில்லை. பிழைப்புவாத, ஊழல், ஆடம்பர அரசியல் காரணமாக மாயாவதி, தலித் மக்கள் மத்தியிலேயே மாயாவதியின் செல்வாக்கு சரியத் தொடங்கிவிட்டது.
இதன் விளைவாக சந்திரசேகர் ஆசாத் என்ற இளம் வழக்கறிஞரின் தலைமையில் பீம் ஆர்மி என்ற அமைப்பு உருவாகியிருக்கிறது. சகரான்பூர் தாக்குதலுக்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தரில் இவர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் தலித் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பங்கேற்றனர். உ.பியில் தலைமறைவாக இருந்த சந்திரசேகர் ஆசாத்தும் டெல்லி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்.
இதற்கிடையில் மே 5 ஆம் தேதியன்று ஷபிர்பூர் என்ற கிராமத்தில் மன்னன் ராணா பிரதாப் சிங்கின் பிறந்த நாள் ஊர்வலத்தை தலித் குடியிருப்பு வழியாக நடத்துவதற்கு தாகூர் சாதியினர் திட்டமிட்டிருக்கின்றனர். ராணா பிரதாப் சிங்கை இசுலாமியர்களுக்கு எதிரான இந்து வீரனாக ஆர்.எஸ்.எஸ் முன்னிறுத்துகிறது. தாகூர் சாதியினரோ, தமது சாதிப் பெருமிதத்தின் அடையாளமாக ராணாவை முன்னிறுத்துகின்றனர்.
மேற்கூறிய நிகழ்ச்சியில் ராணா பிரதாப் சிங் சிலைக்கு மாலையிடுவதற்கு பூலன் தேவியை சுட்டுக்கொன்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியான தாகூர் சாதிவெறியன் ஷேர் சிங் ராணா என்பவனை தாகூர் சாதியினர் அழைத்திருக்கின்றனர். தலித் மக்களை அச்சுறுத்திப் பணிய வைப்பதுதான் இதன் நோக்கம் என்பதை சொல்லத் தேவையில்லை. தலித் மக்கள் பணியவில்லை என்பது மட்டுமல்ல, எதிர்த்து மோதியிருக்கின்றனர்.
மே 23 ஆம் தேதியன்றி இங்கு மாயாவதி நடத்திய கண்டனப் பேரணிக்கு வந்து விட்டு திரும்பியவர்கள் மீது தாகூர் சாதி வெறியர்கள் தொடுத்த தாக்குதலில் தலித் ஒருவர் கொல்லப்பட்டார். பதிலடியாக தாகூர் சாதி இளைஞர் ஒருவர் சுடப்பட்டிருக்கிறார்.

பீம் ஆர்மீ டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய போராட்டதின் போது
“பீம் ஆர்மிக்குப் பின்னால் நக்சலைட்டுகள் இருக்கிறார்கள்” என்று சந்தேகிப்பதாக உ.பி அரசு கூறியிருக்கிறது. இந்தப் பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சும் நிலையில் தலித் மக்கள் இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்ததை ஒட்டி ஆதிக்க சாதியினரின் திமிர் அதிகரித்திருப்பதாகவும், வெளிப்படையாகவே தங்களை சாதி ரீதியாக இழிவு படுத்துவதாகவும் இதனை ஒரு கணமும் சகித்துக் கொள்ள இயலாது என்றும் சீறுகின்றனர். அரிஜன் என்று தங்களை அழைப்பதை சாதாரண கிராமத்துப் பெண்கள் கூட கடுமையாக எதிர்த்துப் பேசுகிறார்கள்.
2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது இசுலாமிய மக்களுக்கு எதிராக மதவெறியைத் தூண்டி விட்டு உ.பி யின் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றியது அமித் ஷா – மோடி கிரிமினல் கூட்டணி. சட்டமன்றத் தேர்தலில் அது செல்லுபடியாகாது என்று தெரிந்து விட்டதால், யாதவ் சாதியினருக்கும், மாயாவதியின் ஜாதவ் (தலித்) சாதியினருக்கும் எதிராக பிற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரின் சாதி உணர்வைத் தூண்டி விட்டும், பார்ப்பன, தாகூர் சாதியினரின் ஆதரவுடனும்தான் பாஜக வெற்றி பெற்றது.
அந்த வெற்றி இப்போது பல்லிளிக்கத் தொடங்கிவிட்டது. இசுலாமிய மக்களை எதிரிகளாக காட்டி, ஏதோ ஒரு வகையில் இந்து சாதி ஆதிக்க கட்டமைப்பை காலத்துக்கேற்ப பேணிக்கொள்ளலாம் என்று சங்க பரிவாரத்தின் சதி மூளை சிந்திக்கிறது. தேர்தல் நேரத்தில் தற்காலிகமாக அத்தகைய சதிக்கு மக்கள் பலியாகவும் செய்கின்றனர்.
ஆனால் அடுத்த கணமே, சாதி ஆதிக்கம் என்கிற சமூக எதார்த்தம் வேலை செய்யத் தொடங்குகிறது. சாதிக்கு அப்பாற்பட்ட இந்து சாமியார் என்ற யோகி ஆதித்யநாத்தின் பிம்பத்தைக் காட்டி பாஜக ஏமாற்றியிருந்தாலும், மக்களுக்கு தெளிவு எற்படுத்தும் வேலையை சாதி வெறியர்களே செய்கிறார்கள்.
தீண்டாமைக் கொடுமைக்கும் சாதி ஆதிக்கத்துக்கும் எதிராக மக்கள் தாங்களே களத்தில் இறங்கிப் போராடுகிறார்கள். சென்ற மாதம் இசுலாமியர்களுக்கு எதிராக கலவரம் நடத்திய பாஜக எம்பி ராகவ் லகன்பால் சர்மா, “சகாரன்பூரை காஷ்மீராக்க விடமாட்டோம்” என்று முழக்கம் எழுப்பியிருக்கிறார்.
“சகாரன்பூரை காஷ்மீர் ஆக்காமல் விடமாட்டோம்” என்று முழங்கியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். சகரான்பூரில் தலித் மக்கள் தாகூர் சாதி வெறியர்களுக்கு எதிராக நேருக்கு நேர் நின்று கல்லெறிவதைப் பார்க்கிறோம். காஷ்மீரைப் போலவே இணையம், செல்பேசி உள்ளிட்ட அனைத்தும் முடக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். காஷ்மீரை பாரதிய ஜனதா உ.பி க்கும் அழைத்து வந்திருக்கிறது.
தனது நடவடிக்கைகளின் மூலம் சங்க பரிவாரம், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் காஷ்மீராக மாற்றும் பணியை விரைவிலேயே செய்து முடிக்கும்.
  • பேகன்  வினவு

கருத்துகள் இல்லை: