வெள்ளி, 23 ஜூன், 2017

தமிழக காவல்துறையினர் குடும்பத்துடன் முதல்வரை சந்திக்கத் திட்டம்!

தமிழக காவல்துறையினர் குடும்பத்துடன் முதல்வரை சந்திக்கத் திட்டம்!காலையில் எழுந்து நியூஸ் வெப் சைட்டைப் படிக்கும் பலரும்,எப்போதும் நம் நாட்டில் கொலை, கொள்ளை, குற்றம் எனும் செய்திகள் தான் நடக்கின்றனவா? என சலித்துக்கொள்வார்கள் .
ஆனால், இதைக்கட்டுப்படுத்த நாள்தோறும் காவல் நிலையம், சிறை, நீதிமன்றம் என அலைந்து திரிந்து கஷ்டப்படும் போலீஸ்காரர்கள் செய்யும் வேலை, குற்றம் நடக்காமல் சமாளிக்கும் பாங்கு, பொதுமக்களின் பாதுகாப்புக்கு மெனக்கெடும் உழைப்பு ஆகியவை வாங்கும் ஊதியத்துக்கும் மேலான,போலீஸ்காரர்களின் ரெகுலர் பணியாகிவிட்டது.
ஒவ்வொரு தினமும் ஊருக்காக, நம் மக்களுக்காக கண்ணுறங்காமல் பணியாற்றும், பல பொறுப்பான போலீஸ் அதிகாரிகளுக்கு, ஒரு நாளைக்கு ஓய்வு என்பதே வெறும் 8 மணி நேரம் தான். இவர்களுக்கென்று சரியான விடுமுறை நாட்கள் கிடையாது. பெரும்பாலான போலீஸ் பணிசெய்யும் அதிகாரிகள், தங்கள் குடும்பத்துடன் நேரம் ஒதுக்குவதே, தற்போது உள்ள சூழலில் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் தீபாவளி, பொங்கல் ஆகிய முக்கிய விழாக்களில் கூட தங்கள் மனைவி, மக்கள் மற்றும் உறவினருடன் விழாவைக் கொண்டாட முடியாமல், உருகும் போலீஸ்காரர்களை ஒவ்வொரு ஆண்டும் நேரடியாகப் பார்க்கமுடியும். ஆனால், தமிழக அரசு அவர்களுக்கென்று ஒரு குடும்பம், அவர்களுக்கென்று ஒரு மனது இருக்கிறது என்பதையே கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு என்று சரியான ஊதிய உயர்வு மற்றும் முறையான ஓய்வை கூட அளிப்பதில்லை. முக்கியமாக , தேவையான காலியிடப்பணியிடங்களை கூட நிரப்பாமல் வைத்திருக்கிறது.
இதனாலேயே பெரும்பாலான போலீஸ்காரர்கள் மேலதிகாரிகள் தருகின்ற மன அழுத்தம், வாட்டி வதைக்கும் கூடுதல் பணிச்சுமை ஆகிய காரணங்களால், வெகுவிரைவில் நோயாளிகளாக மாறிவிடுகின்றனர். சிலர், உச்சகட்டமாக தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.
இப்பிரச்னைகளை எல்லாம் வெகுநாட்களாக, தங்களுக்குள்ளேயேப் போட்டு புழுங்கி வந்த காவல் துறை அதிகாரிகள், தற்போது துணிந்து, வருகிற ஜூலை 6ஆம் தேதி, தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, குடும்பத்துடன் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க இருக்கின்றனர். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து காவல்துறை குடும்பத்தினரும்,இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் வகையில் போஸ்டர் அடித்து அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த தமிழக உளவுத்துறை, ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல்வரைச் சந்திக்க அழைப்பு விடுக்கும் அமைப்புகளை உன்னிப்பாக கவனிக்கத்துவங்கியிருக்கிறது.
அந்த அழைப்பு விடுக்கும் போஸ்டரில் இருக்கும், போலீஸ்காரர்கள் வலியுறுத்திய விஷயங்கள் மிக முக்கியமானவை. அரசின் பரிசீலனைக்கு ஏற்ற சாராம்சங்களைக் கொண்டவை. அவை என்னவென்றால், வருடம் முழுவதும் 200 நாட்கள் பணிபுரியும் பிற அரசு துறையினருக்கும், வருடம் 365 நாட்களும், 24 மணிநேரமும் பணிபுரியும் காவல் துறையினருக்கும் உள்ள ஊதியத்தை முறைப்படுத்தி, கூடுதலாக வழங்குதல்.
ஒவ்வொரு காவலர்களுக்கும் 8 மணிநேர பணிமுறையை உறுதிசெய்தல், வாரத்தில் ஒருநாள் காவல்துறையினர், தங்கள் வீட்டிலுள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க விடுமுறையை உறுதிசெய்தல், காவலர்களுக்கு பணியில் ஏற்படும் அழுத்தங்களைத் தவிர்க்க, மன நலம் சார்ந்த பயிற்சி வகுப்புகளை ஊக்குவித்தல், காவலர் நலச்சங்கம் அமைக்க அனுமதி தருதல், உயர் காவல் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு, மற்ற காவலர்களைப் பயன்படுத்தும்'ஆர்டர்லி' முறையை ஒழித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காவல்துறை அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த போஸ்டர் பல்வேறு போலீஸ் அதிகாரிகளின் வாட்ஸ்-அப் குரூப்களிலும், சமூக வலைதளப் பக்கங்களிலும் கூட அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
இதையெல்லாம் உற்றுநோக்கும் தமிழக அரசு, ஒவ்வொரு காக்கிச் சட்டை அணிந்திருப்பவர்களுக்குப் பின்னும் இருக்கின்ற, ஈரமான குடும்பத்தையும் உணரவேண்டும்.
ஏனென்றால், காவலர்களாக இருப்பவர்களின் கஷ்டம், வலி, வெறுமை ஆகியவற்றை, ஒவ்வொரு அரசும் காவலர்களின் மனநிலையில் இருந்து உணர்ந்தால் தான்,
அவர்களுக்கான ஒரு நல்ல விடிவு காலம் கிடைக்கும். ஒவ்வொரு பிரச்னைகளிலும் பாதுகாப்புக்காக காவலர்களைப் பயன்படுத்தும் தமிழக அரசு, காவலர்களின் உடல் ஆரோக்கியத்தைக் காப்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும்.
இனியாவது போலீஸாருக்காக, தமிழக அரசு ஆக்‌ஷன் அவதாரம் எடுக்குமா?
- காசி, ம.மாரிமுத்து  minnambalam

கருத்துகள் இல்லை: