புதன், 21 ஜூன், 2017

நக்கலைட்ஸ்.. பெப்சி கோக்கை பின் தள்ளிய மாட்டும் மூத்திர விற்பனை ... கோமியோ கேர்!

நக்கலைட்ஸ்’ நண்பர்களின் அடுத்த அரசியல் நகைச்சுவை வீடியோ “கோமியோ கேர்”. ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் சர்வரோக நிவாரணியாக திணிக்கப்படும் மாட்டு மூத்திரத்தின் மணத்தை மரண மாஸாக நாறடிக்கிறது இந்தப் படம்.
புகையிலை பழக்கத்தால் புற்று நோயுடன் மும்பை மருத்துவமனையில் இறந்து போன முகேஷை நினைவிருக்கிறதா? எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய புகையிலை அபாயத்தினை எச்சரிக்கும் அரசு விளம்பரம் அது.
இங்கேயும் ஒரு முகேஷ். அதே போன்றொதொரு ஒடிசலான தேகத்துடன். உடல்நலமற்று மருத்துவரிடம் செல்லும் போது அங்கே பாஜகவின் தேசத்தில் உருவான டாக்டர். கிளினிக் முழுவதும் புனிதப்பசுவின் செட் பிராப்பர்ட்டிஸ். சித்தப்பா, அண்ணன், உறவினர்களோடு அமர்ந்திருக்கும் முகேஷுக்கு கேன்சர் என்கிறார் மருத்துவர்.
நோய் குறிப்பில் நாள், நட்சத்திரத்தை எழுதுகிறார். பெயரை வைத்து நியூமரலாஜி என்று போகிறது அவரது பதிவு. பின்னர் மாட்டுச்சாணி, மூத்திரத்தை வைத்து சிகிச்சை. பையனோ மனம் வெறுத்து மலையில் தற்கொலை செய்யப் போகிறான்.
கீழே உறவினர்களோடு மருத்துவரும் கத்துகிறார்கள். பறக்கும் கேமராவில் பதட்டங்கள். முகேஷுக்கு ஏன் தற்கொலை செய்ய முடிவெடுத்தான்? அனைத்தும் சுற்றும் வட்டங்களில் பிளாஷ்ஃபேக்காக வந்து போகின்றது.
இடையில் நாகசேனா கூட்டம் முகேஷின் பு(ற்றை)த்தை அழிக்க கூடாது என்று முட்டை, பால் ஊற்றுகிறது. காலையில் மாடு போடும் முதல் சாணிக்காக காத்திருக்கும் காட்சி கலக்குகிறது. தற்கொலையை நேரலையாக காட்டும் குடுமி டி.வி -யின் டி.ஆர்.பி வெறி அப்படியே சித்தரிக்கப்படுகிறது.
நடிப்பு, ஒளிப்பதிவு, காட்சி பொருட்கள், இசை, இளையராஜா, படத்தொகுப்பு, கதை, இயக்கம் என்று அனைத்திலும் அடித்து விளையாடுகின்றனர், நக்கலைட்ஸ் குழுவினர். இவர்களை ஆதரிப்பதும், பாதுகாப்பதும் நமது கடமை!
குறிப்பிட்ட பேசுபொருளின் பரப்பில் நமது நண்பர்கள் எடுத்திருக்கும் காட்சிகள், பொருட்கள், வசனங்கள், பாத்திரங்கள் அனைத்தும் ஒரு குறும்படத்தின் மற்றும் பட்ஜெட்டின் வரம்பில் பொருத்தமானதுதான். ஆனால் மாடு குறித்து வேதகாலம் தொட்டு, இன்று பாபா ராம் தேவ் காலம் வரையிலும் விதவிதமான விவரங்கள் பெருகிக் கிடக்கின்றன. இவற்றில் மக்களிடையே நிலவும் விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பில் பார்ப்பனியம் புகுந்தது முதல் அதை வைத்து கலவரங்களை பரப்பியது வரை வரலாறும் சமகால நிகழ்வுகளும் நிறைய இருக்கின்றன.
இவற்றில் காட்சிக்கலையின் வரம்பில் நின்று கொண்டு பொருத்தமானவற்றை சேகரிப்பது சவாலானதுதான். அரசியல் கண்ணோட்டம் வளர வளர அந்த குவியலில் ஆழமானவற்றை கண்டு பிடிக்க முடியும். இல்லையேல் இத்தகைய அரசியல் கேலிப்படங்களின் உணர்ச்சியும், புதிய பார்வையும், அசைபோட வைக்கும் உரையாடல்களும் மெல்ல மெல்ல தேய்ந்து போய்விடும். சுருக்கமாக சொல்வதென்றால் நக்கலைட்ஸ் நண்பர்கள் தமது பயிற்சியில் அரசியல் பார்வையை வளர்க்கும் திட்டங்களையும்  வைத்திருப்பார்கள் என்று நம்புகிறோம். ஏனெனில் மசாலா படங்களை விட அரசியல் படங்களின் எதிர்பார்ப்பும், ஆவலும் அதிகம்.
முதல் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பைப்பார்த்து விட்டு அடுத்த படத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது யாருக்குமே சிரமம்தான். எனினும் இந்த சிரமங்களோடு  கலையாற்றலோடும், சமூக அக்கறையோடும் துணிந்து பயணிக்கும் நக்கலைட்ஸ் நண்பர்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்
மாட்டு மூத்திரத்தை அரசும், ஆன்மீக வியாபாரிகளும் பெப்சி கோக்கை விஞ்சும் வண்ணம் விற்பதும், குடிக்குமாறு வற்புறுத்துவதும், சாணிகளில் பல்வேறு ஃபிளேவர்களில் சர்வ ரோக மருந்துகளாக இறக்குவதும் தாங்க முடியாத வண்ணம் ஆத்திரமூட்டுகிறது. அதற்கு இணையாக மாட்டுக்கறியை முகாந்திரமாக வைத்து படுகொலைகள் நடக்கின்றன.
பார்ப்பனியத்திற்கு பாடை கட்டும் போராட்டத்திற்கு நக்கலைட்ஸ் நண்பர்கள் கலையால் வழங்கியிருக்கும் ஆயுதம் இது ! பயன்படுத்துவோம் – பரப்புவோம்!

கருத்துகள் இல்லை: