புதன், 26 ஜூலை, 2017

நிதிஷ்குமார் பதவி விலகினார் !ஆட்சி உடைந்தது .. குடியரசு தலைவர் ஆட்சியா? ஓரிரு நாளில் முடிவு தெரியும்!

பீகார் மின்னம்பலம் : மாநிலத்தில் கூட்டணி கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலால் முதல்வர் நிதீஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அவருடன் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.
பீகார் மாநில துணை முதலமைச்சரான தேஜஸ்வி யாதவ் தன்மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து வருகின்ற ஜூலை 28ஆம் தேதிக்குள் விளக்கம் தெரிவிக்கவில்லையென்றால் அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்று முதல்வர் நிதீஷ் குமார் நேற்று கெடு விதித்திருந்தார். ஆனால், லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் இதுகுறித்து, பெரிதாகப் பதில் எதுவும் இதுவரை தெரிவிக்காததால் முதல்வர் நிதீஷ் குமார் பெரும் அதிருப்தியடைந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தேஜஸ்வி யாதவ் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தேவையில்லை என்று லாலு பிரசாத் யாதவ் அறிவித்திருந்தார். இதனால், கூட்டணியில் மோதல் ஏற்பட்டது. அதையடுத்து, நிதீஷ் குமார் மற்றும் லாலு பிரசாத யாதவ் ஆகியோரிடையே சமரசம் செய்வதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஏற்பாடு செய்தார். ஆனால், அவரது முயற்சி தோல்வியடைந்தது.
இந்நிலையில், கூட்டணி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை இன்று ஜூலை 26ஆம் தேதி பாட்னாவில் நிதீஷ்குமார் கூட்டினார். அதையடுத்து, அதற்குப் போட்டியாக, ராஷ்ட்டீரிய ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டமும் இன்று நடைபெற்றது.
ஆனால், லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் பதவி விலகுவது குறித்து எந்த தகவல்களும் தெரிய வராததால் இன்று மாலை கவர்னர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து தனது முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜினாமா செய்தார். மேலும், அவருடன் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இதனால், பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அடுத்தகட்டமாக பீகாரில் ஜனாதிபதி ஆட்சி நடைபெறுமா அல்லது பாஜக துணையுடன் நிதீஷ் குமார் ஆட்சியமைப்பாரா என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதவியை ராஜினாமா செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதீஷ் குமார், பீகாரின் நலனுக்காவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் என்றும், நாங்கள் யாரையும் பதவி விலக வற்புறுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: