ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

வல்லுறவு – ஆண்மை நீக்கம் – ஆன்மிகம் – இந்து ராஷ்டிரம் ! – ராம் ரகீம் சிங் !

வினவு.: எடப்பாடி, பன்னீர் கிரிமினல் கும்பலையும், நேற்று கொள்ளைக்காரி ஜெயலலிதாவையும், அதற்குமுன் கொலைகார சங்கராச்சாரியையும் காப்பாற்றுவதற்கு முன்நின்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிஸ்டுகளின் சமீபத்திய லீலை, பொறுக்கி ராம் ரகீம்சிங்குடன் அவர்கள் கொண்டிருந்த உறவு.
மிழ்நாட்டில் கழகங்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரப் போவதாக பாரதிய ஜனதா கட்சியினர் பேசும்போது, கழகங்கள் என்ற சொல்லை அவர்கள் உச்சரிக்கையில் அதில் பல அர்த்தங்கள் தொனிப்பதை நாம் காண முடியும். குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் பார்ப்பன பிரதிநிதிகள் பேசும்போது இதை நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டும்.  நாத்திகர்கள், ஊழல் பேர்வழிகள், ஒழுக்கம் கெட்டவர்கள், கீழ் மக்கள் என்று ஒரு பார்ப்பன சாதிவெறியன், சூத்திர – பஞ்சம சாதியினர் மீது வெளிப்படுத்தும் வெறுப்பும் காழ்ப்பும் அதில் பளிச்சென்று வெளிப்படும்.
கேடுகெட்ட நடவடிக்கைகள் அனைத்திலும் ஈடுபட்டுக்கொண்டே, தங்களை மேன்மக்களாகக் காட்டிக் கொள்வதுதான் பார்ப்பனக் கும்பலின் சாமர்த்தியம். ஊழல் ராணியான ஜெயலலிதாவுக்கு ராஜகுருவாக இருந்திருந்தாலும், மிடாஸ் சாராய கம்பெனியின் இயக்குநர் பதவியில் சோ அமர்ந்திருந்தாலும், செத்துப்போன ஊழல் பிராணியின் உடலில் இருந்து புழுத்து நெளியும் கும்பல்களுக்கு திருவாளர் குருமூர்த்தி அரசியல் தரகு வேலை செய்தாலும், அந்த பிராமணோத்தமர்கள் தம்மைக் கறைபடியாதவர்களாக காட்டிக்கொள்வது மட்டுமல்ல, அவ்வாறே கருதியும் கொள்கிறார்கள்.
இரவு முழுதும் விலைமாதுவின் படுக்கையில் கிடந்து விட்டு, காலையில் தெருவில் நின்று தேவுடியா என்று ஏசும் ஆண்மகன், தனது கற்பு நெறி குறித்துக் கொண்டிருக்கும் மனோபாவத்தையும், மோகனாம்பாளை மைனருக்கு செட் அப் செய்ய அரும்பாடுபடும் வைத்தி, தன்னைப் பிறன்மனை நோக்காப் பேராண்மையாளன் என்று கருதி கர்வம் கொள்வதையும் ஒத்ததே இந்த பார்ப்பன அறிவாளிகளின் கர்வம்.

இன்று எடப்பாடி, பன்னீர் கிரிமினல் கும்பலையும், நேற்று கொள்ளைக்காரி ஜெயலலிதாவையும், அதற்குமுன் கொலைகார சங்கராச்சாரியையும் காப்பாற்றுவதற்கு முன்நின்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிஸ்டுகளின் சமீபத்திய லீலை, பொறுக்கி ராம் ரகீம்சிங்குடன் அவர்கள் கொண்டிருந்த உறவு. அதாவது, வல்லுறவுக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்ட பொறுக்கியுடன் சங்க பரிவாரம் கொண்டிருந்த நல்லுறவு.
மாஃபியா நிறுவனமாக மதம்
குர்மீத் ராம் ரகீம் சிங், அரியானா மாநிலம், சிர்சா நகரில், சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் ஒரு சிறிய நகரம் போல விரிந்து கிடக்கும் தேரா சச்சா சவுதாவின் தலைவர். தேராக்களை ஒரு வகையான ஆதீனங்கள் என்று சொல்லலாம். பஞ்சாப், அரியானா மாநிலங்களில் சிறிதும் பெரிதுமாக சில ஆயிரம் தேராக்கள் உள்ளன.
ஜாட் சாதியினரால் ஆதிக்கம் செய்யப்படும் அதிகாரபூர்வ சீக்கிய மதத்தின் மீது வெறுப்பும் அதிருப்தியும் கொண்ட ஒடுக்கப்பட்ட சாதிகள், தமக்கென உருவாக்கிக்கொண்ட தனித்தனி நிறுவனங்களாகவும், சூஃபி வழிபாட்டு முறையும் சீக்கிய நம்பிக்கையும் இணைந்த வழிபாட்டுப் பிரிவுகளாகவும், ஒடுக்கப்பட்ட சாதியினரின் மதமாகவும் உருவாகியிருப்பவை இந்த தேராக்கள். கத்தோலிக்க, புரோட்டஸ்டென்ட் மதப்பிரிவுகளுக்கு வெளியே, பாஸ்டர்கள் எனப்படுவோர் சுயேச்சையாக நடத்தும் கிறித்தவ சபைகளைப் போன்றவை இவை.
வளமான விளைநிலங்களையும் சொத்துக்களையும் கொண்டவையாக வளர்ந்திருக்கும் இந்த தேராக்கள் மத நிறுவனங்களுக்குரிய வரிச்சலுகையையும் பெற்றிருக்கின்றன.  சுயநிதிக் கல்வி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், கட்டைப்பஞ்சாயத்து, நுகர்பொருள் வியாபாரம் ஆகியவை முதல் அரசாங்க காண்டிராக்டு, வேலைநியமனம், டிரான்ஸ்ஃபர் என்று காரியங்களையும் முடித்துத் தரும் தரகுவேலைகள் வரையிலான அனைத்தையும் செய்து கொடுப்பவர்களே இந்த தேராக்களின் ஆன்மீகத் தலைவர்கள்.
சாதிச் சங்க தலைவன், பிழைப்புவாதக் கட்சித் தலைவன், மாஃபியா கும்பல் தலைவன் ஆகியோருக்குரிய அனைத்துப் பணிகளையும் ஆன்மீகப் போர்வைக்குள்  ஒளிந்து  கொண்டு செய்பவையே இந்த தேராக்கள்.
ஜாட் சாதியில் பிறந்த, திருமணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான குர்மீத், பதவியில் அமர்த்தப்பட்ட ஆண்டு 1990. கடந்த 27 ஆண்டு காலத்தில்தான் சிறியதொரு அமைப்பாக இருந்த இந்த தேரா, பல ஆயிரம் கோடி சொத்து மதிப்பு கொண்ட நிறுவனமாக விரிவடைந்திருக்கிறது.
சீக்கிய மதத்தில் நிலவிய தலித்துகளுக்கு எதிரான கடும் சாதி ஒடுக்குமுறை, அவர்கள் மத்தியில் தோற்றுவித்திருந்த வெறுப்பைப் பயன்படுத்திக் கொண்டு, சீக்கிய மதத்துக்கு வெளியே சுயேச்சையான ஒரு மதக்குழுவாக அம்மக்களைத் தன் பின்னே திரட்டிக் கொண்டான் குர்மீத் சிங்.
சீக்கிய மதச் சீரழிவில் புழுத்த புழு
சாதிவெறி பிடித்த சமூகச் சூழல் என்ற பின்புலத்தில் தேரா சச்சா சவுதாவின் வளாகத்தில் சாதி வேறுபாடின்றி மக்கள் நடத்தப்பட்டதும், தேராவின் சார்பில் நடத்தப்படும் மருத்துவ மனைகளில் வழங்கப்பட்ட மலிவு விலை மருத்துவமும், பள்ளிகளில் கல்வி, தேரா நிறுவனம் நடத்தும் தொழில்கள் மற்றும் விவசாயத்தின் வாயிலாக சுமார் 75,000 பேருக்கு மேல் அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பும் ஏராளமான தலித் மக்களை தேராவை நோக்கி ஈர்ப்பதில் பெரும்பங்காற்றின.
மிக முக்கியமாக குடி, போதைப்பழக்கம் கூடாது என்ற ராம் ரகீமின் பிரச்சாரமும் தேராவில் செயல்பட்ட போதை அடிமைகள் மறுவாழ்வு மையமும், பெண்களை ஈர்ப்பதில் பெரும் பங்காற்றியது. தேராவில் ஞானஸ்நானம் பெற்று இணைபவர்கள் மாமிசம் சாப்பிடக்கூடாது என்ற விதியும், அவ்வாறு இணைபவர்களுக்கு அவர்கள் பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப்பட்டத்தை அகற்றி விட்டு, இன்சான் (மனிதன்) என்ற பட்டத்தை சேர்த்ததும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களிடம், ஒருவிதமான மேல்நிலையாக்க மனநிலையைத் தோற்றுவித்தன. ஐயப்ப சீசனில் விரதமிருக்கும் உழைக்கும் வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட சாதிகளையும் சேர்ந்த சாமிகளும் அவர்களது குடும்ப பெண்களும் ஆட்படும் மனநிலையை ஒத்தது இது.
ராம் ரகீமின் மதக்குழு என்பது சீக்கிய மதத்தின் போர்ஜரி வடிவம். பார்ப்பனியத்தையும் சாதியையும் எதிர்த்த குருநானக், தனது மார்க்கத்தில் இணைபவர்கள் ஆணாக இருந்தால் சிங் என்ற அடைமொழியையும், பெண்ணானால் கவுர் என்ற அடைமொழியையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென்றும், ஆண்சாதி பெண்சாதி தவிர, வேறு சாதியில்லை என்றும் விதித்தார். சாதி மறுப்பு, சீக்கியத்தின் முக்கிய கொள்கை.
இருப்பினும், இன்று சாதிக்கு ஒரு குருத்துவாரா என்று சீக்கிய மதம் சீரழிந்து விட்டது. பஞ்சாப் மாநில மக்கட்தொகையில் சுமார் 30%, அரியானாவில் 20% தலித் மக்கள் என்ற போதிலும் அவர்களில் 1% மக்களிடம்கூட நிலம் இல்லை. இந்நிலையில் ஆதிக்க சாதியினரின் நிலவுடமை ஆதிக்கத்தையும் சாதி ஆதிக்கத்தையும் அரசியல் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்காமலேயே, தலித் மக்களின் அதிருப்தியைத் தந்திரமாக  அறுவடை செய்து கொண்டான் ராம் ரகீம். தனது தேராவில் இணைகின்ற மக்களின் பெயருக்குப் பின்னால் இருக்கும் சாதிப்பட்டத்தை நீக்கிவிட்டு, அனைவருக்கும் இன்சான் (மனிதன்) என்ற பட்டத்தை வழங்கினான்.
பஞ்சாப் மாநில மக்கட்தொகையில் சுமார் 30%, அரியானாவில் 20% தலித் மக்கள் என்பதால், அவர்களை வாக்கு வங்கியாகத் திரட்டிவைத்துக் கொண்டு, காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் விலைபேசியதுதான் ராம்ரகீமின் சாமர்த்தியம். 2009 – இல் காங்கிரசையும் அதன் பின்னர் 2012 முதல் பா.ஜ.க. வையும் ஆதரித்து, அவர்கள் துணையுடன் ஒரு மாஃபியா சாம்ராச்சியத்தைக் கட்டியமைத்துக் கொண்டான்.
கலவரம் – நீதிபதியை மிரட்டிய பா.ஜ.க.
ராம் ரகீம் சிங்குக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவுடன் அந்த ஊரில் நடைபெற்ற பெருந்திரள் வன்முறையைக் கண்ணுற்ற சில அறிஞர்கள், கொடிய குற்றங்களையும் தாண்டி ராம் ரகீமை மக்கள் நம்புகிறார்கள் என்றால் இதன் சமூக உளவியல் ஆய்வுக்குரியது என்றெல்லாம் இதனைச் சித்தரிக்கிறார்கள்.
குன்ஹா தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் அ.தி.மு.க. காலிகள் அரங்கேற்றிய வன்முறைக்கும் இதற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இங்கே வன்முறையை அரங்கேற்றியவர்கள் அ.தி.மு.க. என்ற அரசியல் மாஃபியாவின் தளபதிகள். அங்கேயும் அந்த ஆன்மீக மாஃபியாவுக்கு எண்ணற்ற தளபதிகளும் அதனை அண்டிப்பிழைக்கும் பரிதாபத்துக்குரிய மக்களும் இருந்தனர். கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பி. மீதும், தாதுமணல் கொள்ளையன் வைகுந்தராசன் மீதும் நடவடிக்கை எடுத்தவுடன், அவர்களிடம் வேலை செய்தவர்கள் பொங்கி எழுந்ததற்கும் இதற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.
ஜெயலலிதா நல்லவர், எம்.ஜி.ஆர். நல்லவர் என்று நம்புகின்ற, கல்வியறிவும் ஜனநாயக உணர்வும் இல்லாத பெருந்தொகையான மக்கள், அற்ப சலுகைகளுக்காக பிழைப்புவாதிகளாக நடந்து கொள்ள தமிழகத்தில் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்களே, அதன் இன்னொரு வடிவமே இது.
ராம் ரகீம் தண்டனைக்கு எதிரான வன்முறையை அரியானா மாநில பா.ஜ.க. அரசு திட்டமிட்டேதான் நடத்தியது. தீர்ப்பு வழங்கப்படும் நாளுக்கு ஒரு வாரம் முன்பிருந்தே அங்கு மக்கள் கூட்டம் குவிக்கப்பட்டது. ராம் ரகீமுக்குத் தண்டனை விதித்தால், அதன் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று நீதிபதியையும் சிவில் சமூகத்தையும் மிரட்டுவதே பா.ஜ.க. அரசின் நோக்கமாக இருந்தது.
144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பலரும் கோரியபோது, மத நம்பிக்கைக்கு எதிராக 144 பிறப்பிக்க இயலாது என்று பதிலளித்தார் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர். பிறகு வன்முறை எல்லை மீறிச் சென்றவுடன், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Cr.PC) கீழ் 144 தடை பிறப்பிப்பதற்குப் பதிலாக, இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) 144-வது பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது, கூட்டம் கூடத் தடை விதிக்கப்படவில்லை. ஆயுதங்களுடன் கூடுவதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டது. இது குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதற்கு, எழுத்துப்பிழை என்று நக்கலாகப் பதிலளித்தது பா.ஜ.க. மாநில அரசு.
2002 குஜராத் இனப்படுகொலையின்போது உயர் நீதிமன்ற நீதிபதிகளே உயிர் தப்பி ஓட வேண்டிய நிலையை உருவாக்கிய கலவர நாயகன் பிரதமராக அமர்ந்திருக்கும் நாட்டில், தீர்ப்பு வழங்கிய நீதிபதி கொல்லப்படாததுதான் அதிசயம். கலவரத்துக்கு அந்த நீதிபதிதான் பொறுப்பு என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார் அமித் ஷா.
தண்டனை விதிக்கப்பட்டதும் ராம்ரகீமைத் தப்பிக்க வைக்கும் சதி திட்டத்திற்கு போலீசாரே உதவியிருக்கின்றனர். தண்டிக்கப்பட்ட அந்தக் குற்றவாளியை அவனது வளர்ப்புமகள் என்று கூறப்படும் ஹனிபிரீத்துடன் தனி ஹெலிகாப்டரில் அனுப்பியதும், அதில் அவர்கள் சாக்லேட் பரிமாறிக் கொண்டதும், போலீசின் விருந்தினர் மாளிகையில் தனியே தங்கவைக்கப்பட்டதும் புகைப்படங்களாக வந்து சந்தி சிரிக்கின்றன. தனக்கு அன்றாடம் மசாஜ் செய்து விடுவதற்கு ஹனிபிரீத் தன்னுடன் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் ராம்ரகீம் மனு செய்திருக்கிறான் என்றால், பா.ஜ.க. அரசில் அவனுடைய அதிகாரம் எப்படி இருந்திருக்கும் என்று யூகித்துக் கொள்ளலாம்.
தங்களைத் தேர்தலில் ஆதரித்தால் வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவதாக வாக்குறுதி அளித்த பா.ஜ.க. தலைவர்கள், தங்களை முதுகில் குத்தி விட்டதாக வெடித்தார் வளர்ப்பு மகள். மோடி சசிகலாவின் தலையைத் தடவிய கதைதான்.
வல்லுறவு – ஆண்மை நீக்கம் – ஆன்மீகம்
குர்மீத் ராம் ரகீமின் பாலியல் வல்லுறவுக் குற்றத்தை முதன் முதலில் வெளியே கொண்டுவந்தது 2002 -இல் வெளியான ஒரு மொட்டைக் கடிதம். ஆசிரமத்தில் சிஷ்யையாக சேர்க்கப்பட்ட தன்னையும் தன்னைப் போன்ற எண்ணற்ற இளம்பெண்களையும் மிரட்டி வல்லுறவுக்கு உட்படுத்துவதாக வாஜ்பாயி, மனித உரிமைக் கமிசன் முதல் மாநில உயர் நீதிமன்றம் மற்றும் ஊடகங்கள் வரை அனைவருக்கும் அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தாள் அந்தப் பெண். யோக்கியர் வாஜ்பாயி அரசு இதனைக் கண்டு கொள்ளவில்லை. இக்கடிதத்தை தைரியமாகப் பிரசுரித்த பத்திரிகையாளரும், கடிதம் எழுதிய பெண்ணின் சகோதரனும் ராம் ரகீமின் ஆட்களால் கொல்லப்பட்டனர்.
சண்டிகர் உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட பின்னரும்,  விசாரணையை நிறுத்துவதற்கு காங்கிரசு அமைச்சர்களும், குறிப்பாக பா.ஜ.க. -வின் பல அமைச்சர்களும் தனக்கு நிர்ப்பந்தம் கொடுத்ததாகச் சொல்கிறார் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி.
பெற்றோரால் மிகுந்த பக்தியுடன் சிஷ்யைகளாக ஒப்படைக்கப்பட்ட, ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 -க்கும் மேற்பட்ட இளம்பெண்களை தனது வைப்பாட்டிகளாகப் பயன்படுத்திவிட்டு, பின்னர் தனது சீடர்களுக்கே மணமுடித்து வைத்திருக்கிறான் ராம் ரகீம். அதே போல, சுமார் 400 ஆண் சீடர்களுக்கு ஆண்மை நீக்கமும் செய்திருக்கிறான்.
நான் கடவுளின் அவதாரம். நான் கண்ணனைப் போன்றவன், நீங்கள் கோபியரைப் போன்றவர்கள். உங்கள் உள்ளத்தை எனக்கு ஒப்படைத்திருக்கிறீர்கள். உடலையும் ஒப்படைத்தால், உங்கள் பக்தி முழுமைப்படும் என்று கூறியும், இணங்க மறுத்த பெண்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தும் அனைவரையும் வல்லுறவுக்கு ஆளாக்கியிருக்கிறான் ராம்ரகீம்.
ராம் ரகீமுக்கு எதிராகச் சாட்சி சொன்னால், தம் குடும்பத்தைக் கொன்றுவிடுவான் என்றும், தற்போதைய மணவாழ்க்கையும் நாசமாகிவிடும் என்றும் அஞ்சி, பாதிக்கப்பட்ட பெண்கள் பேசவே மறுத்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களில் இரண்டே இரண்டு பெண்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கே இரண்டு ஆண்டுகள் அரும்பாடு பட வேண்டியிருந்ததாகவும், பா.ஜ.க. மாநில அரசின் போலீசும், தேராவின் குண்டர்களும் தங்களை நேரடியாகவே அச்சுறுத்தியதாகவும் கூறுகிறார் சி.பி.ஐ. அதிகாரி.
இப்போது ராம்ரகீம் சிறைக்கு அனுப்பப்பட்டுவிட்டாலும், தேராவின் உள்ளே நடைபெற்ற குற்றங்கள் குறித்த உண்மை விவரங்கள் முழுமையாக வெளிவருவதை பா.ஜ.க. ஒரு போதும் அனுமதிக்காது. ஏனென்றால், அவர்கள்தான் ராம் ரகீமின் மிக முக்கியமான குற்றக் கூட்டாளிகள்
பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் தொடர்பாக 2008 -ஆம் ஆண்டிலேயே ராம்ரகீமுக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டது. மொட்டைக்கடிதம் எழுதிய பெண்ணின் சகோதரன் மற்றும் அதனை வெளியிட்ட பத்திரிகையாளர் ஆகிய இருவரையும் கொலைசெய்த வழக்கும் 2002 -இலேயே பதிவு செய்யப்பட்டுவிட்டன.
விசுவாஸ் குப்தா என்ற பணக்கார பக்தருடைய மனைவியை, தனது மகளாகத் தத்து எடுத்துக் கொள்வதாக விழா நடத்தி அறிவித்து விட்டு, அவளை வைப்பாட்டியாக்கிக் கொண்டான் ராம்ரகீம். அப்பா, மகள் என்று கூறிக்கொள்ளும் இருவரும் படுக்கையில் ஒன்றாக இருப்பதைத் தன் கண்ணாலேயே பார்த்துவிட்டதால், தனது மனைவியை மீட்டுத்தருமாறு 2011-இலேயே வழக்கு போட்டிருக்கிறார் விசுவாஸ் குப்தா.
இவையில்லாமல் 400 ஆண் பக்தர்களுக்கு விரைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கொன்று இருக்கிறது. அதை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. மனைவியுடன் சாமியாரைத் தரிசிக்கச் சென்ற ஜெய்ப்பூரை சேர்ந்த ஒரு தினக்கூலித் தொழிலாளி, தனது மனைவியை மீட்டுத்தருமாறு கொடுத்த புகாரும் தூங்கிக் கொண்டிருக்கிறது.
ராம்ரகீம் காலடி மண்ணெடுத்து…
இவையெல்லாம் நாடறிந்த, ஊடகங்களில் வெளியாகிச் சந்தி சிரித்த வழக்குகள். இத்தனை வழக்குகளும் இருக்கும்போதுதான் 2012, 2017  சட்டமன்றத் தேர்தல்களிலும் 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் ராம்ரகீமின் ஆதரவுக்காகக் காவடி எடுத்தனர் பா.ஜ.க. வின் யோக்கிய சிகாமணிகள். பா.ஜ.க. வேட்பாளர்கள் 44 பேர் ராம்ரகீமின் காலில் விழுந்தனர்.
பாபா குர்மீத் ராம்ரகீம் சிங்கின் புனிதபூமியான தேரா சச்சா சவுதா மண்ணைக் குனிந்து கும்பிட்டு வணங்குவதாக 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது நெக்குருகினார் மோடி. பிறகு தனது சுவச் பாரத் திட்டத்தைச் சிறப்பாக எடுத்துச் செல்வதாக ராம்ரகீமுக்குப் பாராட்டு தெரிவித்தார். அரியானா முதல்வர் கட்டாரும், ராம் ரகீமும் துடைப்பக்கட்டையுடன் போஸ் கொடுத்தனர். பதில் மொய்யாக மாட்டுக்கறி தின்போரை வசை பாடினான் ராம்ரகீம்.
தன்னையே கதாநாயகனாகவும், தனது வளர்ப்பு மகளை இயக்குநராகவும் வைத்து ராம்ரகீம் தயாரித்த, காணச் சகிக்காத அருவெறுப்பான கேலிக்கூத்துப் படங்கள் பல வெளியிடப்பட்டன. அத்துணை படங்களுக்கும் வரிவிலக்கு அளித்து ராம் ரகீமைக் குளிப்பாட்டியது பா.ஜ.க. அரசு. அந்தப் படங்களில் இந்து தேசியம் பேசும் நாயகனாக நடித்து, பா.ஜ.க. வைப் பதிலுக்குக் குளிப்பாட்டினான் ராம்ரகீம்.
வல்லுறவு – கொலை – விரை நீக்கம் –  பிறன்மனை அபகரிப்பு நடவடிக்கைகளுக்கான குற்றவழக்குகள் பூஜ்யஸ்ரீ ராம்ரகீம் பாபாவின் மீது நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில்தான், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மானனீய மோகன்ஜி பகவத் முதல் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா வரையிலான எல்லா ‘ஜி’க்களும் ராம்ரகீமின் தேரா சச்சா சவுதாவுக்கு விஜயம் செய்திருக்கின்றனர்.
இப்போது கேட்டால், இந்தத் தீர்ப்பு வருகின்ற வரையில் ராம் ரகீமின் லீலைகளைப் பற்றித் தங்களுக்குத் தெரியவே தெரியாது என்றும், குற்றச்சாட்டு இருக்கிறது என்ற காரணத்தினாலேயே ஒருவரைக் குற்றவாளி என்று கருத வேண்டுமா என்றும் நம்மை மடக்குவார்கள்.
டெல்லியில் நிர்பயா (ஜோதி சிங்) என்ற பெண்ணைச் சில பொறுக்கிகள் வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொன்று போட்டபோது, சிறுவன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டோர் அனைவரையும் தூக்கில் போட்டாகவேண்டும் என்று கொந்தளித்தவர்கள் இவர்கள்தான்.
”தன்னுடைய சொந்த சீடர்களையே விட்டுவைக்காத வெறி பிடித்த மிருகம்” என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டு, ராம் ரகீமுக்குத் தண்டனையைக் குறைக்க மறுத்திருக்கிறார் விசாரணை நீதிபதி. யாரோ ஒரு பெண் சொல்வதை நம்பி தண்டனை விதிக்கும் நீதிமன்றம், வீதியில் நிற்கும் இலட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையைப் புறக்கணிப்பது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார் பா.ஜ.க. எம்.பி. சாக்ஷி மகராஜ். ஹிந்து துறவிகளின் சொத்தை அபகரிக்க சர்வதேச சதி நடப்பதாக எச்சரிக்கிறார் சு.சாமி.
இவையெல்லாம் அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள் அல்ல. ஆர்.எஸ்.எஸ்.-ஐ பொருத்தவரை, ராம் ரகீமின் வாக்குவங்கி தேர்தலுக்கானது மட்டுமல்ல. அதிருப்தியுற்றிருக்கும் தலித் சீக்கியர்களை இந்து மதத்துக்கு கர்வாப்ஸி செய்வது, இவர்களைக் காட்டி, இந்து மதத்துக்குள்ளும் இந்து தேசிய அரசியலுக்குள்ளும் அடங்கிப்போகாமல் தொந்திரவு கொடுக்கும் அகாலி சீக்கியர்களைப் பணிய வைப்பது – என்பன சங்க பரிவாரத்தின் நோக்கங்கள்.
இதற்குத்  தோதான ஏவுதளமாக தேரா சச்சா சவுதா பயன்படும் என்ற காரணத்தினால்தான், ராம் – ரகீம் என்ற போலி மதச்சார்பின்மைப் பெயரை சகித்துக் கொண்டு இத்தனை காலம் அவனுக்கு சலாம் போட்டிருக்கிறது சங்க பரிவாரம். ஸ்ரீமான் சோ அவர்களும் குருமூர்த்தி அவர்களும், தேசத்தின் நலனை உத்தேசித்து, தரம் தாழ்ந்த அ.தி.மு.க. கும்பலை சகித்துக் கொள்கிறார்களே, அது போலத்தான்.
ஜெயலலிதாவும் ராம் ரகீமும்
உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேரா சச்சா சவுதாவில் நடந்து வரும் சோதனையில், உள்ளே ஒரு இரகசிய உல்லாச நகரமே இயங்கி வந்திருப்பது தெரிகிறது. தண்டனை விதிக்கப்பட்ட மறு கணத்திலிருந்து அணிஅணியாக மூடப்பட்ட வாகனங்களில் ஆயுதங்களும் பணமும் ஆவணங்களும் ராஜஸ்தானுக்குச் சென்றுவிட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். திருப்பூர் கன்டெயினர் விவகாரத்தை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
தற்போது தேராவில் நடந்து வரும் சோதனையில் ஏ.கே.47 துப்பாக்கித் தோட்டாக்களும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. பஞ்சாப் உளவுத்துறைக்குச் சொந்தமான வாகனம் தேராவின் உள்ளே பிடிபட்டிருக்கிறது. தேரா வளாகத்திலிருந்து தப்பிச் செல்ல 5 கி.மீ. நீள சுரங்கப்பாதை உள்ளது என்பது அடுத்த செய்தி. இசட் பிளஸ் பாதுகாப்புக்கு அப்பால், பஞ்சாப் போலீசின் கமாண்டோக்கள் 9 பேரும் ராம் ரகீமின் பாதுகாப்புக்கு இருந்ததாகவும், அதில் சிலர் ராம் ரகீமைத் தப்ப வைக்க முயன்றதாகவும் அரியானா அரசு குற்றம் சாட்டுகிறது.
இரண்டு மாநில அரசுகள் மற்றும் டெல்லியின் அரசு எந்திரம் முழுவதும் ஒரு கிரிமினலின் கூலிப்படையாகவே செயல்பட்டிருப்பது அம்பலமாகியிருக்கிறது – தமிழ்நாடு போலீசும் அரசு எந்திரமும் அம்மாவுக்குப் பயன்பட்டதைப் போல.
ராம் ரகீமின் குடும்பத்தினர் பா.ஜ.க. ஆட்சி செய்யும் ராஜஸ்தானுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுவிட்டனர். சிறைக்கு அனுப்பும்வரை ராம்ரகீமுடன் இருந்த ஹனிபிரீத் நேபாளத்துக்கு தப்பியிருக்கக் கூடும் என்று கதையளக்கிறது போலீசு. சங்கரராமன் கொலை கேசில் பெரியவாள் நேபாளத்துக்குத் தப்பிக்க முயன்றதை நினைவுபடுத்திக் கொள்ளவும்.
தேராவின் தலைவர்தான் தண்டிக்கப்பட்டிருக்கிறாரேயன்றி, தேரா தடை செய்யப்படவில்லை என்று பேசியிருக்கிறார் பா.ஜ.க.வின் சுகாதார அமைச்சர். அ.தி.மு.க. -வின் தலைவிதான் தண்டிக்கப்பட்டிருக்கிறார், அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கிறது என்பது போலத்தான்.
ஜெயலலிதா செத்துவிட்டார், சசிகலா சிக்கி விட்டார் என்பது தமிழகத்தின் கதை. ராம் ரகீம் சிக்கிக் கொண்டான், ஹனிபிரீத் தப்பி விட்டாள் என்பது அரியானாவின் கதை.
ரத்த வாரிசுகளை ஆன்மீக வாரிசாக நியமிக்கக்கூடாது என்பது தேராவின் மரபாம். எனவே, ராம் ரகீமின் மகன்தான் தேராவின் சொத்துகளுக்கு வாரிசு என்று அறிவித்திருக்கிறார் ராம் ரகீமின் அம்மா. அங்கேயும் ஏதோவொரு பொதுக்குழுவைக் கூட்டித்தான் இந்த முடிவை அறிவித்திருக்கிறார்கள் என்பதுதான் நகைச்சுவை.
சிறையில் இருந்தபடி ராம்ரகீமே தேராவை இயக்குவார் என்று அறிவிப்பு வெளியிட்டார் தேராவின் மேனேஜர். அடுத்த சில நாட்களின் தேராவின் மானேஜர் கைது செய்யப்பட்டுவிட்டார். நடப்புகள் அனைத்தும் ஜெயாவின் அரசியல் வாரிசு, சொத்து வாரிசு சண்டையை அப்படியே பிரதிபலிக்கின்றன.
அ.தி.மு.க.வின் அடுத்த வாரிசு யார் என்பதைத் தீர்மானித்து, அவர்களுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்கும் பொறுப்பை ஏற்றுள்ள பிராமணோத்தமர்கள் யார் என்பதை நாம் அறிவோம். தேரா சச்சா சவுதாவின் அடுத்த வாரிசு யார்? அந்த வாரிசை நியமிக்கும் அதிகாரத்தை சங்கபரிவாரம் எந்த பிராமணோத்தமருக்கு வழங்கியிருக்கிறது? என்பதுதான் இப்போதைக்கு நம் அறிவுக்குப் புலப்படாத பிரம்ம ரஹஸ்யம்.
தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டு, உயர் குலத்தில் பிறந்த மேன்மக்கள், எத்தகைய ஒழுக்கம் கெட்ட கார்யங்களிலெல்லாம் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது!
– சூரியன்
– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

கருத்துகள் இல்லை: