ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

எம்.எல்.ஏ. நீக்கம் : வெற்றித் தீர்ப்பா ? வடிவேலு வாங்கிய ’கப்’பா ?

ஜெயலலிதாவுக்கும் சங்க பரிவாரத்துக்கும் இடையிலான ஒற்றுமைகளில் தலையாயது என்ன தெரியுமா? கரண்டு கம்பங்களுக்கு நாய் அளிக்கின்ற மரியாதையை ஒத்த மரியாதையை நீதிமன்றம் உள்ளிட்ட எல்லா நிறுவனங்களுக்கும் அளிப்பது தான் !
ல்லோரும் வெற்றி வெற்றி என்று கொண்டாடுகிறீர்களே, அப்படியானால் தோல்வி அடைந்தது யார்?” என்று நேற்று நியூஸ் 18 தொலைக்காட்சி விவாதத்தில் கேள்வி எழுப்பினார் நெறியாளர் குணசேகரன்.
“இது பழனிச்சாமி அரசுக்கு பெரும்பான்மையை உருவாக்கும் உள் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முடிவு. பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிடாமல் ஆளுநர் தாமதித்துக் கொண்டிருக்கும் சூழலில், சபாநாயகரின் இந்த முடிவு வந்திருக்கிறது” என்று சபாநாயகரின் முடிவையும், ஆளுநரின் முடிவெடுக்காத நிலையையும் ஆங்கில இந்து நாளேட்டின் தலையங்கம் விமரிசித்திருந்தது.

ஜெயலலிதாவின் வாரிசுகளான அதிமுக திருடர்களும், அந்த திருடர்களின் அரசைப் பராமரித்து வரும் மோடி தலைமையிலான பார்ப்பன பாசிஸ்டுகளும் தமிழகத்தில் நடத்திவரும் அரசியல் நிர்வாண நடனம், இந்து பத்திரிகையே சகித்துக்கொள்ள முடியாத எல்லைக்குப் போய்விட்டதைத்தான் இந்த தலையங்கம் காட்டுகிறது.

சட்டப்புலமை வாய்ந்த இந்து நாளேடு முதல் சட்ட அறிவில்லாத சராசரித் தமிழன் வரை அனைவருக்கும் புரிந்த, இந்த சிரிப்பாய் சிரித்த உண்மை, உயர் நீதிமன்றத்துக்கு மட்டும் புரியவில்லை. “தகுதி நீக்கம் செல்லாது” என்று முதல் பார்வையிலேயே கூறத்தக்க இவ்வழக்கில், தகுதி நீக்கத்துக்கு இடைக்காலத் தடை கூட விதிக்கப்படவில்லை.
“அக் 4 வரை வாய்தா வேண்டும்” என்பது எடப்பாடியின் கோரிக்கை. அது நிறைவேற்றப்பட்டு விட்டது. 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தாமல் தள்ளிப்போடுவதும் எடப்பாடிக்கு நல்லதே. அதுவும் நிறைவேறிவிட்டது.
“தேர்தல் ஆணையத்தின் கருத்தை கேட்காமல், அக் 4 வரை தேர்தல் அறிவிக்கக்கூடாதுன்னு உத்தரவிடலாமா” என்று நீதிபதிக்கு ஒரு சந்தேகம். “அதுக்கு தோஷமில்லை. பேஷா பண்ணுங்கோ”ன்னு சொல்லிட்டார் எடப்பாடி அரசின் வக்கீல் ஆர்யமா சுந்தரம்.
(Earlier, when the judge wanted to know whether such an order could be passed without the Election Commission being a party before the court and especially when the Assembly Secretary had declared all the 18 seats vacant, Mr. Sundaram replied in the affirmative. Mr. Sundaram sought an adjournment till October 4 when senior counsel Dushyant Dave, representing four disqualified MLAs, was on his feet arguing the case on merits – The Hindu, 21, sep)
வெற்றி வெற்றி என்று தினகரனும் திமுகவினரும் சொல்லிக் கொண்டாலும், எடப்பாடி அரசின் இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தந்திருக்கிறது உயர் நீதிமன்றம் என்பதே இந்த தீர்ப்பு கூறும் உண்மை.
000
இனி இதனை ஒரு நீதிபதி விசாரித்து தீர்ப்பளித்து, அப்புறம் இரண்டு நீதிபதிகள் அமர்வு அப்பீலை விசாரித்து, அதற்குப் பின் சுப்ரீ…ம் கோர்ட்டு விசாரித்து இதில் முடிவு சொல்ல வேண்டும். “தகுதி நீக்கம் செல்லும்” என்றுகூட முடிவு வரலாம். இதற்கு எத்தனை மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகும் என்பது அம்மாவின் பாசறையில் பயின்ற திருடர்களுக்குத் தெரியும்.
எடப்பாடி கும்பலுக்காக பார்ப்பன பாசிஸ்டு புரோகிதர்கள் நடத்தி வரும் இந்த அரசியல் விபச்சார ஹோமத்துக்கான செலவு, தமிழ் மக்களின் வரிப்பணத்திலிருந்து செய்யப்படுகிறது என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறுவதை “அரசியல் அதிரடிப்பேச்சு” (political rhetoric) என்று சிலர் நிராகரிக்கலாம். நடந்திருப்பது முறைகேடு என்றாலும், “நீதிமன்றமானது அதனை சட்ட முறைப்படி கையாள்வதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது” என்று அவர்கள் கேட்கலாம்.
“நீதிமன்றம் ஏன் புரட்சி செய்யவில்லை” என்பதல்ல நமது கேள்வி. கழுதையைக் கழுதை என்று சொல்லக்கூட முடியாமல், கழுதையா குதிரையா என்ற கச்சேரியை அல்லவா நீதிமன்றம் தொடங்கி வைத்திருக்கிறது! ஆளுநர் என்ன செய்தாரோ, அதே காரியத்தைத்தானே நீதிமன்றமும் செய்திருக்கிறது.
திருடர்களின்பால் மிகுந்த கண்ணியத்தையும் கருணையையும் காட்டும் நீதிமன்றம், மக்களுக்கு எதிராக மட்டும் வாளை வீசுகிறது.
“மதியம் 2 மணிக்குள் பணிக்கு வரவில்லையென்றால் விளைவுகள் மோசமாக இருக்கும்” என்று அரசு ஊழியர்களை மிரட்டுகிறார் ஒரு நீதி அரசர். “நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களைப் போராடத் தூண்டியது யார் என்று விசாரிக்க உளவுத்துறை போலீசை ஏவுகிறார்”. வந்தே மாதரம் பாடவேண்டும் என்றும் “ஜாமீன் வேண்டுமென்றால் தேசியக்கொடிக்கு சலாம் போடவேண்டும்” என்றும் வாய்க்கு வந்தபடியெல்லாம் உத்தரவுகள் நீதிமன்றத்திலிருந்து உதிர்கின்றன.
தமிழ் மாணவர்களையும் அரசு ஊழியர்களையும் போக்குவரத்து தொழிலாளர்களையும் சூத்திர அடிமைகளைப் போல நடத்தும் உயர்நீதிமன்றம், பார்ப்பன பாசிஸ்டு – எடப்பாடி கூட்டணியிடம் கண்ணியம் காட்டுகிறது. இதற்கு வேறு ஏதோ உள்நோக்கம் இருக்கிறதென்று யாரும் கருதிவிடவேண்டாம்.
நீதி அரசர்களுடைய நீதி வழங்கும் முறை மனு நீதியின் அணுகுமுறையை ஒத்திருப்பதையும், அவர்களுடைய தோரணையில் சங்கராச்சாரியின் சாயல் இருப்பதையும், நாம் கவனிக்கத் தவறியிருந்தால் அது நமது பிழையேயன்றி, நீதியரசர்களின் பிழையல்ல.
000
ஜெயலலிதாவுக்கும் சங்க பரிவாரத்துக்கும் இடையிலான ஒற்றுமைகளில் தலையாயது என்ன தெரியுமா? கரண்டு கம்பங்களுக்கு நாய் அளிக்கின்ற மரியாதை என்னவோ, அதனையொத்த மரியாதையை நீதிமன்றம் உள்ளிட்ட எல்லா நிறுவனங்களுக்கும் அளிப்பது என்பதுதான் அவர்களுக்கிடையிலான ஒற்றுமை.
முதலில் சட்டத்தையும் மரபுகளையும் மீறுவது, பிறகு அந்த அத்துமீறலை இதுதான் எதார்த்தம் என்று ஒப்புக்கொள்ளுமாறு நீதிமன்றம் உள்ளிட்ட அரசமைப்பின் நிறுவனங்களையும், சமூகத்தையும் பணிய வைப்பது என்பதுதான் அந்த உத்தி.
பாபர் மசூதி இடிப்பில் தொடங்கி காவிரி, நீட், ஆதார், மாட்டிறைச்சித்தடை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் பாஜக கையாண்டு வரும் முறை என்னவோ அதுதான் தற்போது தமிழக சட்டமன்றத்திலும் கையாளப்பட்டிருக்கிறது.
பார்ப்பன பாசிஸ்டுகளின் இந்த நடவடிக்கையை, காங்கிரசோ பிற கட்சிகளோ செய்திருக்கின்ற நாடாளுமன்ற அராஜக நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு பொதுமைப்படுத்த முடியாது. அவ்வாறு செய்வது தமிழகத்தை ஆக்கிரமிக்கத் துடிக்கும் சங்க பரிவாரத்துக்கு மறைமுகமாக உதவுவதாகவே இருக்கும்.
சட்ட விரோதமாகவும், முறைகேடாகவும் அதிகார நாற்காலியில் அமர்ந்திருக்கும் இந்தக் கொள்ளைக்கூட்டத்துக்கு அடிபணிய மறுப்பது தமிழ் மக்களின் உரிமை. திருடர்களின் எண்ணிக்கை 114 என்பதிலிருந்து 117 ஆக உயர்ந்து விடும் பட்சத்தில் இது ஜனநாயகமே என்று ஒப்புக்கொள்வதற்கும், குமாரசாமி கணக்கின் அடிப்படையில் ஜெயா நிரபராதியே என்று ஒப்புக்கொள்வதற்கும் அதிக வேறுபாடில்லை.
–    சூரியன்
பின்குறிப்பு:
வெற்றி! வெற்றி! என்று கப் வாங்கிக்கொண்டு வந்த வடிவேலுவிடம், “கொழுந்தனாரே, நீங்க கப் வாங்க செலவு பண்ணின காசில ஒரு மளிகைக்கடை வச்சிருந்தா, உங்களுக்கு கல்யாணமாவது ஆகியிருக்கும்” என்று வடிவேலுவுடைய மதனி சொல்வாரே, அந்த காட்சி நினைவிருக்கிறதா? நீதிமன்றத்தின் மூலமாக வெற்றி பெற்று கப் வாங்கிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு, மேற்படி காட்சியை நினைவூட்டுகிறேன்.

கருத்துகள் இல்லை: