திங்கள், 13 நவம்பர், 2017

இந்திய கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களை சுட்டது ... ராமேஸ்வரத்தில் பரபரப்பு!


மின்னம்பலம் :கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது ராமேஸ்வர மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!மீனவர்களுக்கான சேமிப்பு நிதியை வழங்கக்கோரிக் கடந்த 7ஆம் தேதி முதல் நடந்த மீனவர்கள் போராட்டம் இன்று (நவம்பர் 13) கைவிடப்பட்டது. இதையடுத்து ராமேஸ்வரம் துறைமுகப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மீன்பிடி தொழிலாளர்கள் அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்குச் சென்றனர். இதனால் ஆறு நாட்களாக வெறிச்சோடிக் காணப்பட்ட துறைமுகங்கள் இன்று பரபரப்பாக காணப்பட்டது.
இந்நிலையில் இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் மீனவர் பிச்சை என்பவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்திய கடற்படையினர் மீனவ படகுகளை துரத்தி வந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் மீனவர்கள் தங்களது வலைகளைக் கடலிலேயே வெட்டிவிட்டு அவசர அவசரமாகக் கரைக்கு திரும்பினர். அவ்வாறு திரும்பிக் கொண்டிருக்கும் போது ஒரு படகையும் அதில் இருந்த மீனவர்களையும் கடற்படையினர் பிடித்து வைத்துள்ளதாகவும், அவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தி வருவதாகவும் கரைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் மீனவர் இருதயராஜ் என்பவர் செல்போன் மூலம் செய்தியாளர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இலங்கை கடற்படையினர் தான் மீன் பிடித்திருப்பார்கள் என்று எண்ணி கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற கேள்விக்கு. ராமேஸ்வர மீனவர்களின் அனைத்துப் படகிலும் பச்சை நிறத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டிருக்கும். இதை அறிந்தும் இந்திய கடற்படையினர் எதற்காகத் தாக்குதல் நடத்தினர், மீனவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு ஏன் விடுவிக்க மறுக்கின்றனர் என்பது குறித்து தெரியவில்லை என்று வேதனையுடன் கூறினார்.
இந்தச் சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியையும். கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: