திங்கள், 13 நவம்பர், 2017

சாருநிவேதிதா : இந்தியா பற்றி ஏன் திட்டி எழுதுகிறீர்கள்?..... கேட்டால் ..... நட்பை முறித்து கொள்வேன்!

Charu Nivedita : இதயத்தைப் போல் காண்பித்துக் கொண்டிருக்கும் இந்தப் பையன் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டான். பதினோரு கத்திக் குத்துக்கள் அவன் உடம்பில் இருந்தன. அம்மா தேநீர் போட்டுக் கொண்டிருந்தாள். பால் இல்லை. இதோ போய் வாங்கிக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி விட்டுக் கடைக்குப் போனவன். வெளியே வந்த போது அவன் நண்பன் சமீயுல்லா ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தான். டேய், எங்கடா போறே என்றான் சமீயுல்லா. பால் வாங்கப் போறேண்டா. சரி வா, வண்டீல ஏறு. கடை அந்தத் தெரு முனையில் இருந்தது.
நம் வீட்டுப் பையன் போல் இருக்கிறான் இல்லையா? ஒரு கும்பலே அடித்துக் கொன்றது. அடியில் சாகவில்லை போல என்று நினைத்துக் கத்தியால் குத்திக் கொண்டே இருந்தது கும்பல். செய்த தப்பு என்ன தெரியுமா? பார்ப்பதற்கு முஸ்லீம் போல் இருந்தான். புகைப்படத்தை நன்றாகப் பாருங்கள். உங்கள் பையன் மாதிரி இருக்கிறானா, உங்கள் தம்பி மாதிரி இருக்கிறானா? அப்பா பீடி சுற்றும் தொழிலாளி. இந்தப் பயலுக்குப் படிப்பு வரவில்லை. culture of poverty. பயலின் அப்பா அரசாங்கத்தில் செக்‌ஷன் ஆபீசராக இருந்தால் படிப்பு வந்திருக்கும். அப்பா பீடி சுற்றும் தொழிலாளி. பயல் எலெக்ட்ரீஷியனாகப் போனான். ஏதோ கொஞ்சம் சம்பாதித்தான்.

ஆனால் பால் வாங்குவதற்கு ஏண்டா சமீயுல்லாவோடு போனாய் நாயே, கேடு கெட்ட நாயே? இந்தியாவில் முஸ்லீமோடு நீ நண்பனாகக் கூட இருக்கக் கூடாதுடா. தெருமுனைக் கடையை நெருங்குவதற்குள்ளாகவே காவிக் கூட்டத்தால் அடித்துக் கொல்லப்பட்டான். அடியில் சாகவில்லை என்று கும்பல் கத்தியாலும் குத்தியது.
அம்மா பெயர் சீதம்மா. இந்தப் பயல் எங்கேங்க, பால் வாங்கப் போறேன்னு போனான். அப்பனும் ஆயாவும் தேடிக் கொண்டே இருந்தார்கள். மறுநாள் காலை பையனின் உடம்பு போஸ்ட் மார்ட்டம் பண்ணி உடம்பாக வீட்டுக்கு வந்தது. பதினாலு இடத்தில் கத்திக் குத்து. அதுவரைக்கும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பையன் கொல்லப்பட்டதே தெரியாது.
பயல் பேர் என்ன தெரியுமா? ஹரிஷ் பூஜாரி. இந்தியா பற்றி ஏன் திட்டி எழுதுகிறீர்கள் என்று இனிமேல் யாராவது என்னிடம் கேட்டால் அந்த நிமிடமே அவர்களின் நட்பை முறித்துக் கொள்ளலாம் என்று உறுதி எடுத்திருக்கிறேன். இந்த முறை ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவில் இதைத்தான் எழுதி இந்திய வாழ்க்கையைக் கிழிக்கலாம் என்று இருக்கிறேன்.
https://www.dailyo.in/…/muslims-cow-vigi…/story/1/19429.html
இந்தச் சம்பவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டவர் யார் தெரியுமா? உமா ஷங்கரி. தி. ஜானகிராமனின் மகள். அவருக்கு என் கோடி நன்றி.

கருத்துகள் இல்லை: