வியாழன், 16 நவம்பர், 2017

தினகரனின் தங்கை சீதளாதேவிக்கும் , அவரது கணவருக்கும் சிறை தண்டனை ... உயர் நீதிமன்றம்

tamilthehindu : சசிகலா சகோதரி வனிதாமணியின் மகளும் டிடிவி தினகரனின் தங்கை மற்றும் அவரது கணவருக்கு 3 மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகள் சீதளா தேவி, இவர் டிடிவி தினகரனின் சகோதரி ஆவார். அவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியர். பாஸ்கரனும், அவரது மனைவியும் 1988 முதல் 1997 வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.68 கோடி சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. 1998 ல் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 1999-ல் சிபிஐ கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்தது.
2001-ல் சாட்சிகள் விசாரணை நடத்தப்பட்ட இந்த வழக்கில் 2008-ல் எஸ்.ஆர்.பாஸ்கரனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் மற்றும் 20 லட்சம் ரூபாய் அபராதம், சீதளாதேவிக்கு 3 ஆண்டு கடுங்காவல் மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி நாகநாதன் தீர்ப்பு வழங்கினார். இதனை எதிர்த்து, 2008-ம் ஆண்டே, இருவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

மேல் முறையீட்டு வழக்கில் இருவர் மீதான தண்டனையை நிறுத்தி வைத்து வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து வந்ததது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. கடந்த 9 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் இருவரது தண்டனையையும் உறுதி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: