வியாழன், 15 மார்ச், 2018

தமிழ் ராக்கர்ஸ்... குழுமத்தைச் சேர்ந்த 5 பேரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.

பிடிபட்ட தமிழ் ராக்கர்ஸ்!
மின்னம்பலம் :திரையுலகத்தையே மிரட்டிவந்த தமிழ் ராக்கர்ஸ் மற்றும் டிவிடி ராக்கர்ஸ் நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவு செய்து திரையுலகத்திற்கே சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர்கள் தமிழ் ராக்கர்ஸ் குழுமம். இதனால் பெருமளவில் நஷ்டமடைந்துவந்த தயாரிப்பாளர்கள் இதற்கு முடிவுகட்டும் விதமாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பைரசி என்ற குழுவை உருவாக்கினார்கள்.
இதன் மூலம் தமிழ் ராக்கர்ஸ் குழுவினை விரைவில் கண்டறிவோம் என விஷால் குழுவினர் சூளுரைத்திருந்தனர். அதன்படி தமிழ் ராக்கர்ஸ் மற்றும் டிவிடி ராக்கர்ஸ் குழுமத்தைச் சேர்ந்த 5 பேரை கேரள பைரசி பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களைப் பதிவேற்றம் செய்துவந்த விழுப்புரத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 நபர்களை எஸ்பி பிரசாந்தன் தலைமையிலான கேரள பைரசி பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்தி, சுரேஷ் , பிரபு ஆகிய மூவரும் புலிமுருகன் படத்தை .IN, .AC, .NE ,.CO, .IS, .US, .RO உள்ளிட்ட 19 டொமைன்களிலிருந்து பதிவேற்றம் செய்துவந்திருப்பதும், திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான்சன், ஜெகன் டிவிடி ராக்கர்ஸ் என்ற பெயரில் பதிவேற்றம் செய்துவந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து எஸ்பி பிரசாந்தன், “புலிமுருகன் மற்றும் ராம் லீலா படக் குழுவினர் அளித்த புகாரின் பேரில் தொடர்ந்து கண்காணித்துவந்து அவர்களைக் கைது செய்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
விளம்பரங்களுக்காக பல்வேறு நிறுவனங்களிலிருந்து பணம் பெற்றிருப்பதால் இவர்களின் அக்கவுண்ட்களைத் தொடர்ந்து கண்காணித்து, போலீசார் ஐந்து பேரையும் கைது செய்தனர். இவர்கள் பயன்படுத்திவந்த லேப்டாப், ஹார்டு டிஸ்க், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த வருடம் தமிழ் ராக்கர்ஸ் அக்கவுண்டிற்கு ஒரு கோடியும், டிவிடி ராக்கர்ஸ் அக்கவுண்டிற்கு 75 லட்சமும் பணபரிமாற்றம் நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை பைரசி பிரிவு போலீசார் முடக்கம் செய்துள்ளனர். ஆனால் மற்றொரு பெயரில் படத்தை வெளியிட்டு வந்துள்ளனர். பிரித்விராஜின் விமானம் படத்தை இணையதளத்தில் வெளியிடுவதாக படக் குழுவினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் அந்த தளத்தை கண்காணித்த போலீசார் அவர்களை பின்தொடர்ந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: