வியாழன், 24 மே, 2018

அரசாங்கம் என்பது மக்களுக்காகத்தானே தவிர பணக்கார கார்ப்போரேட்களுக்காக அல்ல.

Shyam Shanmugaam L தூத்துக்குடியில் மே 22 அன்று நடந்த சம்பவங்களுக்குப்
பிறகு-
மறுநாள் மே 23 அன்று வெளி மாவட்டப் போலீஸ் குவிக்கப்பட்டபிறகும் போராட்டக்காரர்களை அடக்கத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அதிலும் உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இது தவிர்த்திருக்கப்பட்டிருக்க வேண்டுமா, இல்லையா?
நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்.
மறைந்த ஜெயலலிதா தலைமையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2016 மே மாதம் 23 ஆம் தேதி அ.தி.மு.க ஆட்சிக்கட்டில் ஏறியது.
ஈராண்டு நிறைவு நாளான இந்த ஆண்டு மே 22ம், 23ம் இவ்வளவு கொடூரமாக நரவேட்டையில் முடிந்திருக்கிறது.
"மஞ்சள் டீ ஷர்ட்" அணிந்த போலீஸ் சீருடையில் இல்லாத நபர்கள் குறி பார்த்துத் துப்பாக்கிச் சூடு நடத்திய படக்காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்ட வேண்டியவர்கள் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரும் காவல்துறை உயர் அதிகாரிகளும் தான். தலைமை வகிக்கும் அரசும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்.
தூத்துக்குடியில் முத்தையாபுரம் அருகே உள்ள ஸ்பிக் உர ஆலையில் 1980வாக்கில் வேளாண்மை நிபுணராகப் பணியாற்றி இருக்கிறேன்.
பின்னர் தராசு 1996 காலகட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை அபாயம் குறித்து எழுதி இருக்கிறேன்.

இதே தூத்துக்குடியில் பேசி இருக்கிறேன். அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்வரன்சிங் என்று நினைக்கிறேன்.
சமூக ஆர்வலர்களோடு சென்று மனுக் கொடுத்திருக்கிறோம்.
அந்தக் காலகட்டத்தில் பெரிய விழிப்புணர்ச்சி கிடையாது.
போகப் போகத் தான் மக்கள் ஆலையின் பாதிப்புகளை உணர்ந்து கொண்டனர்.
நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற கிராமங்களில் ஹைட்ரோகார்பன் பிரச்னைகளை மக்கள் இப்ப்போது சுமார் இரண்டு ஆண்டுகளாகத் தான் புரிந்து கொண்டிருக்கின்றனர்.
அது போல.
அன்று என்னோடு இணைந்திரு்ந்த நண்பர் மகராசன் இப்போதும் தூத்துக்குடியில் தான் உள்ளார். மதிமுகவில் இருக்கிறார்.
நண்பர் வைகோவின் பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து இருக்கிறார். நடந்தது என்ன என்பது குறித்து அவருடனும் பேசினேன்.
"ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தவர்களிடம் உருட்டுக்கட்டை உள்ளிட்ட எந்த ஆயுதங்களும் இல்லை.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரிய அளவில் கற்கள் இருக்க வாய்ப்பு கிடையாது.
பின்னர் எப்படி அவ்வளவு கல்லெறி சம்பவங்கள் ஏற்பட்டன? வாகனங்கள் எப்படித் தீ வைத்து எரிக்கப்பட்டன?
ஆட்சியர் அலுவலகக் கண்ணாடிகளை உடைத்தது யார்? ஏன் ஆட்சித் தலைவர் உட்படப் பெரிய அதிகாரிகள் யாருமே அங்கு இல்லை?
இவ்வளவு பெரிய கலவரத்தைப் போராட்டக்காரர்கள் தான் ஏற்படுத்தினார்கள் என்றால் ஆட்சியர் அலுவலக ஊழியர் ஒருவருக்குக் கூடக் காயம் ஏற்படவில்லை என்பது எப்படி?"
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் தேதி மே 22 என்று உள்ளது. ஆனால் அதை இணைத்துள்ள அரசு செய்திக் குறிப்பு மே 16 என்று தேதி இடப்பட்டு உள்ளது.
இவ்வளவு கவனக்குறைவாகவா செயல்படுவார்கள்? அல்லது முன்கூட்டியே தயாரித்து விட்டார்களா?
ஏன் இந்தச் சந்தேகம் எழுகிறதென்றால் ஜல்லிக்கட்டுக் கலவரத்தை அடக்க அனு்ப்பப்பட்ட போலீஸ் டீமே ஆட்டோக்களுக்குத் தீ வைத்த வீடியோக்களை நாம் அனைவருமே பார்த்திருக்கிறோம்.
தேனீக் கூட்டைக் கலைக்க நெருப்பு வைத்ததாக அதற்கு ஒரு கேவலமான சாட்சியமும் கூறப்பட்டது.
இன்றைய தேதி வரை அந்த விசாரணைக் கமிஷன் தீர்ப்பு எப்போது வரும் என்று என்று அறிவிக்கப்படவில்லை.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுமார் 100 நாட்கள் மக்கள் அறவழியில் போராடி வந்திருக்கிறார்கள்.
மே 22 கலெக்டர் ஆபீஸ் முற்றுகையும் அமைதியாக முடிந்திருக்கும். 144 தடை உத்தரவு போட்டது தவறு.
உணர்ச்சி வசப்பட்ட போராட்டக்காரர்கள் அதை மீறுவார்கள் என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியும்.
சுமார் ஐந்து கி.மீ. தூரம் அவர்கள் பேரணியாக வந்திருக்கிறார்கள். தூத்துக்குடி நகரின் பல திசைகளிலிருந்தும் அணி சேர்ந்திருக்கிறார்கள்.
தகுந்த முன்னேற்பாடு செய்திருந்தால் அவர்களை ஆங்காங்கே கைது செய்து துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாம்.
ஜனநாயக அமைப்பில் அரசாங்கம் என்பது மக்களுக்காகத்தானே தவிர பணக்கார கார்ப்போரேட்களுக்காக அல்ல.
மக்களுக்கான போராட்டத்தில் உயிரிழப்பு என்பது மன்னிக்க முடியாத குற்றம்.
துப்பாக்கிச் சூட்டை ஆதரிப்பவர்களும் நியாயப்படுத்துபவர்களும் மக்கள் விரோத சக்திகள் என்றே கருதப்படுவார்கள்.
ஒரு அரசு மக்களின் வெறுப்புக்கு ஆளாவது வேறு. மக்களின் சாபத்துக்கு ஆளாவது நிச்சயம் நல்லதல்ல.
ஒரு மானைக் கூடச் சுடமுடியாது. ஆனால் மனிதனை சர்வ சாதாரணமாகச் சுட்டுக்கொல்லமுடியும் என்பது ஜனநாயக நாட்டில் எவ்வளவு பெரிய கொடுமை?
"பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!!" என்று பாஞ்சாலி சபதத்தில் மகாகவி கூறுவது இது தானோ?

கருத்துகள் இல்லை: