புதன், 19 ஜூலை, 2017

மன்னார்குடி .. சீதனம் கேட்டு டாக்டர் மனைவி அடித்து கொலை!

மன்னார்குடி: மன்னார்குடியில், வரதட்சணை கேட்டு டாக்டர் மனைவி அடித்து கொலை செய்யப்பட்டார் என்று புகார் கூறி உறவினர்கள்  7 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கணவர், மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் முத்தழகன் (57). இவரது மகன் இளஞ்சேரன் (32).  இவர் திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இளஞ்சேரனுக்கும் சேரன்குளம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு  பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயனுடைய மகள் திவ்யா (25) என்பவருக்கும் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு முத்துக்கிருஷ்ணன் (3) என்ற மகன் உள்ளான். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு  திவ்யா கணவருடைய வீட்டில் படுக்கை அறையில் காயங்களுடன்  மயங்கி கிடந்தார். கணவருடைய உறவினர்கள் திவ்யாவை மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். திவ்யாவை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
திவ்யா மரணமடைந்த தகவல் கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். திவ்யாவை, அவரது கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி அடித்து கொலை செய்துவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மன்னார்குடி காவல் நிலையத்தில் திவ்யாவின் சகோதரர் பிரேம்குமார் புகார் அளித்தார். இதனால், மர்ம மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிைலயில், நேற்று காலை 9 மணிக்கு மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் திவ்யாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வரதட்சணை கேட்டு திவ்யாவை கொலை செய்த, கணவர் இளஞ்சேகரன், அவரது தாய்-தந்தை ஆகியோரை கைது செய்யவேண்டும் என கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்து மன்னார்குடி போலீசார், ஆர்டிஓ செல்வசுரபி ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். ஆனாலும் சாலை மறியலை கைவிட மறுத்தனர்.

இதைத்தொடர்ந்து, மீது வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துதல் (498ஏ), இறப்புக்கு காரணமாக இருந்தது  (304 பி) ஆகிய இரு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, மாலை 4 மணிக்கு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதன்காரணமாக சுமார் 7 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே டாக்டர் இளஞ்சேகரன், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி ஆகியோர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். தினகரன்

கருத்துகள் இல்லை: