புதன், 19 ஜூலை, 2017

கமல் ஹாசன் அரசியல் ஆரம்பம் : தேடா பாதைகள் தென்படா.. வாடா தோழா என்னுடன்


தமிழக அரசின் அனைத்துத்துறைகளிலும் ஊழல் என்று நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரம் விமர்சித்ததைத் தொடர்ந்து, தமிழகத்தின் அநேக அமைச்சர்கள் கமலுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பொதுவெளியில் பயன்படுத்தினர்.
இதற்கிடையில் கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டும் தொணியில் பேசுவதை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் கண்டித்தார்.
மேலும் வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்டோரும் அமைச்சர்களின் அத்துமீறிய பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தனர். திரையுலகத்தில் நடிகர்கள் சங்கச் செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், நடிகர் பார்த்திபன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் கமலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று ஜூலை 18ஆம் தேதி இரவு பத்து மணியளவில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடி அரசியல் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
‘இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தெழுவோம் மனதளவில் உம்போல் யாம் மன்னரில்லை
தோற்று இறந்தால் போராளி முடிவெடுத்தால் யாம் முதல்வர்…. …. ….
தேடா பாதைகள் தென்படா வாடா தோழா என்னுடன்…’ என்பதுதான் அந்த கவிதை.
கடந்த சில நாள்களாக கமலுக்கும் அமைச்சர்களுக்கும் இடையே மோதல் நடந்து வரும்நிலையில்… ‘இடித்துரைப்போம் யாரும் இனி மன்னர் இல்லை. தோற்று இறந்தால் போராளி, முடிவெடுத்தால் யாம் முதல்வர்’ என்று பகிரங்கமாக தனது அரசியல் முடிவை எடுத்திருக்கிறார் கமல்ஹாசன். மேலும், ‘புரியாதவர்கள் நாளை (இன்று) ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி வரும் பாருங்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார் கமல். அமைச்சர்கள் கமல்ஹாசனை தரக்குறைவாக பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று கமல் நற்பணி மன்றத்தினர் பிரதமர் மோடிக்குக் கடிதம் அனுப்பினார்கள். அன்று இரவே கமலிடம் இருந்து இப்படி ஓர் அதிரடி ட்விட்டர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: