செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

ஐந்தடி ஆறடி தூரத்தில் 2300வருடங்களைத் தாண்டி பயணித்துவிடலாம். கொடுமணல் கிராமத்தின் எந்த இடத்திலும் தோண்டினால் ...

thetimestamil: திருப்பூர் வழியாக ஒரத்துப்பாளையத்தில் வந்து நிறையும் நொய்யலில்லை இந்நொய்யல். இது புராதனமான காஞ்சிமாநதி. நொய்யலென்றாலென்ன காஞ்சிமாநதியென்றால் என்ன வெறும் மணல் தான் இருக்கிறது. ஊருக்குள் நுழைந்துமே முதலில் ஒரு பெரிய கூர்மையான முக்கோணக்கல்லும், அதனடியில் அதனடியில் பாறைகற்சுவர்களால் உருவாக்கப்பட்ட சிற்றறைகளும் இருக்கின்றன. என்னவென்றே தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஊருக்குள் வந்தோம். வீடு வந்தபிறகு கொடுமணல் பற்றி இணையத்தில் வாசிக்கும் போது தான் இந்த “இடுதுளை” என்ற வார்த்தையை அறிந்தேன். இந்த கற்சுவற்றுக்குள் பிணங்களை போட்டு வைத்து வருடாவருடம் இடுதுளை வழியாக தர்ப்பணங்கள் மரியாதை செய்வார்களாம். அந்தக்காலத்து மனிதர்கள் மிகவும் குள்ளமாக அளவில் சிறியவர்களாக இருந்தார்களாம். எலும்புக்கூடுகள் சிறியனவாகத்தான் கிடைத்திருக்கின்றனவாம். துளை வெளியே அர்ப்பணங்கள் படையலிட வேண்டுமென்றால், நிச்சயம் அந்த பிணங்களை பதப்படுத்தி, துர்நாற்றம் வராமல் பக்குவம் செய்திருக்கவும் ஒரு வழமை இருந்திருக்கக் கூடும்.
நீத்தார் கடன் என்ற சடங்கிற்கு எத்தனையாயிரம் வருடபாரம்பரியம் கொண்டிருக்கிறோம். ஒரு பக்கம் கழிவுகளைக் கொட்டி மாசுப்படுத்தியதும் நாம் தான். மறுபக்கம், அதே சாக்கடைத் தண்ணீரில் புனிதம் கண்டு அர்ப்பணம் செய்து வணங்குவதும் நாம் தான். திரும்பத் திரும்ப அன்னை மடி தேடி ஓடும் பிள்ளைகள் நாம்.
இந்த எலும்புக்கூடு சங்கதியையும், ஈமக்கிரியை பற்றியும், இன்னும் பல செய்திகளையும் அடுத்தக்காட்சியில் வரும் தம்பி எங்களுக்குச் சொல்லப்போகிறார்.
இணையத்தில் பிராமி காலத்து தமிழ்மொழியின் லிபியில் “தமிளன் சிரப்பு வாள்க”,”காடு வித்து கஞ்சி காச்சி குடிப்பாளூம்” என்றெல்லாம் புளங்காகிதம் அடைந்து எழுதியிருந்த பல இணைப்புகளுல் ஒரு நல்ல pdf புத்தகத்தைப்பிடித்துப் படித்தேன். தமிழ்நாட்டு தொல்லியல் துறை வெளியிட்ட புத்தகம். – “கொடுமணல் அகழாய்வு” அந்தப்புத்தகத்தில் கண்டது தான் இடுதுளை என்ற வார்த்தை.
ஊருக்குள் தென்னைத்தோப்புகளும், நெருக்கமில்லாமல் அங்காங்கே இருக்கக்கூடிய வீடுகளும், வெறுமையான ரோடுகளுமே இருந்தன. இந்த தொல் எச்சங்கள் எங்கே எப்படி எந்த வடிவில் இருக்குமென்று கூட தெரியாமல் கிளம்பி சென்றுவிட்டோம். ஊரே வெறுமையாக இருப்பதைப் பார்த்து கடுப்பாகி திரும்பி விடலாமென்று வண்டியைத் திருப்பிய போது தான் அந்த தம்பியை பார்த்தோம். தென்னந்தோப்பு வைத்திருக்கும் உள்ளூர் காரர். தண்ணீர் வாங்கிக்குடிக்க நிப்பாட்டிய இடத்தில் எங்களுக்குக் கிடைத்த வழிகாட்டி துருவ நட்சத்திரம். கொஞ்சம் உப்பான தண்ணீர் தான் என்றாலும் வெக்கை தீர நிறைய நீர் அருந்தினேன். அவரது தோப்பில் அகழாய்வு நடந்திருக்கிறது. இந்த மாதிரி சுற்றிப்பார்க்க வருபவர்களை நிறைய கண்டிருப்பார் என்பது அவரது உடல் மொழி, விசாரிப்புகளிலேயே புரிந்துகொள்ள முடிந்தது. இதற்கெல்லாம் ரொம்ப பழக்கப்பட்டவராகவும், comfortable ஆகவும் இருந்தார். கல்லூரி மாணவர். நிறைய தகவல்களை செவிவழியாக தெரிந்து வைத்திருந்தார். இங்கே வருடாவருடம் அகழாய்வுக்கு வருவார்கள். பெட்டி பெட்டியாக அகழ்ந்தெடுந்த பொருட்களை கொண்டுபோகும் போது சில பொருட்கள் கழித்துவிடுவராம். அவற்றை இவர் சேமிப்பில் வைத்திருந்து எடுத்துக்காட்டினார்.

நாங்கள் வரும்வழியில் கண்ட கற்குவியல்கள் எல்லாம் 2000 2500 வருடங்கள் முந்தைய கல்லறை தொகுப்புகள் என்று அவர்சொன்ன போது தான் வாணலி சூடாவது போல எங்களுக்குள் ஒரு தீவிரம் வந்தது. நாங்கள் எப்படிப்பட்ட இடத்தின் மேல் நின்றுகொண்டிருக்கிறோம் என்று கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. சரி கூட்டிட்டுபோய் காட்டுங்க தல என்று சொல்லி நடக்கத் துவங்கினோம். காலில் அடிக்கடி இரும்பைப்போன்ற கற்கள் இடறிக்கொண்டேயிருந்தது. ஒன்றைக் காலில் உதைத்தேன். இன்னொன்று தூக்கி தூர வீசிவிட்டு நகர்ந்தேன்.
கொடுமணல் கிராமத்தின் எந்த இடத்திலும் ஐந்தடி ஆறடி தோண்டினால் பழைய நகரத்தை அடைந்துவிடலாம். நொய்யல் காஞ்சிமாநதியாகிவிடும். ஐந்தடி ஆறடி தூரத்தில் 2300வருடங்களைத் தாண்டி பயணித்துவிடலாம். கைநிறைய சங்குவளைகள், மட்பாண்டங்கள், ஓடுகள், மிளிர்கற்கள் அள்ளியள்ளிஎடுக்கலாம். எனக்கு தாத்தன் சொன்ன “தொட்டனைத்தூறும் மணற்கேணி” என்ற அழகான phrase ஞாபகம் வருகின்றது. அத்தனை செறிவான இடம். அ.கா பெருமாள் நாட்டார் இலக்கியங்களை நாட்டார் வரலாற்றை ஒழுங்குபடுத்தும் போது நம் வரலாறு மாற்றம்காணும். இன்னும் துலக்கமாகும் என்று சொல்லியிருக்கிறார். இங்கே கைப்புண் போல இத்தனை நதிக்கரை நாகரீகப் பொக்கிஷங்களை வைத்துக்கொண்டு இன்னும் கண்ணாடி தேடிக்கொண்டிருக்கிறோம். sorry படுஅபத்தமான உவமை.
கொடுமணல் இரும்பு எஃகு பொருட்களுக்கான தொழிற்சாலைகள் கொண்டிருந்த நகரம். அதைவிட ஆச்சர்யமான விஷயம் அலங்கார நகைகளின் நகரமாகவும் இருந்திருக்கிறது. உயர்ரக கற்களை மணியில் கோர்க்க துளையிடும் தொழில்நுட்பத்தில் தலைசிறந்திருந்த நகரமாதலால் வெளிநாட்டிலிருந்து கற்கள் கொண்டுவந்து துளையிட்டு பெற்று சென்றிருக்கின்றனர். கடுகின் விட்டத்தில் ஒரு பட்டன் அந்த பட்டனின் பக்கவாட்டில் துளையிடப்பட்டிருந்தது. நடுவில் துளையிடுவது சுலபம். ஆனால் பக்கவாட்டில் துளையிடுவது மிகவும் நுணுக்கம் கோரும் வேலை. கண்ணைப்பறிக்கும் ஆரஞ்சு நிறத்தில் வெள்ளையில் கோடுகள் வரையப்பட்ட டிசைன்.வெகுநேரமாக இவர் நம் காலத்து கற்களை காட்டி பழைய கற்கள் என்று ஏமாற்றுகிறார் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவர் காட்டிய கற்களில் பலவற்றை இணையத்திலும் பல இடங்களில் கண்டபோதுதான் நம்பினேன்.
இங்கே கிடைக்கும் மட்பாண்டகள் உள்ளே கறுப்பு நிறத்திலும் வெளியே சிவப்பு நிறத்திலும், சில பளபளவென பீங்கானைப்போலவும், டிசைன்கள் வரையப்பட்டும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டும் கிடைக்கின்றன. இந்த நிறங்கள் மாறுபட்டுவருவதற்கு களிமண்ணை சூடுசெய்யும் treatmentஇல் வித்தியாசம் காட்டுவதில் வருவதாம். ஒரு ஓட்டுச்சில்லை எடுத்து, “அண்ணே திராவிட நிறம் இது பாத்தீங்களா?? அந்தக்காலத்துலயே திராவிடம் பாருங்க!! இந்தப்பக்கம் கறுப்பு இந்தப்பக்கம் சிவப்பு” என்றேன். வெறுப்புடன் “தம்பீ உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!” என்று உதட்டில் கைவைத்து அவர் ஒரு ஓட்டுச்சில்லைக் காட்டினார். அதில் இந்த பக்கம் சிகப்பு. இந்தப்பக்கம் கறுப்பு. நடுவில் வெள்ளையாக இருந்தது.  😌
கண்ணுக்கெட்டிய தூரம் வரை தோப்புகள் தான். . நடுகற்கள் பற்றி, ஒரு குறளை வாசித்திருக்கிறேன். “என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.” அந்தக் காலத்து பன்ச் டயலாக் போல.. ஆக திருக்குறள் காலத்திலேயும் நடுகல் வழக்கமிருந்திருக்கிறது. நண்பருடைய தோப்பிலும் ஒரு நடுகல் இருந்தது. அதைக்காட்டி விளக்கினார். அந்தக்கல்லில் ஒரு முதலை மனிதனை விழுங்கிக்கொண்டிருக்கிறது. முதலையை ஒரு திரிசூலம் குத்திகிழிக்கிறது. இந்த நடுகல் கொடுமணல் ஆற்றங்கரையெங்கும் நிறைந்திருக்கிறது. இது முதலைகள் இருப்பதைக்குறிக்கும் அபாய அறிவிப்புகள் என்றும், அல்லது இந்த முதலை சூலம் மனிதன் என்பது ஒரு புராணிக கதையை ஞாபகப்படுத்தும் கல்லென்றும் இருகூற்று இருப்பதாக சொன்னார். நிறைய கற்கள் அளவில் சிறியதும் பெரியதுமாக இருந்தன. மழுங்கிபோயிருந்தாலும், கள்ளிச்செடிக்குள் பிணைந்திருந்தாலும், நான் ஓடியோடி சென்று அவற்றை ஸ்பரிசித்துப் பார்த்தேன். அந்த தொடுதல் எனக்கு தேவைப்பட்டது. இந்த நடுகற்கள் கிடைக்குமிடம் மக்கள் வாழ்ந்த இடமாம். தனியாக இன்னோரு பகுதியில் கல்லறைத்தொகுதிகள். பள்ளி படிக்கும் போது ஹரப்பா மொகஞ்ச்தாரோ பற்றி படிக்கும் போது, மொகஞ்சதாரோ ஒரு கல்லறை நகரமென்று படித்திருக்கிறேன்.
ஊர்முகப்பில் நாங்கள் கண்ட உயரமான முக்கோணக்கல் ஒரு அடையாளக்கல். மன்னர் மந்திரி பூர்ஷ்வாக்களுக்கு அப்படியொரு சிறப்பு அறிமுகம் தான் அந்த அடையாளக்கற்கள். நம் போன்ற வர்க்கத்திற்கு என்றால் சாதிவாரியாக, குடும்பம் வாரியாக, கூட்டம்வாரியாக வட்டவட்டமாக புதைத்து அதன்மேல் உருளையான கற்களை போட்டு வைத்துவிடுவார்களாம். ஒரு கால்பந்து மைதானத்தின் முக்கால்வாசி இடத்தில் இதுபோல ஏழு எட்டு கல்லறைத்தொகுதிகள் இருக்கக் கண்டோம். இவை பலருடைய நிலங்களில் இருக்கின்றதால், எல்லாமே பொக்கிசமாக பாதுகாக்கப்படுமென்று சொல்ல முடியாது. இப்போது அந்தக்கல்லறைகளுக்கு தென்னை நிழல் மட்டுந்தான் துணை. இம்மக்கள் மனசுமாறி விவசாயம் மாற்றி பயிரிடத்துவங்கினால் நிச்சயம் இந்த அடையாளங்களெல்லாம் அப்புறப்படுத்தப்பட்டுவிடும்.
இரும்பு எஃகு தாமிரமெல்லாம் கட்டி கட்டியாகவும், ஆயுதங்களாகவும், வீட்டு உபயோகப்பொருட்களாகவும் ஏற்றுமதிசெய்யப்பட்டிருக்கின்றன. 2500ஆண்டுகளுக்கு முந்தி ஒரு தொழிற்சாலை!! 2500 முந்தியே weekend, appraisal, தீபாவளி போனஸ், பொங்கல் ethnic day cultural celebrations, QBRமீட்டிங் என்று வாழ்ந்திருக்கும் எம் தமிழ்ச்சமூகம். கால்கள் சோர்வடைய மிகப்பெரிய இடத்தை காலால் கடந்திருந்தோம். வந்ததற்கு ஞாபகார்த்தமாக எதாவது கல்லை எடுத்துச்செல்லலாம் என்று ஒரு நடுகல்லின் அடியில் கைவிட்டுத்துளாவினேன். என் காலில் இடறிக்கொண்டிருந்த அந்த இரும்புக்கல் தட்டுப்பட்டது. இது என்ன பாஸ் உங்க ஊர் கல்லு வித்தியாசமா இருக்குது என்று கேட்டேன். “இது கல்லில்லை. இரும்புத்தொழிற்சாலையில் இருந்து உருவாகி வந்த எஃகு கழிவு. அச்சில் ஊற்றி காய்ச்சும் போது வீணான இரும்புதான் இப்படி குழம்பாகி இறுகியிருக்கின்றன என்றார். தலை சுற்றுவது போல இருந்தது. முன்னே சொன்ன வாணலி கொதிநிலையடைந்தது. நான் சுற்றி வந்த அந்த கால்பந்து மைதான அளவு நிலமெங்கும் நிறைந்திருந்து சதா என் காலில் தட்டுப்பட்டுக் கொண்டிருந்த கற்களெல்லாம் இந்த இரும்புக்கழிவுகள் தான்

கருத்துகள் இல்லை: