சனி, 19 ஆகஸ்ட், 2017

பி பார்ம் கையெழுத்து அதிகாரம்: பன்னீர் அணியின் பலத்த செக்!

‘பி பார்ம்’ கையெழுத்து அதிகாரம்: பன்னீர் அணியின் பலத்த செக்!
“7.30 மணிக்கு வர்றதா சொன்னாங்க... 8.00 ஆச்சு, 8.45 ஆச்சு... இன்னும் யாருமே வரலையே... எனக்கு கிச்சன்ல வேலை இருக்கு எப்பதான் வருவீங்களோ?” என்று ஃபேஸ்புக்கில் ஓர் இல்லத்தரசி நேற்று இரவு போஸ்ட் போடும் அளவுக்கு தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் நேற்று ஆகஸ்ட் 18 இரவில் மெரினா ஜெயலலிதா நினைவிடத்திலேயே கண்வைத்திருந்தனர்.
காரணம், பிப்ரவரி 7ஆம் தேதி இரவு இதேபோலத்தான் பன்னீர்செல்வம், ஜெயலலிதா நினைவிடத்துக்குவந்து தியானத்தில் ஈடுபட்டு அதிமுக-வின் பிளவுக்கு வித்திட்டார். இந்த நிலையில் 194 நாள்கள் கழித்து மீண்டும் ஜெ. நினைவிடத்திலேயே இரு அணிகளும் முறைப்படி இணைப்பு விழா நடத்துவதாக பரவிய தகவலால் நேற்று மாலை முதலே மெரினாவில் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று பிற்பகல் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓ.பன்னீரின் அம்மாவைப் பார்க்க சென்றனர். இதுதான் இணைப்பு விழா நெருங்கிவிட்டது என்பதற்கான முதல் அறிகுறியாக இருந்தது. அமைச்சர்கள் இருவரும் ஓ.பன்னீரைச் சந்தித்துப் பேசினர். “என்னண்ணே உங்க ரெண்டு கோரிக்கையையும் முதல்வர் ஏத்துக்கிட்டார். அப்புறம் என்ன?” என்று அமைச்சர்கள் ஆரம்பிக்க, “என்னை நம்பி வந்தவங்கக்கிட்ட சாயந்தரம் ஆலோசனை பண்ணிட்டு சொல்றேன்” என்று அனுப்பி வைத்திருக்கிறார் பன்னீர்செல்வம்.
இந்த நிலையில் பன்னீரைப் பார்த்த அமைச்சர்கள் உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தனர். இதுதான் நேற்று அணிகள் இணைப்புக்கான விழா நடப்பதற்காக சாத்தியங்களை அதிகப்படுத்தின.
நேற்று மாலை திடீரென பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜெயலலிதா சமாதி இருக்கும் பகுதியை ஆய்வு செய்து, மலர்களால் அலங்காரம் செய்யும் பணியில் இறங்கினர். ஜெயலலிதா நினைவிடத்தில் சஃபாரிகளின் விசிட் அதிகமானது. அணிகள் இணைப்பு இரவு ஜெ. சமாதியில் நடக்கும் என்று நம்பி தொண்டர்களும் அங்கே குவிந்தனர்.
மாலை 5.00 மணிக்கு மேல் கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவுத் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனையைத் தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம்.
ஓ.பன்னீர், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செம்மலை, மாஃபா பாண்டியராஜன், பி.ஹெச்.பாண்டியன், நீலாங்கரை முனுசாமி, ஜெ.சி.டி.பிரபாகரன் உள்ளிட்ட 25 பேர் மட்டுமே அந்தக் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
முதலில் எழுந்த ஓ.பி.எஸ், “அரசு அறிவித்திருக்கிற இரண்டு அறிவிப்புகளை நம்பலாமா... நம்பி இணையலாமான்னு கேட்கத்தான் உங்களை இங்கே கூப்பிட்டிருக்கேன். இது நாம திடீர்னு எடுக்குற முடிவு இல்ல. உங்க கருத்துகளைச் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார்.
அடுத்து ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தனர். கலந்துகொண்ட 25 பேரில் சுமார் 18 பேர் அணிகள் இணைப்புக்கு முன் தங்களுக்கு வேண்டிய பதவிகள், பொறுப்புகள் பற்றி எழுத்துபூர்வமாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனர்.
பி.ஹெச்.பாண்டியன், “என் மகனுக்கு கட்சிப் பொறுப்பும், எனக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியும் வேண்டும். இதுதான் சந்தர்ப்பம். நாம் யாரும் யார்கிட்டயும் கெஞ்சிக் கேட்கவேண்டிய அவசியம் இல்லை. இது நம் உரிமை” என்றார்.
கே.பி.முனுசாமி பேசியபோது, “அந்த ரெண்டு அறிவிப்புகளையும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் நம்ப முடியலை. நாம கேட்டது சிபிஐ விசாரணை. இப்போது ஜட்ஜ் யாருன்னே சொல்லாமல் ஆணையம் அறிவிக்கிறாங்க. நாம அடுத்தத் தேர்தலைப் பத்தி யோசிக்கணும். கடலூர்லயும் சென்னையில வி.ஏ.ஒ-க்கள் மாநாட்டுலேயும் அம்மாவுக்கு தன்னை இணையாக காட்டி எடப்பாடி பழனிசாமி விளம்பரம் பண்ணியிருக்காரு பார்த்தீங்களா?
அம்மா இருக்கும்போதே அவங்க வகிச்ச முதலமைச்சர் பதவியில மூணு முறை உக்காந்தவரு நீங்க. ஆனா, இன்னிக்கு தன்னையே அம்மாவா நினைச்சு எடப்பாடி சில விஷயங்களைப் பண்றாரு. அதனால இதை சும்மா விட முடியாது. நாளைக்கு கட்சி நம்மக்கிட்ட இருக்கணும்னா தேர்தல்ல ‘பி பார்ம்’ல கையெழுத்து போடற அதிகாரம் உங்களுக்கு இருக்கணும். அதுதான் உண்மையான கட்சித் தலைமை பதவி. அதை உறுதிப்படுத்திக்கிட்டுதான் நாம இணையணும்” என்றார். இதை பன்னீர்செல்வம் கவனமாக கேட்டுக்கொண்டார்.
மைத்ரேயன், பொன்னையன், பி.ஹெச்.பாண்டியன் ஆகியோர் ஒருகட்டத்தில் ஆளுக்கு ஆள் கை நீட்டிப் பேச மிகவும் பரபரப்பானது. பன்னீர்செல்வம் எழுந்து, “அண்ணே உட்காருங்க... அண்ணே உட்காருங்க. உடனே எந்த முடிவும் எடுக்கப் போறதில்ல” என்று அமைதிப்படுத்தினார்.
ஓ.பன்னீர் அணி முன்வைக்கும் விஷயங்களில் முக்கியமானது பொதுச்செயலாளர் பதவிக்கு இணையான வழிகாட்டும் குழு உருவாக்குவது. அதற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. குழுவில் பன்னீர் அணிக்கு அதிக இடங்கள் தருவது. அதற்கு அடுத்துதான் மற்றவர்களுக்கு அமைச்சர் பதவி, கட்சிப் பதவி பற்றியது எல்லாம்.
இந்த ஆலோசனை முடியவே இரவு 9.00 மணிக்கு மேல் ஆகிவிட்டது. அதை முடித்து மீண்டும் செம்மலை, மைத்ரேயன், பி.ஹெச்.பாண்டியன், மாஃபா உள்ளிட்டோருடன் தனியாக ஆலோசனை நடத்தினார் பன்னீர்செல்வம். மீண்டும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மா.செ-க்களுடன் ஆலோசனை நடத்தினார். பதினோரு மணிக்கு மேலும் ஆலோசனை தொடர்ந்ததால் எடப்பாடி அணியினர் சோர்வடைய ஆரம்பித்தனர்.
முழு உடன்பாடு ஏற்பட்டு தெளிவான ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகே பன்னீர் செய்தியாளர்களைச் சந்திப்பார் அல்லது பன்னீரும் எடப்பாடியும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்திப்பார்கள் என்று தெரிவிக்கிறார்கள் இரு தரப்பிலும்! மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: