வெள்ளி, 22 செப்டம்பர், 2017

மேதா பட்கர்: சர்தார் சரோவர் அணைக்கட்டு.. 40 ஆயிரம் குடும்பங்கள் வீதியில் ... பன்னாட்டு நிறுவனங்களுக்கு வசதியாக

மோடியை அம்பலப்படுத்துவோம்: மேதா பட்கர்மின்னம்பலம் : நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கட்டு விவகாரத்தில் மோடியை 2019க்குள் அம்பலபடுத்த வேண்டும் என்று சமுக ஆர்வலர் மேதாபட்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர். மேதாபட்கர் 'நர்மதா பச்சோ அந்தோலன்' என்ற பெயரில் 1980 முதல் நர்மதா நதிக்குக் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கு எதிராகப் போராடி கொண்டிருக்கிறார்.
குஜராத்தின் நர்மதா நதியின் மீது கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கட்டை பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நாட்டுக்கு அர்ப்பணித்தார். சாதாரண காலத்தில் 138.63 மீட்டர் உயரத்திற்கும், வெள்ள காலங்களில் 141 மீட்டர் வரையும் நீரைத் தேக்கும் வகையில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து (செப்டம்பர் 21) டெல்லியில் 'சர்தார் சரோவர் அணைக்கட்டின் தவறுகள் குறித்து கருத்தரங்கில் பேசிய மேதா பட்கர்,"இந்த அணைக்கட்டு திட்டத்திற்கு எதிரான நமது போராட்டம் இன்னும் முடியவில்லை. மத்திய பிரதேசத்தில் மட்டும் இன்னும் 40 ஆயிரம் குடும்பங்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் இன்னும் செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட செயல் திட்டம் இல்லாமல் வளர்ச்சி என்ற பெயரில் இந்த அரசின் மூலம் நடைபெற்ற ஒட்டு மொத்த ஊழல்களும், தவறான தகவல்களைக் கொண்டு நடத்தப்பட்ட பிரச்சாரங்களும், மக்கள் முன்பு வெளிச்சத்திற்கு வர வேண்டும்.
மத்திய பிரதேசத்தில் தேவைக்கு அதிகமாக மின்சாரம் உள்ளது. அதேபோல, குஜராத்தில் தேவைக்கு அதிகமாக நீர்வளம் உள்ளது. இந்நிலையில், நர்மதா பள்ளத்தாக்குப் பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்கள் வாழ்விடங்களை மொத்தமாக அழித்து, கோகோ கோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம்.
எனவே, குஜராத்தின் நர்மதா அணைக்கட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் அரசாங்கத்தின் சார்பாக நடந்துள்ள தவறான விஷயங்கள் அனைத்தையும் 2019 பொதுத்தேர்தலுக்குள் அம்பலப்படுத்த வேண்டும். அதற்குப் பிறகு என்ன நடக்கிறதோ அது அடுத்த ஐந்து வருடங்களுக்கு நம்மைத் தொடரப் போகிறது" என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: