புதன், 20 செப்டம்பர், 2017

நீட் தேர்வை தடை செய்யும் வரை போராடுவோம்... சிவசங்கர் எஸ்.எஸ்

சிவசங்கர் எஸ்.எஸ் : என்ன கொடுமை, அறுபத்து இரண்டு நாட்களுக்கு முன் ரத்தமும் சதையுமாக எங்களோடு நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக் கொண்ட அனிதா, கடந்த 13ம் தேதி போராட்டத்தில் படமாகக் கலந்து கொண்டார்.
ஜூலை 12 அன்று தன் இழப்பை சொல்ல அரியலூர் போராட்டக் களத்திற்கு வந்தவர், தமிழக மாணவர்கள் அனைவரது இழப்பையும் சொல்லும் வகையில், உயிரை ஈந்து போராட்ட களமாகவே மாறிவிட்டார்.
அவரது பெற்றோரும் உற்றாரும் இன்னும் மீளாத் துயரில். உறவில்லாதவரும், அறியாதவரும் இன்றும் அனிதா முகம் பார்த்து உறாவாய் எண்ணி தவிக்கிறார்கள்.
இறப்பிற்கு பின் பதினாறாம் நாள், துக்கம் நீக்க கருமகாரியம் செய்வது வழக்கம். மிகுந்த துயரில் இருப்போர் புண்ணியதானம் செய்வார்கள். கடந்த 15ம் தேதி அவரது இல்லத்தில் புண்ணியாணம் எளிமையாக நடந்தேறியது.
அனிதாவின் பெரிதுபடுத்தப்பட்ட படம் இருந்தது. மாலை அணிவிக்க சொன்னார்கள். ரோஜா இதழ்களை தூவி வணங்கினோம், அந்த அன்பு மகளை. குழந்தைமை மாறா அந்த முகம் காலத்திற்கும் நெஞ்சில் நிலைத்திருக்கும்.
அரை மணி நேரம் இருந்தேன். யார் என்ன பேசுவதென தெரியாமல் உட்கார்ந்திருந்தோம்.
வலிந்து பேசினாலும்,ஒரு நிமிடத்திற்கு மேல் உரையாடல் தொடரவில்லை. யாரும் இன்னும் துயரிலிருந்து விலகவில்லை.
மகள் உடனிருக்க முடியாமல் திருச்சியில் சுமை தூக்கி, படிக்க வைத்த தந்தைக்கு இனி மகள் உடன் இருக்கவே மாட்டாள் என்பது தாங்க இயலா சோகம் தானே. கிராமத்து அப்பாவி சுவர் பார்த்து அமர்ந்திருந்தார்.
கல்வி குறித்து, தந்தை இடத்தில் இருந்து வழி நடத்தியவர் அண்ணன் மணிரத்தினம். கல்வி மாத்திரமல்ல சமூகம், எதிர்காலம் குறித்தெல்லாம் புரிதல் ஏற்படுத்தியவர் அவர் தான்.
அரியலூர் போராட்டத்திற்கு அனிதாவை மணிரத்தினம் அழைத்து வந்த பாங்கு இன்னும் மனதில் இருக்கிறது. ஒரு கிராமத்து சிறுமியாக அனிதா, அரசியல் கூட்டத்தை பார்த்து தயங்கினார்.
ஒரு கோழிக்குஞ்சை, தாய் கோழி சிறகை விரித்து அரவணைத்து இருப்பது போல் அழைத்து வந்தார் மணி. தங்கையின் பாதிப்பை தன் பாதிப்பாகவே உணர்ந்து பேசினார். ஆனால் அனிதா கிராமத்து மிரட்சி விலகாமல் கேட்ட கேள்விக்கு மாத்திரம் பதிலளித்தார். ஆனால் திடமாக இருந்தார்.
பிறகு, அனிதாவின் சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பையும், எதிர்கட்சித் தலைவர் தளபதி அவர்கள் சந்திப்பையும் தொலைக்காட்சியில் பார்த்தேன். சற்றே தெளிந்திருந்தார், தயக்கம் விலகியிருந்தது.
பிறகு அனிதாவின் நேர்காணல்கள் தொலைக்காட்சியில் வந்தன. அவரது இல்லத்து ஏழ்மை நிலை வெளி உலகிற்கு தெரிந்தது. இப்போது அவரது பேச்சுகள், தன்னையொத்த மாணவர்களுக்கானதாக இருந்தது.
"அனிதா டெல்லி போறாராமே?" நியூஸ் 18 குணசேகரன் அவர்கள் கேட்டு தெரிந்து மணிரத்தினத்தை தொடர்பு கொண்டேன். "ஆமாம்ணா. வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் இணைந்தால் தான் நீதிமன்றத்திற்கு உணர வைக்க முடியுமாம்".
டெல்லியில் கொடுத்த பேட்டிகளில் மென்மையான குரலில், வலுவான கருத்துகளை எடுத்து வைத்தார் அனிதா. மத்திய அமைச்சர்களும், மாநில அமைச்சர்களும் கொடுத்த நம்பிக்கையை, உச்சநீதிமன்றம் சிதைத்து விடாது என அவர் நம்பியிருந்தார்.
எல்லா நம்பிக்கையும் சூறையாடப்பட்டது.
அனிதாவுக்கு இதற்கு முன்பே கால்நடை மருத்துவம் கிடைத்திருந்தது. மருத்துவப் படிப்பு கிடைக்கவில்லை என ஒரு துளியும் மாறுபாடு யாராலும் காண இயலவில்லை அவரிடம்.
வழக்கப் போலத் தான் இருந்திருக்கிறார். தனக்கு மருத்துவம் கிடைக்க நீட் கோச்சிங்கிற்கு உதவி செய்ய பலரும் முன் வந்திருக்கிறார்கள் என்பதையும் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் சொல்லியிருக்கிறார்.
அவர் அந்த முடிவை எடுப்பார் என யாரும் நினைக்கவில்லை, எதிர்பார்க்கவும் இல்லை. கல்லைத் தூக்கி அந்தக் குடும்பத்தின் தலையில் போட்டு விட்டார். தேவதையாகக் கொண்டாடியவர்களுக்கு தெய்வமாகி விட்டார்.
தமிழ் மக்களின் அன்பு மகளாகி விட்டார். மாணவர் சமுதாயத்தின் உடன் பிறந்தவளாகி விட்டாள். யார் மனதில் இருந்தும் எளிதில் மறைய மாட்டாள்.
துக்கம் கழியவில்லை, வலி விலகவில்லை. ஆனால் கடமை காத்திருக்கிறது.
அனிதா சொன்னது தான் இனி மனதில் தாங்க வேண்டியது. அது தான் பணி.
" எனக்காக இல்லன்னாலும் என்ன மாதிரி கஷ்டப்பட்டு படிக்கிறவங்களுக்காகவாவது இனி நீட் எக்ஸாம தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கணும்". அனிதா சொன்னது.
ஒரு வாய்ப்பிழந்த ஏழை மாணவி, மற்றவர்களுக்காக கொடுத்த குரல் அரசு, நீதிமன்றங்களின் காதில் விழட்டும்.
# இல்லாவிட்டால், அனிதா கழுத்தில் மாட்டியக் கயிறு சாட்டையாக மாறட்டும்

கருத்துகள் இல்லை: