புதன், 20 செப்டம்பர், 2017

அதிமுக... பாஜக போட்ட தப்பு கணக்கு ! சசிகலா குடும்பம் இருக்கும்வரை அதிமுகவை அசைக்கமுடியாது

Sivasankaran.Saravanan: பாஜக போட்ட பெரிய தப்புக்கணக்கு அதிமுகவை தவறாக கணித்தது தான். அதிமுக கட்சி என்பது கொள்கையாளர்களை கொண்ட கட்சி அல்ல. அது முழுக்க முழுக்க விசுவாசிகளை கொண்ட கட்சி. இந்த அளவில் பாஜகவின் கணிப்பு சரி. ஆனால் அந்த விசுவாசிகள் பூராவும் எம்ஜியார் விசுவாசிகளாகவோ ஜெயலலிதா விசுவாசிகளாகவோ தான் இருப்பார் கள் என நினைத்தது தான் பாஜக செய்த பெரிய தவறு.
ஜெயலலிதா விற்காக மட்டுமே ஓட்டு போடுபவர்கள் பெரும்பாலும் அதிமுக உறுப்பினராக இருக்கமாட்டார்கள் . திமுக வரக்கூடாது என்பதற்காக ஜெயலலிதா விற்கு போடுபவர்களும் கணிசமானவர்கள். நான் சொல்கிற கணக்கு அதிமுக வின் உறுப்பினர் அட்டை வாங்கியுள்ள கட்சி உறுப்பினர்கள் . இவர்களில் பெரும்பாலான நபர்கள் ஜெயலலிதா விசுவாசிகள் கிடையாது. ஜெயலலிதா வை அவர்கள் சந்தித்து பேசி கூட இருக்கமாட்டார் கள். அவர்கள் சசிகலா குடும்பத்தின் விசுவாசிகள். அதிமுக என்ற கட்சியே எம்ஜியார் காலத்துக்கு பிறகு முழுக்க சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. சொல்லப்போனால் இந்தியாவிலேயே மிகப்பெரிய குடும்பக் கட்சி என்றால் அது அதிமுக தான்.

சரி ஒரு சிம்பிள் கேள்வி. பாஜக நினைத்தால் இப்போது கூட (முன்பு செய்தது போல) தினகரனை கைது செய்ய முடியும் . ஏன் செய்யவில்லை?
சசிகலாவை கைது செய்தால் தினகரன் வந்தார். தினகரனை கைது செய்தால் திவாகரன் வருவார்! திவாகரனை கைது செய்தால் வெங்கடேஷ் வருவார். வெங்கடேஷ் உள்ளே போனால் ராவணன் வருவார். ராவணன் போனால் சிவகுமார் வருவார். சிவகுமார் போனால் ஜெயானந்த் வருவார். ஜெயானந்த் போனால் விவேக் வருவார். விவேக் போனால் நடராசனின் சகோதரர்கள் வருவார்கள். அவர்களும் உள்ளே போனால் நடராசனே வருவார். இதுதான் மன்னார்குடி குடும்பம். இவர்கள் தான் அதிமுகவின் முதுகெலும்பு .
பாஜக போட்ட தப்புக்கணக்கு யாதெனில் சசிகலாவிற்கு இருக்கும் ஆதரவு சாதி ஆதரவு மட்டுமே என நினைத்தது தான் . ஓபிஎஸ் சை முன்னிறுத்தினால் அதை சரி செய்து விடலாம் என தப்புக்கணக்கு போட்டது . ஆனால் அது தவறு என பிறகு தான் புரிந்துகொண்டனர் . நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை இதுதான் : சசிகலா குடும்பம் தான் அதிமுகவின் ஆணி வேர். ஜெயலலிதா ஒரு brand image மட்டுமே. முதலாளியை விட மேனேஜர் மீது அதிக விசுவாசத்தை காட்டுகிற ஊழியர்கள் இருப்பது இயல்பானது தானே? ஏனென்றால் அவர்களுக்கு மேனேஜர் தான் முதலாளி.
30 வருடங்களாக அதிமுகவின் ஒவ்வொரு அசைவையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற ஒரு குடும்பம் இன்று தாங்கள் பார்த்து பதவி கொடுத்த நான்கைந்து பேர் தங்களுக்கு எதிராக திரும்பினால் பயந்து பின்வாங்குமா என்ன? 30 வருடங்களாக நீங்கள் கஷ்டப்பட்டு காப்பாற்றிய வீட்டை எவனோ ஒரு பான்பராக் போட்ட சேட்டு வந்து காலி பண்ண சொன்னால் அதை ஏற்றுக்கொண்டு போய்விடுவீர்களா என்ன? முதலில் டீல் பேசுவீர்கள். சரிப்பட்டு வரவில்லை என்றால் எதிர்த்து நின்று அடிப்பீர்கள் . அப்படித்தான் இன்று சின்னம்மா குடும்பம் எதிர்த்து நிற்கிறது . சசிகலா குடும்பம் உள்ளவரை அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்கமுடியாது..!

கருத்துகள் இல்லை: