திங்கள், 18 செப்டம்பர், 2017

பெரியார் பிறந்த நாளில் பாமக சமூக நீதி மாநாடு!

பெரியார் பிறந்த நாளில் பாமக சமூக நீதி மாநாடு!வன்னியர் சங்கப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்
வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாளை தியாகிகள் தினமாக அனுசரித்துவருகிறது பாமக. இந்த ஆண்டு தியாகிகள் தினத்தைச் சமூக நீதி மாநாடாக நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு, மூன்று மாதங்களாக மாநாட்டு வேலைகளைச் செய்துவந்தார்கள். கடந்த ஒரு வாரமாக பாமக தலைவர் ஜி.கே.மணி, காடுவெட்டி குரு, முன்னாள் எம்.பி. தன்ராஜ் உட்பட முக்கிய நிர்வாகிகள் விழுப்புரத்தில் தங்கி வேலைகளைக் கவனித்து வருகிறார்கள்.
மாநாடு மேடை 30*80 அளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது, அலங்கார வளைவுகள், பேனர்கள் கண்கள்படும் இடமெல்லாம் காணப்பட்டன.
ஆனால், செப்டம்பர் 15ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் பெரும் காற்றாலும், மழையாலும், அலங்கார வளைவுகள் சாய்ந்து, பேனர்கள் கிழிந்துவிட்டன. இவற்றை இரவோடு இரவாகச் சரிசெய்து வருகிறார்கள்.
மாநாட்டில் 30 பேச்சாளர்கள் பேசுவதற்கு தலா 2 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது, ராமதாஸ் இட ஒதுக்கீடு பற்றியும், தியாகிகள் பற்றியும் பேசவிருக்கிறார். காடுவெட்டி குரு குறுகிய நேரத்தில் பேசி முடிப்பார். பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் 2 மணி நேரம் பேசப் பயிற்சியெடுத்துள்ளார். மாநாட்டுக்குச் சிறப்பு அழைப்பாளர்களாக சரத் பவார், முலாயம் சிங் ஆகியோரை அழைத்துவர முயற்சிகள் செய்தார்கள். சரத் பவார் வருவதற்கு விருப்பம் தெரிவித்தார். அவரது திட்டபடி மாலை 5.00 மணிக்குச் சென்னை விமான நிலையம் வருவதாக இருந்ததால் சிரமமாக இருக்கும் என்று தவிர்த்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
தமிழகத்தில் இரண்டு நடிகர்கள் வருவதற்கு ஒப்புக்கொண்டு, கடைசி நேரத்தில் ஒரு நடிகர் ஷூட்டிங் இருப்பதால் வர முடியவில்லை என்று வருத்தப்பட்டுள்ளார். மற்றொரு நடிகர் வருவதாக இருந்ததாகவும் வர வேண்டாம் என்று பாமக தலைமை மறுத்துள்ளதாகவும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.
பாமக தொண்டர்கள் பாதுகாப்பாக வந்து செல்வதற்கு, மருத்துவ முகாம்கள், குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள், தலைவர்களின் கார்கள் சிரமமில்லாமல் மேடைக்கு வருவதற்குச் சிறப்பு வழிகள், பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பான இடம், இருக்கைகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: