செவ்வாய், 19 செப்டம்பர், 2017

கிருபா முனுசாமி : திராவிட மேடைகளில் ஏன் அம்பேத்கார் இடம்பெறுவதில்லை?

Kiruba Munusamy : அரசியல் என்ற ஒன்றை அறிந்து கொள்ள தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை ஒரு நிகழ்ச்சி விடாமல் அனைத்து கூட்டங்களிலும் தொடர்ந்து கேட்கப்படும் கேள்வியென்றால் அது "ஜாதி ஒழிப்பு மேடைகளில் அம்பேத்கர், பூலே, அயோத்திதாசர், ரெட்டமலை சீனிவாசன் ஆகியோரோடு பெரியார் இயல்பாக இருப்பதைப் போல, திராவிட இயக்க மேடைகளில் ஏன் அம்பேத்கர் இருப்பதில்லை?" என்பதுதான்.
ஆனால், அக்கேள்விக்கு எப்போதும் வழங்கப்படும் பதில் "வட இந்திய முற்போக்கு நிகழ்ச்சிகளில் பெரியார் படத்தை வைக்கிறார்களா?" என்ற எதிர்க்கேள்வியாகவே இருக்கிறது. இத்தகைய பதில் முற்போக்குவாதிகள், மாற்று சிந்தனையாளர்கள், திராவிட பற்றாளர்கள் ஆகியோரிடமிருந்தும் வருவது வருத்தமளிக்கிறது.
இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களிலும் பல அரசியல், ஜாதி ஒழிப்பு, அம்பேத்கர் இயக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்றும், பேசியும் இருக்கிறேன் என்ற வகையில் சொல்கிறேன், "பெரியார், அயோத்திதாசர், அய்யன்காளி" ஆகியோரின் பெயர்களை சொல்லாமல் எந்தவொரு நிகழ்ச்சியையும் ஆரம்பிக்கவோ, முடிக்கவோ மாட்டார்கள்.

தெலுங்கானா போராட்டங்கள் உட்பட ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதெராபாத் பல்கலைக்கழகம் என மாணவர் போராட்டங்கள் அனைத்திலும் இதனை நேரடியாகவே நான் பார்த்திருக்கிறேன்.
இவ்வளவு ஏன்? கடந்த 16-ஆம் தேதி தெலுங்கானா, வாரங்கலில் நடைபெற்ற கருத்தரங்கில் கூட மாணவர்கள் பலரும், என்னுடன் உரையாற்றிய வழக்கறிஞரும் பெரியாரை குறிப்பிட்டு பேசினர்.
ஆக, திராவிட மேடைகளில் அம்பேத்கர் தவிர்க்கப்படுவது பிராந்திய காரணத்தினால் என்று இனி எவரும் சொல்ல முடியாது. ஒரு வேளை, பெரியார் படத்தை மற்ற மாநிலத்தவர் வைப்பதில்லை என்று எண்ணிக்கொள்வது உண்மையான காரணமாக இருக்குமாயின், பெரியாரையும் அம்பேத்கரையும் வெறும் மாநிலத் தலைவர்களாக மட்டுமே கருதியிருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொண்டதாகிறது. அம்பேத்கரின் படத்தை பயன்படுத்த மாட்டோம் என்பதன் மூலம் நீங்கள் பெரியாரை தான் மாநிலத் தலைவராக சுருக்குகிறீர்கள் என்பதை அறிக.
என்னைப் பொறுத்தவரை, மார்ட்டின் லூதர் கிங்கை போல, நெல்சன் மண்டேலாவை போல, கோஃபி அனானை போல, அம்பேத்கரும்-பெரியாரும் இவ்வுலகில் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக போராடிய உலகத் தலைவர்களே!

கருத்துகள் இல்லை: