புதன், 11 அக்டோபர், 2017

உ.பியில் ரசாயனக் கசிவு ..300 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி .

ரசாயனக் கசிவு: குழந்தைகள் பாதிப்பு!மின்னம்பலம் : உ.பியில் சர்க்கரை ஆலையில் ரசாயனக் கசிவு ஏற்பட்டதால் 300 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லியில் சர்க்கரை ஆலை உள்ளது. நேற்று (அக்டோபர் 10) காலை ஆலையில் உள்ள வாயு எரிகலனில் இருந்து ரசாயனம் கசிந்தது. இந்த வாயுக்கசிவால் ஆலைக்கு அருகில் உள்ள சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியில் படிக்கும் சுமார் 300 மாணவ, மாணவியருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு வயிற்று வலி, மயக்கம் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனே அழைத்துச் செல்லப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் பெரும்பாலான மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும், 36 மாணவர்கள் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ரசாயனக் கசிவு விவகாரம் குறித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மருத்துவமனைகளில் குழந்தைகள் மரணம் தொடருகின்ற நிலையில் கோரக்பூர் மருத்துவமனையில் மட்டும் ஜனவரி முதல் இதுவரை அதிகாரபூர்வமாக 310 குழந்தைகள் இறந்துபோனது நினைவுகூரத்தக்கது.

கருத்துகள் இல்லை: