வெள்ளி, 13 அக்டோபர், 2017

BBC : பிகார் .. கருத்தடைக்கு போராடி வெற்றி பெற்ற நிர்மா தேவி

சரோஜ் சிங்.. : 200க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தடைகளைப்பற்றி பேசவும், பயன்படுத்தவும் ஊக்கமளித்துள்ளார் நிர்மா தேவி இந்தியாவில் கருத்தடை என்பது வெளிப்படையாக விவாதிக்க தயக்கம் காட்டப்படும் தலைப்பாக உள்ளது. இதுவே அதிக குழந்தை பிறப்புக்கும் காரணமாகிறது. இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றான, பீகாரில், பெண்களுக்கு சராசரியாக மூன்றுக்கு மேற்பட்ட மேல் குழந்தைகள் உள்ளன. ஆனால், அங்குள்ள ஒரு குக்கிராமத்தில், ஒரு பெண் இதை மாற்ற முயலுகிறார்.
"ஆமாம், நான் கருத்தடைகளை பயன்படுத்துகிறேன்" என்று கூறுகிறார், இரண்டு குழந்தைகளுக்கு தாயான, 29 வயதாகும் நிர்மா தேவி. "என் மாதவிடாய் காலங்களில், சிவப்பு மாத்திரையையும், பிற நாட்களில் கறுப்பு நிற மாத்திரையையும் பயன்படுத்துகிறேன். அதில் பக்கவிளைவுகள் இல்லை என்று எனக்கு தெரியும்."

பீகாரின், கயா மாவட்டத்தில் உள்ள பாராசட்டி கிராமத்து பெண்ணிடம் இருந்து வரும் இந்த வார்த்தைகள் வருவது உணர்ச்சிமயமானது.
11 ஆண்டுகளுக்கு முன்பு, நிர்மாவிற்கு திருமணம் ஆன சமயத்தில் திருமணமான பெண்களுடனோ, கணவர் வீட்டாருடனோ கருத்தடை பற்றிப் பேச முயன்றால் அது கண்டிக்கப்படும்.
ஆண், பெண் இடையே கருத்தடை குறித்த திறந்த விவாதம் என்பது இங்கு ஏற்புடையதல்ல. பெண்கள் கூட, இதை மூடிய கதவுகளுக்கு பின்னால் தான் பேச முடியும்.
இதனால் தான், பீகார் மாநிலத்தில் கருவுறுதல் விகிதம் மிக அதிகமாக உள்ளது.
இந்தியாவின் தேசிய குடும்பநல ஆய்வின் சமீபத்திய முடிவின்படி, பெண்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளின் சராசரியான எண்ணிக்கை, தேசிய அளவில் இரண்டாகவும், பீகாரில் மூன்றாகவும் உள்ளது.
கருத்தடைகள் குறைவாகப் பயன்படுத்தப்படும் நாடுகளில், கருவுறுதல் விகிதம் அதிகமாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.< ஒரு தேனீர் சந்திப்பில் உட்கார்ந்து பேசுவதற்கு தடையான தலைப்பாக மட்டுமில்லாமல், தனிப்பட்ட முறையில் கூட பீகார் தம்பதிகள் கருத்தடைப்பற்றி பேச தயங்குகின்றனர்.
ஆனால், நிர்மா தேவி ஒரு விதிவிலக்கு.
அவர், தனது குடும்பத்தை திட்டமிட, தற்காலிக கருத்தடை முறையை தாமே பயன்படுத்தியது மட்டுமில்லாமல், அவரின் கிராமத்தில் உள்ள கிட்டத்தட்ட 200 பெண்களையும் இதை செய்ய ஊக்குவித்துள்ளார்.
`மேன் குச் பீ கர் சக்தி ஹூன்` ( பெண்ணாக என்னால் எதையும் சாதிக்க முடியும்) என்ற ஒரு தொலைக்காட்சித் தொடரின் மூலம் தாம் ஊக்குவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இத தொடரில், மும்பையை சேர்ந்த பெண் மருத்துவர் ஸ்நேகா, பாலியல் சுகாதாரம், கருத்தடை போன்ற வெளிப்படையாக விவாதிப்பதில் தயக்கம் காட்டப்படும் தலைப்புகள் குறித்து கிராமப்புற பெண்களுக்கு அறிவூட்ட விரும்புபவராக, கதை வருகிறது.
அந்த நிகழ்ச்சியை பார்த்து ஊக்கம் பெற்ற நிர்மா, நிஜ வாழ்க்கையில், ஸ்நேகாவை போல இருக்க விரும்பினார்."அத் தொடரின் ஒரு பாகத்தில், ஒரு பெண் தனது நான்காவது குழந்தையை பெற்றெடுக்கும் போது, மருத்துவமனை கட்டிலிலேயே இறந்து போவதை பார்த்தேன்.
அவள் மூன்று ஆண்டுகளில் , மூன்று குழந்தையை பெற்றிருந்தாள். நிச்சயமாக அவளின் உடல் நான்காவது குழந்தைக்கு தயாராக இல்லை."
இந்த பாகம், நிர்மாவை தனது சொந்த இயக்கத்தைத் துவங்க ஊக்கமளித்தது. அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று கருத்தடை பிரசாரம் செய்வதற்கு, தனது கிராமத்தை சேர்ந்த 20 பெண்களை கொண்டு, ஓர் அமைப்பை உருவாக்கினார்.
கடந்த ஆண்டு வெளியான உலக சுகாதார அமைப்பின் அறிக்கை, இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு ஐந்து பெண்கள் பிரசவத்தின் போது இறப்பதாக தெரிவிக்கிறது. இதற்கு முக்கிய காரணம், பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கு. தான் கருவுறும் காலத்தை முடிவு செய்துகொள்ள முடியாத, குழந்தைகளுக்கு இடையே இடைவேளை உருவாக்கி கொள்ள முடியாத நிலையில் பெண்கள் இருக்கும் ஒரு சமூகத்தில், இத்தகைய சிக்கல்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.e>இந்தியாவில், பொதுவான கருத்தடை முறை என்றாலே, பெண்களுக்கான குடும்ப கட்டுபாடு தான்.
குடும்பக் கட்டுபாடு என்பதில் பெண்களே முழுப் பொறுப்பையும் எடுத்துகொள்ள வேண்டும் என கருதப்படுகிறது, ஆண்கள் மிக அரிதாகவே பங்களிக்கின்றனர்.
தற்காலிக முறைகளான மாத்திரைகள் மற்றும் ஆணுறைகள் பிரபலம் இல்லாமல் இருப்பதால், கிராமப்புற பெண்களுக்கு இரு குழந்தைகளுக்கு இடையேயான வயது இடைவேளை என்பது மிகவும் கடினமாகிறது.
நிர்மாவிற்கு 10 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மூன்று ஆண்டுகள் வயது வித்தியாசத்துடன். இதற்கு காரணம், உள்ளூர் சுகாதாரத்துறை பணியாளர் பூணமின் அறிவுரையே என்கிறார் அவர்.
இந்திய அரசின், தேசிய கிராமபுற சுகாதார திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும், சமூக சுகாதார செயல்பாட்டாளர் குழுவில் ஒருவர் தான் பூணம்.
நிர்மாவிடம் கருத்தடைகளின் பயன்பாடு குறித்து முதன்முதலில் இவரே பேசினார்.
அவரின் உதவி இருந்த போதிலும், கருத்தடையைப் பயன்படுத்துவது நிர்மாவிற்கு சுலபமானதாக இல்லை."நான் என் கணவரிடம், கருத்தடை மாத்திரைகளை வாங்கித்தாருங்கள் என்றவுடன், அவர் அப்பட்டமாக மறுத்தார். பின்பு, நான் எப்படி வாங்குவது? கிராமத்தில் உள்ள மற்ற ஆண்கள் என்ன சொல்லுவார்கள்?" என்றார்.
பலமுறை தொடர் விளக்கங்களுக்கு பிறகே, அவரின் கணவர் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு நிர்மாவை அழைத்து சென்றார். அங்கு அவரால், கருத்தடை மாத்திரைகளை இலவசமாக பெற முடியும்.
அதேபோல, அவரால் தனது கிராமத்தில் உள்ள பிற பெண்களையும் இதற்காக சமாதானப்படுத்த முடிந்தது.
இது மலையின் முகட்டை நோக்கிய ஒரு போராட்டம், ஆனால், நிர்மா மிகவும் உறுதியான ஒரு ஆரம்பத்தை செய்துள்ளார்.
தனது குழந்தைகளுக்கு இது குறித்த கல்வியை அளிப்பதன் மூலம், அடுத்த தலைமுறையினரிடையே, கருத்தடை குறித்த திறந்த பேச்சுவார்த்தை இருக்கும் என நிர்மா நம்புகிறார்.
மேலும், அவர், ஆண்களும் தங்களுக்கான பொறுப்பை பகிர்ந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்.

கருத்துகள் இல்லை: